'சூரரைப் போற்று' படத்தில் அப்துல் கலாம் வேடம் ; திரையில் தன்னை பார்க்காமலே காலமான ஷேக் மைதீன்!
சூரரைப்போற்று படத்தில் அப்துல்கலாம் வேடத்தில் நடித்த உடுமலை கலாமுக்கு நேர்ந்த துயரம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சூரரைப்போற்று படத்தில் அப்துல் கலாம் வேடத்தில் நடித்த உடுமலை கலாமுக்கு நேர்ந்த துயரம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சூரரைப்போற்று திரைப்படத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ஷேக் மைதீன். அப்துல் கலாமைப் ஒத்த உருவத்தோற்றம் கொண்டிருந்ததால், ஷேக்மைதீன் பிரபலமடைந்தார். வாழ்க்கை எல்லோருக்கும் வாய்ப்புகள் தருவதில்லை. அப்படி கொடுத்த வாய்ப்புகளை, பார்க்கும் முன்பே சிலரது வாழ்க்கையை முடித்து விடுகிறது.
ஷேக் மைதீனுக்கும் அப்படியான துயரத்தைத்தான் இந்த வாழ்க்கை கொடுத்திருக்கிறது. ஆம்! சூரரைப் போற்று திரைப்படத்தில் தான் விரும்பி ஏற்று நடித்த அப்துல்கலாம் கதாபாத்திரத்தை திரையில் பார்க்காமலே உயிரிழந்திருக்கிறார் ஷேக்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்தவர் ஷேக் மைதீன். அப்துல்கலாம் மீது அளப்பரிய அன்புகொண்டவர். அவரது கருத்துகளால் ஈர்க்கப்பட்டவர். தான் நேசிக்கும் கலாமை இளைஞர்களிடம் எடுத்துச்செல்லவேண்டும் என்று கூறி, அதற்காக உழைத்தவர்.
ஏழைக்குடும்பத்தில் பிறந்த ஷேக், ஆரம்ப கல்வியைக்கூட கற்கவில்லை. பெயிண்டிங் வேலை செய்துகொண்டு, அன்றாட வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்தார். அப்துல் கலாம் மீது கொண்ட அன்பாலும், பார்ப்பதற்கு அவரைப்போன்ற தோற்றம் கொண்டிருந்ததாலும், தன் முடியை கலாமின் ஸ்டைலில் மாற்றிக்கொண்டார். பசுமைப் புரட்சி டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நற்பணி இயக்கம் என்ற தன்னார்வக் குழுவின் ஷேக் மைதீன் கவுரவத்தலைவராக இருந்தார்.
திருப்பூர், கோவை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு தன்னார்வ குழுக்களோடு இணைந்து ஷேக் மைதீன் பணியாற்றியுள்ளார். உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த குறும்பட இயக்குநர் சரவணனின் இயக்கத்தில், அப்துல் கலாமின் வேடத்தில் நடித்து பிரபலமடைந்தவர் ஷேக்.
அதன் மூலமாகவே சூரரைப்போற்று திரைப்படத்திலும் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் பல்வேறு மேடைகளில் உரையாற்றிருக்கிறார். அப்துல்கலாம் போன்ற தோற்றம் கொண்டிருந்ததால் அவருடன் செல்பி எடுக்க வேண்டும் என்று மாணவர்கள், மக்கள் ஆர்வம் கொண்டிருந்தனர்.
ஷேக் மைதீன் குறித்து அறிந்துகொண்ட அப்துல் கலாம் ஒரு முறை அவரைத்தொடர்பு கொண்டு பேசியதாகக் கூறப்படுகிறது. அப்துல் கலாமின் குடும்பத்துடன் நெருக்கமாக பழகிவந்துள்ளார் ஷேக்.
உடல்நலனில் அக்கறை செலுத்தாது பின்னாளில் அவருக்கு பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
சூரரைப்போற்று திரைப்படம் வெளியாகும் தேதி ஒவ்வொரு முறையும் தள்ளிப்போகவே, படம் வெளியாவதற்கு முன்பே ஷேக் உயிரிழந்துவிட்டார். ஆசையுடன், தன் நாயகனின் வேடத்தை ஏற்று நடித்த அவரால் படத்தை பார்க்க முடியவில்லை. காலம்தான் எத்தனை கொடுமையானது!
'படிப்பறிவு இல்லாததால் தான் நான் பெயிண்டிங் வேலைக்குச் சென்றேன். அதனால், நீங்கள் அனைவரும் நன்றாக படிக்க வேண்டும். கலாம் ஐயாவைப் போல் உயர்ந்த பதவிகளை அடைய வேண்டும்' என்று அடிக்கடி இளைஞர்கள் மத்தியில் கூறுவாராம்.
’உடுமலை கலாம்' என்ற அழைக்கப்பட்ட ஷேக் மைதீன், அப்துல் கலாமைச் காணும் அவாவில் புறப்பட்டுச் சென்றுவிட்டார். திரையில்தன் நாயகனைக் காண்பதை விட நேரில் காண்பதே சரியாக இருக்கும் என நினைத்துவிட்டாரோ என்னவோ!
கட்டுரை: மலையரசு