அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியா வருகிறாரா?
அதிபராக பதவியேற்று டிரம்ப் ஒருமுறை கூட இந்தியா வரவில்லை.
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வருகைத் தர உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி மாத இறுதியில் டிரம்ப் இந்தியா வருவதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 7ஆம் தேதி தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, டிரம்பை இந்தியா வர அழைப்பு விடுத்ததை அடுத்து, பிரதமரின் அழைப்பை ஏற்று டிரம்ப் இந்தியா வருகிறார் என்று தெரிகிறது. அவரது இந்திய வருகைக்கான தேதி குறித்து, இருநாடுகளின் அதிகாரிகள், ஆலோசனை நடத்துவதாகவும் சொல்லப்படுகிறது.
கடந்தாண்டு குடியரசுத் தின விழாவில் பங்கேற்க, அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்புக்கு, பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், தொடர் நிகழ்ச்சிகளால், அமெரிக்க அதிபரால் அப்போது பங்கேற்க இயலவில்லை என வெள்ளை மாளிகை, பின்னர் கூறியது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பை பதவியிலிருந்து நீக்கக் கோரும் தீர்மானம், விரைவில், செனட் சபையில் தாக்கலாகி, வாக்கெடுப்புக்கு வர உள்ள நிலையில், அவரது இந்திய பயணம் குறித்த திட்டமிடல் பற்றி தகவல் வெளியாகியிருக்கிறது.
தாம் அதிபராக பதவியேற்று டிரம்ப் ஒருமுறை கூட இந்தியா வரவில்லை என்கிற நிலையில் தற்போது நடைப்பெற உள்ள இந்த வருகை பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹவுஸ்டன் நகருக்கு பிரதமர் மோடி சென்றிருந்தார். டெக்சாஸில் நடைப்பெற்ற ஹவுதி மோடி நிகழ்ச்சியில் பங்கேற்று அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் உரை ஆற்றினார். அதன் பின் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை சந்தித்து இருதரப்பு நாடுகளின் உறவுகளை மேம்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.