விவசாயிகள் பண்ணைகளுக்கு அருகே பதப்படுத்தும் வசதி அமைத்து லாபம் ஈட்ட உதவும் நிறுவனம்!
ஹைதராபாத்தைச் சேர்ந்த Our Food ஸ்டார்ட் அப் தொழில்நுட்பத்தின் உதவியுடன் மையப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை பதப்படுத்தும் செயல்பாடுகளை செய்து தந்து விவசாயிகள்
விவசாயத் துறையைப் பொருத்தவரை மையப்படுத்தப்பட்ட பதப்படுத்தும் தொழிற்சாலைகளால் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதில், ஒரு சில பிரச்சனைகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன. அதிகளவிலான மூலப்பொருட்கள் தேவைப்படுவதும் வாங்கும் விலை அதிகமாக இருப்பதும் முக்கிய சவாலாக சுட்டிக்காட்டலாம்.
இதற்கு முக்கியக் காரணம் யூனிட்கள் பெரும்பாலும் இடைத்தரகர்கள், சிறு விற்பனையாளர்கள், கிராமத்தில் உள்ள சேகரிப்பாளர்கள் போன்றோரையே சார்ந்திருக்கின்றன.
”சீசன் இல்லாத சமயத்தில் போதிய விநியோகம் இருக்காது. இந்த நேரங்களில் சவால் மேலும் அதிகம்,” என்கிறார் Our Food நிறுவனர் மற்றும் சிஇஓ பாலா ரெட்டி.
ஹைதராபாத்தைச் சேர்ந்த Our Food ஸ்டார்ட் அப் 2016ம் ஆண்டு தொடங்கப்பட்டது. விவசாயத் தொழில்முனைவோர்களுக்கு முழுமையான தீர்வளிப்பதே இந்த ஸ்டார்ட் அப் தொடங்கப்பட்டதன் நோக்கம்.
பதப்படுத்தும் மைக்ரோ யூனிட் அமைப்பது, கடன் பெற உதவுவது, பிராசஸ் செய்யப்பட்ட பொருட்களை நல்ல விலையில் விற்பனை செய்வதற்கான சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளில் விவசாயிகளின் ஃப்ரான்சைஸ் மற்றும் விவசாயிகளுக்குப் பயிற்சியளிப்பது உள்ளிட்ட தீர்வுகள் இதில் அடங்கும்.
“பண்ணையில் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்க 7 லட்ச ரூபாய் வரை செலவாகும். ஷெட் கட்டுமானத்திற்காக விவசாயி 3 லட்ச ரூபாய் முதலீடு செய்யவேண்டியிருக்கும். மீதமிருக்கும் தொகையை NBFC-க்கள் மூலம் பெற நாங்கள் உதவுகிறோம்,” என்கிறார் பாலா.
2016-ம் ஆண்டு T-Hub நிறுவனத்தில் இன்குபேட் செய்யப்பட்ட இந்த ஸ்டார்ட் அப் நாஸ்காம் 10K ஸ்டார்ட் அப் திட்டத்திற்கு தேர்வாகியுள்ளது.
ஸ்டார்ட் அப் பயணம்
பயன்பாட்டில் உள்ள உணவுப் பதப்படுத்தும் தொழில்நுட்பம் குறித்துப் புரிந்துகொள்ள Our Food பல்வேறு வேளாண் பல்கலைக்கழகங்களை அணுகியது. உணவுப் பதப்படுத்தும் இயந்திரம் தயாரிக்கும் நிறுவனங்களுடன் இணைந்து குறைந்த விலை மைக்ரோ-பிராசசிங் யூனிட்களை உருவாக்கியது. பண்ணையில் எளிதாக அமைக்கக்கூடிய வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.
“எங்கள் முயற்சியின் மூலம் நாட்டின் உணவுப் பதப்படுத்தும் துறை பரவலாக்கப்படுவதுடன் விவசாயிகளின் வருவாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்,” என்கிறார் பாலா.
இந்த நிறுவனம் படித்த, வேலை இல்லாத கிராமப்புற விவசாயிகளைக் கண்டறிகிறது. இவர்கள் 20-35 வயதுடையவர்களாகவும் குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு படித்தவர்களாகவும் ஒரு ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்களாகவும் இருப்பது உறுதிசெய்யப்படுகிறது.
இந்த கிராமப்புற தொழில்முனைவோர் ஷெட் உருவாக்கி (விவசாயிகளின் ஃப்ரான்சைஸ்), விநியோகித்து, குறைந்த விலையில் உணவைப் பதப்படுத்தும் இயந்திரங்களை நிறுவுவார்கள். அத்துடன் விவசாயிகளின் ஃப்ரான்சைஸிடமிருந்து பதப்படுத்தப்பட்ட விளைச்சலை நேரடியாக வாங்கி, விலையில் 10 சதவீத லாபத்துடன் பல்வேறு விதங்களில் விற்பனை செய்கின்றனர்.
“பண்ணையில் மேற்கொள்ளப்படும் மதிப்பு கூட்டல் செயல்பாடுகள் மூலமாகவும் சந்தை இணைப்பு மூலமாகவும் தொழில்முனைவர்களாக இருக்கும் விவசாயிகள் 15,000-25,000 ரூபாய் வரை மாத வருவாய் ஈட்டமுடியும்,” என்கிறார் பாலா.
இதுவரை 1,700 கிராமப்புற தொழில்முனைவோர் Our Food விவசாயி ஃப்ரான்சைஸ் உரிமம் பெற்றுள்ளனர். ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட பயிரைத் தேர்வு செய்து பிராசஸ் செய்கின்றனர். அருகிலிருக்கும் கிராமங்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளிடமிருந்து மூலப்பொருட்கள் பெறப்பட்டு பிராசஸ் செய்யப்படுகின்றன.
ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா உட்பட 13 மாநிலங்களில் இந்த ஸ்டார்ட் அப் செயல்படுகிறது. பருப்பு, தானியங்கள், மசாலாக்கள், வேர்கடலை என 15க்கும் மேற்பட்ட பயிர்களுக்கான பிராசஸிங் யூனிட் உள்ளன. இவற்றை மேலும் விரிவுப்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
தனித்துவமான அம்சங்களும் சமூக தாக்கமும்
உணவுப் பொருட்கள் நேரடியாக விவசாயிகள் ஃப்ரான்சைஸ் மூலம் பெறப்படுகிறது. விவசாயிகள் நேரடியாகத் தெரிந்துகொள்ளும் வகையில் செயற்கை நுண்ணறிவு, பிளாக்செயின் போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
எந்தவித செயற்கைப்பொருட்களும் சேர்க்கப்படாமல் தரமான தயாரிப்புகள் வழங்குவதாக இந்நிறுவனம் தெரிவிக்கிறது. விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகவேண்டும் என்கிற அரசாங்கத்தின் நோக்கத்திற்கு இந்நிறுவனம் ஆதரவளிக்கிறது. விவசாயிகளின் விளைச்சலுக்கு நியாயமான விலை கிடைக்க வழி செய்கிறது.
விவசாயிகள் தொழில்முனைவோர்களாக மாற Our Food சக்தியளிக்கிறது. இந்த செயல்முறையில் விளைபொருட்களின் மதிப்பைக் கூட்டுகிறது.
“அறுவடையின்போது இழப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறோம், விவசாயிகளின் ஃப்ரான்சைஸ் யூனிட்கள் மூலம் கிராம அளவில் வேலை வாய்ப்பு உருவாக்குகிறோம், கிராமங்களில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துகிறோம். பிராசசிங் கட்டமைப்பு உருவாக்கி கிராமத்தை மேம்படுத்துகிறோம்,” என்கிறார் பாலா.
இந்த ஸ்டார்ட் அப் பெண்களின் திறனை மேம்படுத்தி வருவாய் ஈட்ட உதவுகிறது.
குழு
பாலா ஐஐஎம் அகமதாபாத்தில் மேலாண்மை பட்டப்படிப்பு முடித்துள்ளார். விவசாய வணிக மேலாண்மை பிரிவைத் தேர்வு செய்துள்ளார். கட்டமைப்புப் பிரிவில் அனுபவமிக்கவர். இதுதவிர புதுப்பிக்கத்தக்க ஆற்றல், நிதி, மென்பொருள் டெவலப்மெட் பிரிவு போன்றவற்றில் பணியாற்றியுள்ளார்.
தற்போது இந்த ஸ்டார்ட் அப் 350 ஊழியர்கள் கொண்ட குழுவாக செயல்பட்டு வருகிறது.
நிதி மற்றும் வருவாய்
2022ம் ஆண்டு ஜனவரி மாதம் Our Food 6 மில்லியன் டாலர் சீரிஸ் ஏ நிதி திரட்டியுள்ளது. தற்போதுள்ள முதலீட்டாளர் 3Lines Venture Capital மற்றும் புதிய முதலீட்டாளர் C4D Asia Fund தலைமையில் இந்த நிதிச்சுற்று ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிறுவனம் அதன் திறனை அதிகரித்து செயல்பாடுகளை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.
பதப்படுத்தும் தயாரிப்புகளை விற்பனை செய்வது, மைக்ரோ பிராசசிங் யூனிட்களைத் தயாரித்து விவசாயிகளின் ஃப்ரான்சைஸ்களுக்கு விற்பனை செய்வது, விவசாயிகளின் ஃப்ரான்சைஸ் மூலமாக விவசாயிகளுக்கு வேளாண் உள்ளீடுகளையும் சேவைகளையும் வழங்குவது என மூன்று விதங்களில் இந்நிறுவனம் வருவாய் ஈட்டுகிறது.
2020-2021 நிதியாண்டில் இந்த ஸ்டார்ட் அப்பின் மொத்த வருவாய் 80.9 கோடி ரூபாய். நிகர லாபம் 2.25 கோடி ரூபாய். 2021-2022 நிதியாண்டின் முதல் அரையாண்டில் 173 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ள நிலையில் 2021-2022 நிதியாண்டில் 400 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சவால்கள்
ஆரம்பத்தில் விவசாயிகளுக்கு இந்த வணிக மாதிரியில் நம்பிக்கை ஏற்படவில்லை. இதற்கு முன்பு உணவு பதப்படுத்தும் செயல்பாடுகளை யாரும் பரவலாக்கவில்லை என்பதே இதற்குக் காரணம். தொழில்முனைவோர் ஆகமுடியும் என்கிற விஷயம் அவர்களைக் கவர்ந்தாலும் அது சாத்தியமா என்கிற கேள்வி அவர்களுக்குள் இருந்தது.
அடுத்ததாக விவசாயிகளிடம் முதலீடு செய்ய பணம் இல்லை. இது புதிய வணிக மாதிரி என்பதால் ஆரம்பத்தில் வங்கிகளும் கடன் வழங்க முன்வரவில்லை. நிதி நிறுவனங்களுடனும் அரசு ஏஜென்சிகளுடனும் பேசி இந்தப் பிரச்சனைக்கு பாலா தீர்வு கண்டார்.
பிராசசிங் இயந்திரத்தில் பல மாறுதல்களைப் புகுத்தி, பரிசோதனை செய்து, வளர்ச்சியடைய சாத்தியக்கூறு உள்ள ஒரு இயந்திரத்தை இறுதியாக முடிவு செய்தார் பாலா.
வருங்காலத் திட்டங்கள்
இந்திய உணவு மற்றும் மளிகை சில்லறை வர்த்தக சந்தை 2025ம் ஆண்டில் 1 ட்ரில்லியன் டாலர் மதிப்பை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. Our Food இந்தியாவில் 27-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் 20,000-க்கும் அதிகமான விவசாயிகள் ஃப்ரான்சைஸ்களுடன் இணைந்து நெட்வொர்க் உருவாக்க திட்டமிட்டுள்ளது.
உள்ளூர் விநியோக மையங்கள் அமைக்கவும் இந்த ஸ்டார்ட் அப் திட்டமிட்டிருக்கிறது. தொழில்நுட்பத் திறனை வலுப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.
“காப்பீடு, பல்வேறு நிதி சேவைகள் போன்றவற்றை ஒருங்கிணைக்க விரும்புகிறோம். தொழில்நுட்பம் சார்ந்த கண்டறியும் செயல்பாடுகளை உருவாக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறோம்,” என்கிறார் பாலா.
மதிப்பு கூட்டப்படும் பொருட்கள் மூலம் கூடுதல் வருவாய் ஈட்ட Our Food விரும்புகிறது.
இந்த ஸ்டார்ட் அப் டெலிவரி சானலாக செயல்படுமே தவிர விவசாயிகளுக்கு நேரடியாக விற்பனை செய்ய இந்நிறுவனம் பொறுப்பேற்பதில்லை.
”மாவு, கடலைமாவு, கடலைப்பருப்பு, மிளகாய், மஞ்சள், வேர்கடலை என 20 பயிர்களுக்கு குறைந்த விலை இயந்திரங்களை நாங்கள் வடிவமைக்கிறோம். ஐரோப்பா, மத்தியகிழக்கு ஆகிய பகுதிகளுக்கு வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டிருக்கிறோம். அதேபோல் ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா போன்ற நாடுகளுக்கு குறைந்த விலை இயந்திரங்களை ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டிருக்கிறோம்,” என்கிறார் பாலா.
ஆங்கில கட்டுரையாளர்: சுஜாதா சங்வன் | தமிழில்: ஸ்ரீவித்யா