லாக்டவுன் சமயத்தில் 20 லட்சம் பேருக்கு உணவளித்த 81 வயது முதியவர்!
பாபா கர்னைல் சிங் காயிரா 11 சமையல்காரர்கள் உட்பட 17 பேர் அடங்கிய குழுவுடன் பணியாற்றி மக்களுக்கு இலவசமாக முழு நிறைவான உணவு வழங்கி வருகிறார்.
கோரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் மக்கள் கடும் துயரத்திற்கு ஆளானார்கள். குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்கள் உணவு, குடிநீர், தங்குமிடம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளைக் கூட பூர்த்திசெய்துகொள்ள முடியாமல் சொந்த ஊர் நோக்கிய நடைபயணத்தைத் தொடங்கினர்.
மூட்டைகளையும், குழந்தைகளையும் மட்டுமல்லாமல் வேதனையையும் சுமந்தவாறு நடக்கத் தொடங்கினார்கள். இவர்களது நிலையைக் கண்டு அரசாங்கம் இவர்களுக்கு உணவு, தங்குமிடம் போன்றவற்றை ஏற்பாடு செய்து கொடுத்தது. அத்துடன் இவர்கள் வீடு திரும்ப சிறப்பு ரயில்களும் ஏற்பாடு செய்தது.
இதுபோன்ற இக்கட்டான சூழல்களில் உதவ எத்தனையோ நிறுவனங்களும் தனிநபர்களும் களமிறங்குவதையும் பார்க்கமுடிகிறது. அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் 81 வயதான பாபா கர்னைல் சிங் காயிரா.
மஹாராஷ்டிராவின் கரஞ்சி பகுதியைச் சேர்ந்த காயிரா பாபா கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பழைய கட்டிடத்தில் செயல்படும் உணவகத்தில் இலவசமாக உணவு வழங்கி வருகிறார். சுற்றுவட்டாரத்தில் சுமார் 450 கிலோமீட்டர் வரை வேறு உணவகம் ஏதும் இல்லை.
“இது ஒரு பழங்குடிப் பகுதி. இந்த இடத்திற்கு ஒருபுறம் சுமார் 150 கி.மீட்டர் வரையிலும் மற்றொருபுறம் 300 கி.மீட்டர் வரையிலும் ஒரே ஒரு உணவகம் கூட கிடையாது. அதனால் பெரும்பாலானோர் இங்குதான் வருவார்கள்,” என்று IANS-இடம் காயிரா பாபாஜி தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் இவரது உணவகத்தில் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் உணவருந்தி உள்ளனர்.
“மக்கள் பெருந்திரளாக வந்துகொண்டெ இருந்தனர். நாங்கள் தொடர்ந்து சமைத்துக்கொண்டே இருந்தோம். ஜாதி, மத பேதமின்றி அனைவரையும் புன்னகையுடன் வரவேற்றோம். 11 சமையல்காரர்கள் உட்பட 17 பேர் என் குழுவில் அயராது பணியாற்றினார்கள். கடுமையாக உழைத்து ஃப்ரெஷ்ஷான உணவு வகைகளை தடையின்றி பரிமாறினார்கள்,” என்று பாபாஜி 'லாஜிக்கல் இந்தியன்’ இடம் தெரிவித்துள்ளார்.
துவரம்பருப்பு, உருளைக்கிழங்கு கொண்டு தயாரிக்கும் உணவு வகை என முழு நிறைவான உணவு வழங்கப்பட்டது. அத்துடன் சோர்வாக இருப்பவர்களுக்கு சோப்பு, போர்வெல் தண்ணீரும் கொடுக்கப்பட்டது. பயன்படுத்தப்பட்ட தூக்கியெறியப்பட்ட தட்டுகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் இவர் 15 லட்சம் பேருக்கு உணவளித்துள்ளார்.
கிட்டத்தட்ட ஐந்து லட்சம் உணவு பார்சல் வழங்கியுள்ளார். இவர் தொடரந்து மக்களுக்கு சேவையளித்து வருகிறார். இவரது குழுவினர் நாய், பூனை, மாடு உள்ளிட்ட விலங்குகளுக்கும் தினமும் உணவளித்து வருகின்றனர்.
இவரது சகோதரரான 67 வயது குர்பாக்ஸ் சிங் காயிரா அமெரிக்காவில் வசிப்பவர். அவரும் இந்த சேவை தொடர்ந்து நடைபெற உதவும் வகையில் உள்ளூர் சீக்கியர்கள் சமூகத்தினரிடமிருந்து நன்கொடை சேகரித்து வழங்கியுள்ளார்.
மனிதகுலத்திற்கு செய்யப்படும் இத்தகைய சேவையில் கடவுள்தான் தங்களை ஈடுபடுத்தியுள்ளதாகவும் இவை அனைத்தும் அவரது விருப்பமே என்றும் காயிரா பாபா தெரிவிக்கிறார்.
“மக்கள் மூன்று வாகனங்களை நன்கொடையாக வழங்கியுள்ளார். ஆனால் இந்த பூமியில் எனக்குச் சொந்தமானது மூன்று செட் ஆடைகள் மட்டுமே. நான் இங்கேயே தங்கியிருக்கிறேன். இங்கேயே தூங்குகிறேன். மக்களுக்கு வழங்கும் அதே உணவை சாப்பிடுகிறேன்,” என்றார்.
கட்டுரை: THINK CHANGE INDIA