‘30 அடி உயர பனை மரங்களில் ஏறி ‘கள்’ எடுத்தால் ஒரு நாளைக்கு ரூ.350 கிடைக்கும்’ - சாவித்ரி!
பனை மரங்களில் ஏறி, கள் இறக்கும் தொழில் செய்து வருகிறார் பெண் ஒருவர்.
வாழ்க்கையின் சூழல்கள் தான், நாம் நினைத்துப் பார்க்காத வேலையை செய்யத் தீர்மானிக்கின்றன. அதற்கான பலத்தையும் அந்த சூழல்களே உருவாக்கிவிடுகின்றன. அப்படிப்பட்ட சூழல் தான் சாவித்ரியையும் பனை மரம் ஏற வைத்திருக்கிறது.
உயரமான பனை மரங்களில் ஏறி, கள் இறக்கும் தொழில் செய்து வருகிறார் பெண் ஒருவர். 33 வயதான சாவித்ரிக்கு வேறு வழியில்லை. பெண் குழந்தையை பெற்ற அவருக்கு பணம் சம்பாதிக்க கள் இறக்கும் தொழில் தான் இப்போதைக்கு வருமானம். சாவித்ரி, தனது இரண்டாவது குழந்தையை வயிற்றில் சுமந்துகொண்டிருந்தபோது, அவரது கணவர் மாரடைப்பால் காலாமானார். பின்னர் அவருக்கு பிரவசம் நடந்தது. இதில் அவருக்கு பிறந்த பெண் குழந்தை சிறப்புத் தேவை பெறும் குழந்தையாக பிறந்தது.
"கடவுள் எங்களை தண்டித்தார். முதலில் என் கணவரை என்னிடமிருந்து கடவுள் அழைத்துக்கொண்டார். பின்னர் எனக்கு பிறந்த குழந்தையும், சிறப்பு மருத்துவத் தேவைகளுடன் பிறந்தாள். அவளைப் பராமரிக்க நான் பணம் திரட்ட வேண்டியிருந்தது," என்று காலம் தன் வாழ்க்கையை புரட்டிபோட்டது குறித்து வலியுடன் கூறியுள்ளார் சாவித்ரி.
பத்தாம் வகுப்பு வரை படித்த சாவித்ரி, கல்வியறிவு பெற்றவர். அவருக்கு சில வேலை வாய்ப்புகள் கூட கிடைத்தது. ஆனால் அவள் கணவனின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி கள் இறக்கும் தொழிலாளி ஆக விரும்பியதால் அவை அனைத்தையும் மறுத்துவிட்டாள்.
"ஆரம்பத்தில், அதிகாரிகள் எனக்கு உரிமம் வழங்கத் தயாராக இல்லை. ஆனால் எனது உறுதியும் அர்ப்பணிப்பும் கண்ட பின்னர் அவர்கள் எனக்கு உரிமத்தை வழங்கினர். என்னால் 30 அடி உயரமுள்ள பனை மரத்தைக் கூட எளிதில் ஏற முடியும்," என்கிறார் சாவித்ரி.
33 வயதான இவர், தினமும் 30 பனை மரங்களை ஏறி, ஒவ்வொரு நாளும் சுமார் 10 கி.மீ தூரம் பயணித்து கள்-ளை விற்கிறார்.
கடந்த ஆண்டு ஷீஜா என்ற கேரள பெண்மணியும் இவரைப்போலத்தான் பனை மரங்களை ஏறும் தொழில் செய்து வருவதாகக் கூறி தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தார்.
வழக்கத்துக்கும் மாறாக இவர்கள் தேர்ந்தெடுக்கும் இந்தத் தொழில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஷீஜா 26 அடி உயரம் உள்ள பனை மரங்களில் ஏறும் திறன் பெற்றவர்.
"ஆரம்பத்தில், சிறிய மரங்களை ஏறி கற்றுக் கொள்ள முயற்சித்தேன். பின்னர் மெதுவாக உயரத்தை அதிகரித்தேன். இப்போது, நான் ஒரு நாளைக்கு மூன்று முறை 10 மரங்களில் ஏறுகிறேன். இந்த வேலையின் மூலம் எனக்கு ஒரு நாளைக்கு சுமார் 350 ரூபாய் கிடைக்கும். மரம் ஏறவில்லை என்றால் எனக்கு அன்றைக்கு பணம் கிடைக்காது,” என்று ஷீஜா தெரிவித்திருந்தார்.
தகவல் உதவி: indiatimes | தொகுப்பு: மலையரசி