விவசாயிகளின் சந்தேகங்களை தீர்த்து, வழிகாட்டும் 'Outgrow’ ஆப் அறிமுகம் செய்துள்ளது Waycool Foods!
விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இலவச செயலி இது. இதில் வானிலை, விலை நிலவரங்கள், பயிர் பாதுகாப்பு ஆலோசனை உள்ளிட்டவற்றை பெற்றுக்கொள்ள முடியும்.
விவசாயப் பிரிவில் செயல்பட்டு வரும் முக்கியமான நிறுவனம் ‘Waycool foods.' விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில் கடந்த வாரம் 'Outgrow' என்னும் செயலியை அறிமுகம் செய்துள்ளது இந்த நிறுவனத்தின் விவசாய ஆராய்ச்சி மையம் ஓசூரில் செயல்பட்டுவருகிறது. அங்கு இந்த செயலியின் அறிமுகம் நடைப்பெற்றது.
கடந்த சில மாதங்களாக சோதனை அடிப்படையில் செயல்பட்டுவந்த இந்த ஆப் தற்போது முழுமையாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இதுவரை, 3000க்கும் மேற்பட்ட விவசாயிகள் சோதனையில் இதைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அதன் வெற்றியை தொடர்ந்து தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
அவுட்குரோ ஆப் (Outgrow App)
50 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் உணவுப்பஞ்சம் இருந்தது. ஆனால், தற்போது உணவு உற்பத்தியில் (Supply) பிரச்சினையில்லை. அதனை மக்களிடைய கொண்டு சேர்ப்பதில் (Supply Chain) தான் பிரச்சினை இருக்கிறது. இந்த சிக்கலை களைவதற்காக தொடங்கப்பட்டதுதான் ’வேகூல் ஃபூட்ஸ்.’
இந்த நிறுவனம் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களிடம் இருந்து பொருட்களை வாங்கி இந்தியாவில் பல மாநிலங்களில் விற்பனை செய்துவந்தது. அப்போது விவசாயிகளுக்கு இருக்கும் பல சிக்கல்கள் எங்களுக்குப் புரிந்தன.
“ஒரு தொழில்நுட்ப நிறுவனமாக எங்களால் விவசாயிகளின் சந்தேகத்தை தீர்க்க முடியும். இது விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் பயன் அளிக்கும் வகையில் இருக்கும் என்பதற்காகதான் இந்த செயலியை உருவாக்கினோம்,” என நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் கார்த்திக் ஜெயராமன் தெரிவித்தார்.
சேவைகள் என்ன?
விவசாயிகளுக்கு என்ன செய்கிறோம் என்பது தெரியுமே, விவசாயிகளுக்கு இந்த செயலி எந்தவகையில் பயனுள்ளதாக இருக்கும் என்று கேட்டதற்கு விரிவான பதில் அளித்தார்.
“விவசாயம் எப்படி செய்வது என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனால், அதனை மேலும் லாபகரமான வகையில் எப்படி செய்வது என்பதற்கு எங்களுடைய ஆப் பயனுள்ளதாக இருக்கும். இந்த செயலி காரணமாக விவசாயிகளின் நேரம் பலமடங்கு மீதமாகிறது,” என்றார் கார்த்திக்.
விவசாயத்தின் முக்கியமான சிக்கல் விலைதான். உற்பத்தி செய்யும் பொருளுக்கு சந்தை விலை எவ்வளவு என்பது அவர்களுக்குத் தெரியாது. அதனால் முக்கியமான மண்டி விலை நிலவரங்களை எங்களுடைய செயலி மூலம் பார்த்துக்கொள்ள முடியும்.
விலை நிலவரங்கள், விலையில் உள்ள ஏற்ற இறக்கங்களை புரிந்துகொள்வதன் மூலம் அதற்கேற்ற பயிர்களை விவசாயம் செய்ய முடியும். உதாரணத்துக்கு தக்காளியின் சில்லரை விலை தற்போது 20ரூபாய்க்கும் கீழ் இருக்கிறது. ஆனால், ஜூன் ஜூலை மீண்டும் உயர வாய்ப்பு இருக்கிறது. இதுபோன்ற அனலிடிக்ஸ்களை எங்களுடைய செயலியில் பார்க்க முடியும்.
அதேபோல, உங்களது மண்ணை சோதனை செய்து அந்த மண்ணில் எந்த பொருள் நன்றாக விளையும், எந்த முறையில் அதனை பயன்படுத்துவது என்பது உள்ளிட்ட அறிவுறைகளை நாங்க வழங்குவோம். உங்கள் இடத்துக்கு அருகே எங்கு மண் பரிசோதனை நிலையம் இருக்கிறது என்பது உள்ளிட்ட தகவல்களையும் தருகிறோம்.
இதுதவிர விவசாயத்தின் மற்றொரு முக்கியமானப் பிரச்சினை பயிர்களை நோய் தாக்குதல்.
”உங்கள் வயல் அல்லது இடத்தில் உள்ள செடிகளை போட்டோ எடுத்து எங்களுக்கு அனுப்பினால் அது எந்தவகையான நோய், அதற்கு எந்தவகையான தீர்வு என்பது உள்ளிட்ட தகவல்களை நாங்கள் வழங்குவோம். 100க்கும் மேற்பட்ட பயிர்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட நோய்களுக்களுக்கான தகவல்களை வைத்திருக்கிறோம்.”
எங்களுடைய செயலி ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல் பிராந்திய மொழிகளிலும் செயல்படும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் செயலி இருக்கும். எங்களுடைய கஸ்டமர்கேர் மூலமாகவும் விவசாயிகள் தொடர்புகொண்டு சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள முடியும். எழுத்து மூலமாகவும் சந்தேகங்களை தீர்த்துகொள்ள முடியும்.
ஓசூரில் 4 ஏக்கரில் ஆராய்ச்சி மையம் அமைத்திருக்கிறோம். இங்கு ஒவ்வொரு செடி மற்றும் பூக்களை எப்படி பயிர் செய்கிறோம், குறைவான இடத்தை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை சோதனை செய்கிறோம். விவசாயிகள் இங்கு வந்து எங்களது நடைமுறையை கற்றுக்கொள்ளலாம். இந்த செயலி மூலம் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த முடியும் என கருதுகிறோம், என விரிவாக விளக்கினார் கார்த்திக்.
சமீபத்தில் ‘கிராம்வொர்க்ஸ்’ என்னும் நிறுவனத்தை வேகூல் வாங்கி இருக்கிறது. வானிலை நிலவரங்களை இந்த நிறுவனம் தருகிறது. விவசாயத்தை பொறுத்தவரை விலைக்கு அடுத்து முக்கியமான சிக்கல் வானிலைதான். மகசூலில் மண்ணின் தன்மைக்கு அடுத்து வானிலை முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த நிறுவனம் மூலம் குறிப்பிட்ட இடத்தில் உள்ள வானிலைக்கு எந்த பயிர் ஏற்றது என்னும் ஆலோசனையையும் நாங்கள் வழங்குகிறோம் என கார்த்திக் ஜெயராமன் கூறினார்.
அடுத்து என்ன?
இப்போதைக்கு 85000 விவசாயிகளிடம் நேரடியாக எங்கள் நெட்வொர்க்கில் இருக்கிறார்கள். இன்னும் சில ஆண்டுக்குள் பல லட்சம் விவசாயிகளை எங்களுடன் இணைக்க வேண்டும் என்பதுதான் திட்டம். அதன் தொடர்ச்சியாக ’அவுட்குரோ’ செயலியில் மேலும் சில சேவைகளை கொண்டுவர திட்டமிட்டிருக்கிறோம். விவசாயம் சார்ந்த மேலும் சில சேவைகளையும் அவுட்குரோ செயலியில் இணைக்க இருக்கிறார்கள்.
விவசாயிகள், விவசாயம் செய்தால் மட்டுமே போதும். மீதமுள்ள பணிகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்பதுதான் நோக்கம். விதைகள் வாங்குவது, விவசாயத்துக்கு தேவையான கடன் வழங்குவதையும் இந்த செயலியில் அடுத்த கட்ட சேவைகளாக கொண்டுவரும் திட்டத்தில் இருக்கிறோம்.
இதற்காக விதை நிறுவனங்கள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். விரைவில் இந்த சேவைகளையும் இணைக்க இருக்கிறோம் என கார்த்திக் கூறினார்.
சீரிஸ் டி முதலீடு
’வே கூல் ஃபூட்ஸ்’ நிறுவனம் சில வாரங்களுக்கு முன்பு சிரீஸ் டி முதலீட்டை முழுமையாக பெற்றது. சிரீஸ் டி மூலம் மொத்தமாக 117 மில்லியன் டாலர் திரட்டியது. மொத்த முதலீட்டில் 80 சதவீதம் பங்குகளாகவும், 20 சதவீதம் கடனாகவும் பெற்றிருக்கிறது. லைட் ராக், லைட் பாக்ஸ் உள்ளிட்ட பல முதலீட்டு நிறுவனங்கள் முதலீடு செய்திருக்கின்றன.