'எங்கள் சேவை மீண்டும் துவங்கிவிட்டது' - Yes வங்கி அறிவிப்பு!
நெருக்கடிக்கு உள்ளான யெஸ் பேங்கின் வங்கிச்சேவை மீண்டும் துவங்கிவிட்டதாக டிவிட்டர் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாராக்கடன் உள்ளிட்ட பிரச்சனைகளால் நெருக்கடிக்கு உள்ளாகி ரிசர்வ் வங்கியின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வந்த, Yes Bank-ன் வங்கிச்சேவை மீண்டும் துவங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான யெஸ் பேங்க், கடந்த சில ஆண்டுகளாக வாராக்கடன், மோசமான நிர்வாகம் உள்ளிட்ட பிரச்சனைகளால் தடுமாறியது.
கடந்த சில மாதங்களில் வங்கியின் நிலை மிகவும் மோசமாகியது. இந்நிலையில், ரிசர்வ் வங்கி தலையிட்டு வங்கியை தனது நேரடிக் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது. வங்கியின் இயக்குனர் குழுமமும் கலைக்கப்பட்டது. யெஸ் பேங்கை சீரமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, யெஸ் பேங்க் கணக்குகளில் இருந்து 50,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க முடியாது என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளில் விதிக்கப்பட்டன. இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
யெஸ் பேங்க் சீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் வங்கி, ரூ.10,000 கோடி முதலீடு செய்துள்ளது. மேலும், ஐசிஐசிஐ வங்கி, எச்.டி.எப்.சி வங்கி, ஃபெடரல் பாங்க் உள்ளிட்ட வங்கிகளும் முதலீடு செய்துள்ளன.
இந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து யெஸ் வங்கி செயல்பாடு மார்ச் 18ம் தேதி முதல் தொடரும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்திருந்தார். இந்நிலையில், யெஸ் பேங்க் மீண்டும் சேவையைத் துவக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை வங்கி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
”எங்கள் வங்கிச்சேவை தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளன. நீங்கள் தற்போது எங்கள் சேவையை முழுமையாக பெற முடியும். உங்கள் பொறுமைக்கும், ஒத்துழைப்பிற்கும் நன்றி,” என அந்த டிவிட்டர் செய்தி தெரிவிக்கிறது. இதனால் வாடிக்கையாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இனி, யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை வழக்கம் போல், தேவைக்கு எடுத்து கொள்ளலாம். இணையம் மூலமாக, NEFT, IMPS, RTGS பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். முன்னதாக, இணைய சேவை மூலம் யெஸ் வங்கிக் கணக்கிற்கு பணத்தை அனுப்ப மட்டுமே முடியும் என்று இருந்த நிலையில், தற்போது யெஸ் வங்கி கணக்கில் இருந்தும் பணத்தை அனுப்பலாம்.
தொகுப்பு ; சைபர்சிம்மன்