2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் பார்க்க முடியாததற்கு காரணம் என்ன?
நம்மில் பலர் 2000 ரூபாய் நோட்டை கடைசியாக பார்த்தது எப்போது என்றால்? ‘ரொம்ப நாளாச்சு’ என்பதுதான் பெரும்பாலானவர்களின் பதிலாக இருக்கும். அதற்கான காரணம் என்ன என்பதை பார்ப்போம்.
கடந்த 2016 வாக்கில் இதே நவம்பர் வாக்கில் பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார். அதையடுத்து, புழக்கத்தில் இருந்து வந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டது. தொடர்ந்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது.
ஆனால், கடந்த சில ஆண்டுகளில் நம்மில் பலர் 2000 ரூபாய் நோட்டை கடைசியாக பார்த்தது எப்போது என்றால்?
‘ரொம்ப நாளாச்சு...’ என்பதுதான் பெரும்பாலானவர்களின் பதிலாக இருக்கும். அதற்கான காரணம் என்ன என்பதை பார்ப்போம்.
2016, நவம்பர் 8ம் தேதி அன்று பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. அதன் பின்னர், புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. அதில், 2000 ரூபாய் நோட்டுகளும் அடங்கும்.
2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யக் காரணம் என்ன?
2016ல் அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கையில் எடுத்த போது புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகளில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் பங்கு சுமார் 80 சதவீதம் இருந்ததாகத் தகவல். அதனால், அதிக மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு, துரிதமாக மக்களிடையே பணப் புழக்கத்திற்கு கொண்டு செல்லலாம் என்ற யோசனையில் அரசு இந்த முடிவை எடுத்ததாக நிதி துறை வல்லுநர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் சொல்வது போல அந்த நேரத்தில் கரன்சி நோட்டுகளை அச்சடித்து வரும் ரிசர்வ் வங்கியின் அச்சகங்கள் 24x7 என இயங்கி இருந்தால் கூட மக்களிடையே பண புழக்கத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர எப்படியும் சில காலம் பிடித்திருக்கலாம்.
2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்ட போது பல்வேறு விதமான விமர்சனங்கள் எழுந்திருந்தன. இதற்கு முன்னர் பெரிய அளவில் அசோக சின்னம் இடம்பெற்ற 5000 ரூபாய் நோட்டுகள் இந்தியாவில் புழக்கத்தில் இருந்துள்ளது. ஆனால், அதனை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற்றது.
எத்தனை 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டுள்ளது?
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கிடைத்த தகவலின்படி, கடந்த 2019-20, 2020-21, 2021-22 என மூன்று நிதி ஆண்டுகளில் ஒரே ஒரு 2000 ரூபாய் நோட்டை கூட ரிசர்வ் வங்கி அச்சிடவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு முன்னர் 2018-19ல் 46.690 மில்லியன் 2002 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டுள்ளது. 2017-18ல் இந்த எண்ணிக்கை 111.507 மில்லியன் மற்றும் 2016-17ல் 3,542.991 மில்லியன் என்ற கணக்கிலும் நோட்டுகள் அச்சாகி உள்ளன.
கள்ள நோட்டுகள் அதிகரிப்பு காரணமா?
2000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அச்சிடாமல் இருக்க கள்ள நோட்டு புழக்கம் காரணமாக இருக்கலாம் எனத் தெரிகிறது. கள்ள நோட்டுகளை எளிதில் மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் சில பிரத்யேக அம்சங்களை உள்ளடக்கி ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு வருகிறது. ஆனாலும் 2000 ரூபாய் மதிப்புக் கொண்ட போலி நோட்டுகள் புழக்கத்தில் அதிகம் இருப்பதாகத் தெரிகிறது.
தேசியக் குற்ற ஆவணக் காப்பக தகவலின்படி, 2016 வாக்கில் 2,272 போலி நோட்டுகள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளது. 2017ல் இந்த எண்ணிக்கை 74,898 எனவும், 2019ல் 90,566 எனவும், 2020ல் 2,44,834 என்ற எண்ணிக்கையிலும் அதிகரித்துள்ளது.
அதே வேளையில் இந்திய நாட்டில் டிஜிட்டல் பணபரிவர்த்தனை அதிகரித்து வருவதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
Rupee vs Dollar: தொடர்ந்து சரியும் ரூபாய் மதிப்பு; பின்விளைவுகள் என்னென்ன?
Edited by Induja Raghunathan