உசைன் போல்ட்-ன் உலக சாதனையை அசால்ட்டாக உடைத்த கிராமத்து இளைஞர்!
கிராமத்து விளையாட்டான எருது விடும் போட்டியில் உசைன் போல்ட்டின் உலக சாதனையை உடைத்தெறிந்தார் இந்த இளைஞர். இவர் 100 மீட்டரை எத்தனை நொடிகளில் கடந்தார் தெரியுமா?
ஒலிம்பிக்கில் உலக நாடுகள் எல்லாம் பதக்கங்களை நூற்றுக்கணக்கில் அள்ளிச் செல்லும்போது, இந்தியா மட்டும் பதக்கங்களை விரல் விட்டு எண்ணிக் கொண்டிருப்பதை பார்க்கும்போது, வேதனையில் இதயமே வெடித்துவிடும் போல இருக்கும். உலகின் மிகப் பெரிய இரண்டாவது மக்கள் வளத்தையும், இளைஞர் சக்தியையும் உடைய இந்தியாவால் ஏன் உலக அரங்கில் விளையாட்டுப் போட்டிகளில் ஜொலிக்க முடியாமல் போகிறது.
நம்மாலும் உலக அளவில் ஜொலிக்க முடியும். உலகையே ஜெயிக்கும் இளைஞர் வளமும், அளவில்லா ஆற்றலும் நம் தேசத்தில் ஆங்காங்கே ஒளிந்து கொண்டிருக்கிறது. இவர்களை நாம் சரியாக அடையாளம் கண்டுகொண்டாலே போதும், நம்மை வெல்ல இந்த தரணியில் யாரும் இல்லை என்பதை மெய்ப்பிக்கும் விதமான ஓர் நிகழ்வு சமீபத்தில் கர்நாடகாவில் நிகழ்ந்துள்ளது.
கர்நாடக மாநிலம், மூடாபித்ரி எனும் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீனிவாச கௌடா (28) என்ற இளைஞர் கிராமத்து விளையாட்டான எருது விடும் போட்டியில் உசைன் போல்ட்டின் உலக சாதனையை அசால்ட்டாக உடைத்தெறிந்துவிட்டார். இவரின் வேகத்தை கணக்கிட்டு, கதிகலங்கிப் போன விளையாட்டு ஆர்வலர்களும், இணையவாசிகளும் இவரை ஒரே நாளில் சமூக ஊடகங்களில் உலக அளவில் வைரலாக்கி விட்டனர்.
கம்பாலா என்றழைக்கப்படும் எருமை மாடு பந்தயம் நம் தமிழ்நாட்டில் விளையாடப்படும் மஞ்டுவிரட்டு, ஜல்லிக்கட்டு போல கர்நாடக மாநிலத்தில் மிகப் பிரபலம். இது உடுப்பி மற்றும் மங்களூர் பகுதிகளில் உள்ள சேறும், சகதியுமான விவசாய நிலங்களில் ஆண்டுதோறும் நடத்தப்படும் பாரம்பரியமான எருமை பந்தயம் ஆகும். இது அப்பகுதி இளைஞர்களின் வீரத்தை பறைசாற்றும் விளையாட்டாக காலங்காலமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த கம்பாலா விளையாட்டில் பங்கேற்ற ஸ்ரீனிவாச கௌடா, சகதிக்காடான வயல்காட்டில் 142.50 மீட்டர் தூரத்தை 13.62 வினாடிகளில் அசுரவேகத்தில் ஓடிக் கடந்து சாதனை புரிந்து இருக்கிறார். இது உசைன் போல்ட்டின் 100 மீட்டர் உலக சாதனையை விட அதிக வேகம் என்கின்றனர் விளையாட்டு ஆர்வலர்கள்.
ஜமைக்காவைச் சேர்ந்த உசைன் போல்ட் மின்னல் வீரர் என உலகப் புகழ் பெற்ற தடகள வீரர் ஆவார். இவர், 2009ல் பெர்லினில் நடைபெற்ற உலக தடகளத்தில் 100 மீட்டர் ஓட்டத்தை 9.58 வினாடிகளில் கடந்து உலக சாதனை படைத்தார். தற்போது நடைபெற்ற கம்பாலாவில் ஸ்ரீனிவாச கௌடாவின் வேகத்தை உசைன் போல்ட்டின் வேகத்துடன் ஓப்பிட்டு பார்க்கும்போது, ஸ்ரீனிவாச கௌடா 142.50 மீட்டரை 13.62 வினாடிகளில் கடந்துள்ளார். 142.5 மீட்டரில் அவர் ஓடியதை 100 மீட்டர் தூரத்துக்கு கணக்கிட்டு பார்க்கும்போது அவர் அந்த தூரத்தை 9.55 வினாடிகளில் கடந்துள்ளார்.
100 மீட்டர் தூரத்தை 9.55 வினாடிகளில், அதிலும் சேறும், சகதியுமான கடினமான களத்தில் ஓடி இந்த அசுர சாதனையை புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முறையாக பல ஆண்டுகாலம் கடும் பயிற்சி பெற்ற உசைன் போல்ட் ஓட்டப் பந்தயக் களத்தில் சாதனை செய்தது பெரிதல்ல. எவ்வித பயிற்சியும் இல்லாத ஸ்ரீனிவாச கௌடா என்ற இந்த கிராமத்து இளைஞர் சேறும், சகதியுமான விவசாய நிலத்தில் ஓடி போல்ட்டின் சாதனையை முறியடித்தது அசாத்தியமான சாதனை என ஓர் சாரார் புகழ்ந்து வரும் அதேவேளையில் மற்றொரு தரப்பினரோ, எருமை மாடு பந்தயத்தில் அந்த இளைஞரை எருமைகளே இவ்வளவு வேகமாக இழுத்து சென்றன என்று விமர்சிக்கவும் செய்கின்றனர். எது எப்படியோ, சாதனை நிகழ்த்தப்பட்டிருப்பது உண்மைதானே.
ஸ்ரீனிவாச கௌடாவின் இந்த சாதனை வீடியோ ஒரே நாளில் வைரலானாது. இதனால் பல்வேறு தரப்பில் இருந்தும் அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் அவருக்கு முறையாக பயிற்சி அளித்து அவரை தலைச்சிறந்த ஓட்டப்பந்தய வீரராக மாற்றி நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் போட்டியிட வைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என ஓர் சாரார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவில் இன்னும் இப்படி எத்தனை வைரங்கள் மண்ணுக்குள் புதைந்து கிடைக்கின்றனவோ, அவற்றை எடுத்து முறையாக பட்டை தீட்டினால் அவை உலக அளவில் ஒளி வீசி ஜொலிக்கும். பிறகென்ன நாமும் ஒலிம்பிக்கில் பதக்கங்களை அள்ளிக் கொண்டு வரலாம் என்பதில் சந்தேகமில்லை.