ம.பி.-யில் தொழில் தொடங்கினால் ரூ.200 கோடி மானியம்: தமிழக தொழில்முனைவோருக்கு அழைப்பு!
மத்தியப் பிரதேசத்தில் முதலீடு செய்வதற்கு வசதியாக கோவையில் தொழில் அலுவலகம் திறக்கப்படும் என்று முதல்வர் டாக்டர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.
‘மத்திய பிரதேசத்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள்’ என்ற தலைப்பில் கோவையில் நேற்று கருத்தரங்கு நடந்தது. அப்போது திருப்பூர் தொழில்முனைவோர், மத்தியப் பிரதேச மாநிலத்தில் தொழில் தொடங்க முன்வர வேண்டும் என்று அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் தமிழக தொழில்முனைவோருக்கு அழைப்பு விடுத்தார்.
மத்தியப் பிரதேசத்தில் முதலீடு செய்வதற்கு வசதியாக கோவையில் தொழில் அலுவலகம் திறக்கப்படும் என்று முதல்வர் டாக்டர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார். இந்த அலுவலகம் மத்திய பிரதேசம் மற்றும் தமிழ்நாடு இடையே வர்த்தகம் மற்றும் வணிகத்தை அதிகரிக்க பாலமாக செயல்படும்.
மேலும், 30 நாட்களில் தொழில் தொடங்கலாம், 200 சதவீத மானியம் அளிப்போம் என்றும் மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்தார்.
![M.P.CM](https://images.yourstory.com/cs/18/40b57b80a91b11ed8d456bd40c7ffe66/kovai-1721974340040.jpg?fm=png&auto=format&w=800)
அவர் மேலும் இந்த கருத்தரங்கத்தில் கூறியதாவது, நாட்டின் உற்பத்தித் துறையின் பேரிடமாக தமிழகம் விளங்குவதற்கு கோவை, திருப்பூரின் பங்களிப்புதான் காரணம். தொழில் முனைப்புத்திறன், அர்ப்பணிப்பு காரணமாக கோவை மற்றும் திருப்பூரை தென்னிந்தியாவின் ஆடை உற்பத்தி மையமாக மாற்றியுள்ளீர்கள். இதேபோல், ஆட்டோமொபைல், உதிரி பாகங்கள் உற்பத்தில், கோவையை தமிழகத்தின் முக்கிய மையமாக மாற்றியுள்ளீர்கள்.
மத்தியப்பிரதேசம் ஜவுளித்துறைக்கு உகந்த மாநிலமாகத் திகழ்கிறது. ஆட்டோமொபைல், இன்ஜினியரிங் துறைகள் வளர்ந்து வருகின்றன. ஆடைத்துறையில் மத்திய பிரதேசம் மிகப்பெரும் சந்தையாக உருவெடுத்துள்ளது. அங்கு தொழில் தொடங்கினால், 200% மானியம் வழங்குகிறோம்.
மத்தியப் பிரதேசம் வாய்ப்புகளுக்கான மாநிலமாக திகழ்கிறது, வாய்ப்பு வசதிகள் கொட்டிக் கிடக்கின்றன, அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள், என்று கூறினார் மோகன் யாதவ்.