26 ஆண்டுகளாக விலங்குகளின் பசியைப் போக்கி வரும் சந்திரபிரகாஷ்!
மழை, வெயில், உடல்நலக் குறைவு என எதையும் பொருட்படுத்தாமல் 26 ஆண்டுகளாக தினமும் விலங்குகளுக்கு உணவளித்து வருகிறார் லக்னோவைச் சேர்ந்த சந்திரபிரகாஷ்.
“பசியுடன் இருக்கும் விலங்கிற்கு ஒருவர் உணவளிப்பது அவருடைய ஆன்மாவையே திருப்திப்படுத்துவதற்கு சமம்.” – இந்த வரிகளில் நம்பிக்கைக் கொண்டவர் சந்திரபிரகாஷ்.
சந்திர பிரகாஷ் ஜெயின் லக்னோவில் வசிக்கிறார். இவருக்கு 56 வயதாகிறது. இவர் கடந்த 26 ஆண்டுகளாக சாலையில் சுற்றித்திரியும் விலங்குகளுக்கு ஒவ்வொரு நாளும் தவறாமல் உணவளித்து வருகிறார்.
“26 ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய வருமானத்தில் 12.5 சதவீதத்தை நன்கொடைக்காக ஒதுக்கவேண்டும் என என் அப்பா கேட்டுக்கொண்டார். அந்த சமயத்தில் என்னுடைய வருமானம் மிகவும் குறைவு. இருந்தாலும் என் சம்பளத்தொகையிலிருந்து நன்கொடை செய்து வந்தேன். விலங்குகளுக்கு உணவளிக்கும் முயற்சி இங்கிருந்துதான் தொடங்கப்பட்டது,” என்று கூறும் சந்திரபிரகாஷ் இன்று வரை இந்த சேவையைத் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
அன்றாட செயல்கள்
சந்திரபிரகாஷ், மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மருமகள் ஆகியோருடன் வசித்து வருகிறார். இவர் மத்திய அரசுப் பணியாளர். 90-களிலிருந்து லக்னோவில் உள்ள இந்திய வானிலை ஆய்வுத் துறையில் வேலை செய்கிறார்.
தினமும் காலை 4 மணிக்கு எழுந்துகொள்ளும் சந்திரபிரகாஷ் கடவுளை பிரார்த்தனை செய்துவிட்டு நடக்க ஆரம்பிக்கிறார். கையில் பிரெட், பன் என உணவுப் பொருட்களை எடுத்துக்கொண்டு 5 மணி வரை நடந்து சென்று நாய்கள், பூனைகள், மாடுகள் என கண்ணெதிரே தென்படும் விலங்குகளுக்கு உணவளிக்கிறார்.
இப்படி விலங்குகளின் பசியைப் போக்கிய பின்பு சுமார் 5 மணியளவில் வீடு திரும்புகிறார். இப்படிக் கிட்டத்தட்ட 3 கி.மீட்டர் வரை நடந்து செல்கிறார். இரவு 8 மணி முதல் 9.30 மணி வரை மீண்டும் இதேபோல் நடந்து சென்று விலங்குகளுக்கு உணவளிக்கிறார்.
மழை, வெயில், உடல்நலக் குறைவு என எதையும் பொருட்படுத்தாமல் தனது நோக்கத்தில் மட்டுமே முழு கவனம் செலுத்துகிறார் சந்திரபிரகாஷ்.
“காற்று, மழை, வெள்ளம் எதைப் பற்றியும் நான் கவலைப்படுவதில்லை. விலங்குகளின் பசியாற உதவவேண்டும் என்கிற நோக்கத்தில் உறுதியாக இருக்கிறேன். அந்த விலங்குகள் என் மீது அன்பு செலுத்துகின்றன. இதுவரை எந்த ஒரு விலங்கும் என்னைக் காயப்படுத்தியதில்லை,” என்கிறார்.
இவருக்கு பதிலாக வேறொருவர் வந்து இந்த விலங்குகளுக்கு உணவளித்த சம்பவம் வெகு அரிதாகவே நடந்திருப்பதாகத் தெரிவிக்கிறார்.
பாசத்திற்கு பதில் பாசம் மட்டுமே!
விலங்குகள் சந்திரபிரகாஷ் மீது அன்பு காட்டுகின்றன. இந்த அன்புதான் தொடர்ந்து இத்தனை ஆண்டுகளாக இந்த செயலில் ஈடுபட ஊக்கமளிப்பதாக அவர் தெரிவிக்கிறார். இவரது தொடர் வருகையைப் புரிந்துகொண்ட விலங்குகள் இவருக்காகக் காத்திருக்கும் என்கிறார்.
“என்னைப் பார்த்ததும் ஓடி வரும். என் கால்களை சுற்றி வரும். கட்டிக்கொள்ளும். இந்த அன்பு மட்டுமே எனக்கு ஊக்கமளிக்கிறது,” என்கிறார்.
சாலைகளில் சுற்றித்திரியும் விலங்குகள் மீது இவர் காட்டும் அன்பு குறையக்கூடாது என்பதற்காக சொந்தமாக செல்லப்பிராணி எதுவும் வளர்க்கவில்லை.
இதை கடமையாகக் கருதி செய்யாமல் அன்புடன் மகிழ்ச்சியாக செய்கிறார். சந்திரபிரகாஷ் தினமும் 70-க்கும் மேற்பட்ட மாடுகள் மற்றும் நாய்களுக்கு உணவளிக்கிறார். சந்திரபிரகாஷ் இதுவரை தன் சொந்த வருமானத்தை மட்டுமே கொண்டு விலங்குகளுக்கு உணவளித்து வருகிறார்.
2024-ம் ஆண்டு பணி ஓய்வு பெற்ற பிறகும் இதேபோல் விலங்குகளுக்குத் தொடர்ந்து உணவளிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
”மற்றவர்களிடம் நன்கொடை எதுவும் பெறாமல் என்னுடைய சொந்த பணத்தை மட்டுமே கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன்,” என்கிறார்.
ஆங்கில கட்டுரையாளர்: அபூர்வா பி | தமிழில்: ஸ்ரீவித்யா