வெங்காயத்தில் இவ்வளவு இருக்கா? வெங்காயங்களை சேமிக்க கோல்ட் ஸ்டோரேஜ் அமைக்கும் Waycool
வெங்காயத்துக்கு ஏன் கோல்ட் ஸ்டோரேஜ் தேவை, அவசியம் என்ன என்பது குறித்து Waycool நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கார்த்திக் ஜெயராமனிடம் பேசினோம். வெங்காயம் குறித்த பல தகவல்களை நம்மிடம் பகிர்ந்தார்.
வெங்காயத்தை நாம் யாரும் பிரிட்ஜில் வைப்பதில்லை. அப்படியே வைத்து பயன்படுத்துகிறோம். ஆனால், ‘Waycool foods' நிறுவனம் வெங்காயத்துக்கான பாதுகாப்பு மையத்தை உருவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறது.
வெங்காயத்துக்கு ஏன் கோல்ட் ஸ்டோரேஜ் தேவை, அவசியம் என்ன என்பது குறித்து வேகூல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கார்த்திக் ஜெயராமனிடம் பேசினோம். வெங்காயம் குறித்த பல தகவல்களை நம்மிடம் பகிர்ந்தார்.
“நாம் வெங்காயத்தை வீட்டில் அப்படியே பயன்படுத்துகிறோம். ஆனால், நமக்கு வரும் அனைத்து வெங்காயமுமே பதப்படுத்திதான் வருகிறது. ஆனால், அவை சரியான முறையில் பதப்படுத்தப்படுவதில்லை. வெளிநாடுகளில் சரியான டெக்னாலஜி மூலம் பதப்படுத்துகிறார்கள். அதனை இங்கு கொண்டுவரும் முயற்சியில் இருக்கிறோம்,” என்றார்.
வெளிநாடுகளில் பொதுவாக மொத்த விற்பனையாளர்கள் வெங்காயத்தை முதலில் குளிர்சாதன கிடங்கில் வைத்திருப்பார்கள். தேவைப்படும் பட்சத்தில் நேரடியாக சந்தைக்கு கொண்டுவரமாட்டார்கள். குளிர்சாதன கிடங்கில் இருந்து எடுத்து காற்றோட்டமான அறையில் வைத்திருந்து, அதன் பிறகுதான் சந்தைக்குக் கொண்டு விற்பனைக்குச் செல்வார்கள்.
அதேபோன்றதொரு நடைமுறையை இந்தியாவில் கொண்டுவர திட்டமிட்டு வருகிறோம். Mooij Agro என்னும் நிறுவனத்தின் உதவியுடன் இணைந்து இதற்கான வேலையை செய்கிறோம் என்று கார்த்திக் கூறினார்.
வெங்காயத்தில் அவ்வளவு சேதாரம் இருக்கிறதா என்னும் கேள்விக்கு விரிவாக பதில் அளித்தார் கார்த்திக் ஜெயராமன்.
இந்தியாவில் சராசரியாக 40 சதவீத வெங்காயம் வீணாகிறது. நவம்பர் முதல் மே மாத வரையிலான ஆறு மாத காலத்தில்தான் வெங்காயம் உற்பத்தி ஆகிறது. இந்த ஆறு மாதத்தில் உற்பத்தி ஆகும் வெங்காயத்தைதான் நாம் ஆண்டு முழுவதும் பயன்படுத்துகிறோம். இதன் காரணமாகதான் அக்டோபரில் நமக்கு வெங்காயத்தின் இருப்பு குறைந்திருப்பதால் விலை அதிகமாக இருக்கிறது.
வெங்காயம், ஈரப்பதம் அதிகமாக இருந்தாலும் வீணாகிவிடும். ஈரப்பதம் குறைவாக இருந்தாலும் வீணாகிவிடும். சரியான அளவில் பதப்படுத்துவதற்கு அளவீடுகள் உள்ளன. ஆனால், குளிர்சாதன வசதி இல்லாததால் ஈரப்பதத்தில் ஏற்படும் மாறுபாடு காரணமாக வெங்காயத்தின் சேதாரம் அதிகமாக இருக்கிறது.
“எங்களது முறையில் பதப்படுத்தும்போது சேதாரத்தின் அளவினை 10 சதவீதமாக குறைக்க முடியும். தற்போது சோதனை அடிப்படையில்தான் இந்த குளிர்சாதன கிடங்கை அமைக்க இருக்கிறோம், ஆரம்பத்தில் 500 டன் அளவுக்கு அமைக்க இருக்கிறோம். வெற்றி அடையும்போது கூடுதல் திறனை அமைக்க இருக்கிறோம்,” எனத் தெரிவித்தார்.
சமீபத்தில் ‘Waycool foods' நிதி திரட்டி இருக்கிறீர்களே என்னும் கேள்வுக்கு நல்ல முதலீட்டாளர்கள் கிடைத்தனர் அதனால் நிதி திரட்டினோம், என்றார்.
”25 மில்லியன் டாலர் அளவுக்கு ஈக்விட்டி நிதி திரட்டி இருக்கிறோம். 15 மில்லியன் டாலர் அளவுக்கு கடன் மூலமாக நிதி பெற்றிருக்கிறோம். தற்போதைக்கு நிறுவனத்தின் சந்தை மதிப்பு 700 மில்லியன் டாலர் என்னும் அளவில் இருக்கிறது,”என்றார்.
Outgrow செயலியில் நாங்கள் எதிர்பார்த்தைவிட நல்ல வரவேற்பு இருக்கிறது. 1.5 லட்சம் டவுன்லோடு வந்திருக்கிறது. ஆக்டிவ் யூசர்களின் எண்ணிக்கை 30000க்கும் மேல் இருக்கிறது. இன்னும் பல மாற்றங்களை அடுத்துவரும் மாதங்களில் அந்த செயலியில் பார்க்கலாம் என கூறினார். தவிர எங்களுடைய சொந்த பிராண்டுகளின் விற்பனை வளர்ச்சியும் நன்றாக இருக்கிறது, என்றார்.
மேலும், மத்திய கிழக்கு நாடுகளில் எங்களது பொருட்களை ஏற்றுமதி செய்யத் தொடங்கி இருக்கிறோம். 100க்கும் மேற்பட்ட ஸ்டோர்களில் எங்களது பொருட்கள் இருக்கிறது. அடுத்து வரும் மாதங்களில் மேலும் பல அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம் என கார்த்திக் ஜெயராமன் கூறினார்.