அம்பானி & அதானி டாப் பணக்காரர்கள் மட்டுமல்ல; இவர்கள் டாப் 2 கடனாளிகளும் கூட...
இந்திய நிறுவனங்கள் வாங்கியுள்ள ஒட்டுமொத்த வெளிநாட்டு கடனில் ஒவ்வொரு 5 டாலர்களுக்கும் 1 டாலர் வீதம் இவர்கள் இருவரும் கூட்டு பொறுப்பு.
உலகின் டாப் 10 செல்வந்தார்களின் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த முகேஷ் அம்பானியும், கவுதம் அதானியும் இடம் பிடித்துள்ளனர் என்பது எல்லோரும் அறிந்த செய்திதான். இவர்கள் இருவரது சொத்து மதிப்பும் சுமார் 200 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் உள்ளது. இந்தியாவின் டாப் 2, ஆசியாவின் டாப் 2 பட்டியலிலும் இவர்களே இந்த பட்டியலில் முன்னிலை வகிக்கின்றனர்.
தினந்தோறும் இந்த நிறுவனங்களின் முதலீடு குறித்த செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஜியோ 5ஜி சேவைக்காக 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. மறுபக்கம் என்டிடிவி ஊடக நிறுவன பங்குகளை பெற முனைப்பு காட்டி வருகிறது அதானியின் நிறுவனம்.
இப்படி இருவரும் தங்களது தொழிலில் ஆர்வம் செலுத்தி வரும் நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியின் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட அறிக்கையில் இவர்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.

அதானி, அம்பானி டாப் 2 கடனாளிகள்
அதாவது, இந்திய நிறுவனங்கள் வாங்கியுள்ள ஒட்டுமொத்த வெளிநாட்டு கடனில் ஒவ்வொரு 5 டாலர்களுக்கும் 1 டாலர் வீதம் இவர்கள் இருவரும் கூட்டு பொறுப்பு என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021-22 நிதி ஆண்டில் மட்டும் இந்திய நிறுவனங்கள் மொத்தம் 38.2 பில்லியன் அமெரிக்க டாலர்களை வெளிநாடுகளைச் சேர்ந்த கடன் வழங்கும் நிறுவனங்களிடம் இருந்து ECB கடனாக பெற்றுள்ளன. அதில்,
அம்பானி மற்றும் அதானியின் நிறுவனங்கள் 8.25 பில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாக பெற்றுள்ளதாம். இதன் மூலம் இவர்கள் இருவரும் வெளிநாடுகளிலிருந்து கடன் பெற்ற இந்தியர்களில் டாப் 2 கடனாளிகளாகவும் உள்ளனர்.
இதற்கான காரணம் என்ன?
ECB (External Commercial Borrowings) எனப்படும் வணிக ரீதியிலான இந்த கடன்களை பெறுவதற்கான முக்கியக் காரணமாக இதன் வட்டி விகிதம் சொல்லப்படுகிறது. இந்த கடன்கள் மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறதாம். அதன் மூலம், நிதி நெருக்கடிகளை தனியார் நிறுவனங்களால் சமாளிக்க முடிகிறது.
இந்த கடன் லாபகரமானதாக இருப்பதால் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் அதனை பெற ஆர்வம் காட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வெளிநாட்டு கரன்சி எக்ஸ்சேஞ்ச் விஷயத்தில் நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டியுள்ளதாகவும் தெரிகிறது.
இருந்தாலும் வரும் நாட்களில் இந்த ECB கடன்களின் மீதான வட்டி விகிதம் உயர வாய்ப்புள்ளதாகவும் இந்த அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் இயங்கி வரும் சென்ட்ரல் வங்கிகள் மேற்கொள்ளும் மானிட்டரி கொள்கை முடிவுகள் இதற்குக் காரணமாக அமைய வாய்ப்பு உள்ளதாம். அதோடு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் நீடித்து வரும் சரிவும் இதற்கு மற்றொரு காரணம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 ஆண்டுகளில் 260 பில்லியன் டாலர்கள் ECB கடன் பெற்ற இந்தியா
கடந்த எட்டு ஆண்டுகளில் இந்திய நிறுவனங்கள் சுமார் 260 பில்லியன் அமெரிக்க டாலர்களை ECB கடன்களாக பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்ததும் இந்த கடன் பெறும் எண்ணிக்கை சரிந்துள்ளது.
2017க்கு பிறகு இது மீண்டும் அதிகரித்துள்ளது. பின்னர், கொரோனா தொற்று காரணமாக மீண்டும் சரிவை கண்டுள்ளது.
இந்த எட்டு ஆண்டுகளில் அதிகபட்சமாக 2019-20 காலகட்டத்தில் மட்டும் சுமார் 51 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனாகப் பெறப்பட்டுள்ளது.
நிதி சேவை நிறுவனங்கள் (21.7%), பெட்ரோலியம் (21.6%) மற்றும் மின்சாரம் (19%) சார்ந்த நிறுவனங்கள் தான் ECB-யில் பிரதான பங்கு வகிக்கின்றன. இதில் இதர நிறுவனங்களின் விகிதம் 37.7% என உள்ளது.
இந்திய நிறுவனங்களின் பல்வேறு செயல்பாடுகளுக்கு ECB அச்சாணியாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மலிவான வட்டி விகிதம் நிறுவனங்களின் மொத்த கடன் சுமையை குறைக்கவும் உதவுகிறதாம்.
-புதுவை புதல்வன்