ஸ்பேம் செய்திகளை அனுப்பினால் நடவடிக்கை: 'Whatsapp' நிறுவனம் எச்சரிக்கை!
தனது சேவை, பல்க் மெசேஜ்களை அனுப்ப அல்லது தானியங்கி செய்திகளை அனுப்புவதற்கானது அல்ல என வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது. இவை சேவையின் விதிமுறைகளுக்கு எதிரானது என்றும், இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் டிசம்பர் 7 ம் தேதிக்கு பிறகு சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது.
வாட்ஸ் அப், தனது சேவை விதிமுறைகளுக்கு எதிராக, மொத்தமாக செய்திகளை (பல்க் மெசேஜ்) அனுப்பும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது, சட்ட நடவடிக்கை எடுக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இந்தத் தகவல்கள் வேறு வழிகள் வாயிலாக கிடைத்திருந்தாலும் இது பொருந்தும்.
இத்தகைய தானியங்கி அல்லது பல்க் மேசேஜ் செய்திகளை அனுப்பும் அல்லது இதற்கு உதவும் நிறுவனங்கள், டிசம்பர் 7ம் தேதிக்கு பிறகு சட்ட நடவடிக்கைக்குள் உள்ளாவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும், 1.5 பில்லியன் பயனாளிகளைக் கொண்ட, இந்த சேவையின் மேடையில், மார்கெட்டிங் நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்கள் ஸ்பேம் செய்திகளை அனுப்புவது அதிகரித்து வருவதாக சொல்லப்படும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
200 மில்லியன் பயனாளிகளுக்கு மேல் கொண்டுள்ள இந்தியா, வாட்ஸ் அப்’பிற்கு முக்கிய சந்தையாக விளங்குகிறது.
ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் அப், தனது அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பக்கத்தில், தனது சேவை தானியங்கி மற்றும் மொத்த செய்திகளை அனுப்புவதற்கானது அல்ல என்றும், இவை தனது சேவை விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் தெரிவித்துள்ளது.
"மேலும், 2019, டிசம்பர் 7 ம் தேதி முதல், தானியங்கி அல்லது மொத்த செய்தி அல்லது தனிபட்டவிதம் அல்லாத வழிகள் போன்ற சேவையின் விதிமுறைகளை மீறுவதாக கருதும் நபர்கள் அல்லது இவற்றுக்கு உதவுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்போம். எங்கள் சேவைக்கு வெளியே கிடைக்கும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டும் இந்த தீர்மானம் அமையலாம்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனங்கள், வாட்ஸ் அப் சேவையை பயன்படுத்திக்கொள்ளும் தங்கள் திறன் பற்றி கூறிக்கொள்வது போன்றவை, சேவைக்கு வெளியான தகவலாக கருதப்படுகிறது.
"முறையற்ற பயன்பாடு டிசம்பர் 7 ம் தேதிக்கு பிறகு தொடரும் பட்சத்தில், இத்தகைய செயலில் ஈடுபடுவதாக சேவைக்கு வெளியே தகவல் பெற்றவர்கள் மீது அல்லது அதற்கு முன், சேவை மேடையில் முறையற்ற பயன்பாட்டை கொண்டிருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதற்கான எச்சரிக்கையாக இது அமைவதாக, வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வாட்ஸ் அப் செய்தி தொடர்பாளரை தொடர்பு கொண்ட போது, பல்க் செய்திகளைத் தடுக்க மற்றும் சேவை பயன்படுத்தப்படும் விதம் தொடர்பான வரம்புகளை ஏற்படுத்த நிறுவனம் விரும்புவதாக தெரிவித்தார்.
"எங்கள் சேவையைத் தவறாக பயன்படுத்தும் கணக்குகளை கண்டறிந்து, அவற்றை தடை செய்யும் திறனையும் மேம்படுத்தியுள்ளோம். வாட்ஸ் அப் சேவையில், வர்த்தக தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள விரும்புகின்றனர் என்பது தெரியும் அதனால் தான் வாட்ஸ் அப் பிஸ்னஸ் சேவையை அறிமுகம் செய்துள்ளோம். எங்கள் சேவைகள் மற்றும் அவற்றின் பயன்பாட்டை விரிவாக்கம் செய்து வருகிறோம்,” என்றும் அவர் தெரிவித்தார்.
பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையில், வாட்ஸ் அப், பதிவு செய்தல், மெசேஜ் அனுப்புதல் மற்றும் பயனாளிகள் புகார்கள் அடிப்படையிலான கருத்துகள் என மூன்று கட்டங்களில், தவறான பயன்பாட்டை கண்டறியும் செயல்பாடு அமைவதாக தெரிவித்திருந்தது.
ஆதாரம்: பி.டி.ஐ | தமிழில்: சைபர்சிம்மன்