சிறுதொழில் நிறுவனங்களுக்கு வரி, ஜிஎஸ்டி தணிக்கையை எளிதாக்கும் EZTax
இந்த மேடையில் பதிவு செய்து கொண்டு, படிவம் 16 அல்லது இதர தகவல்களை பதிவேற்றி, ஏழு நிமிடங்களில் இ-பைலிங் செய்ய உதவுகிறது இந்த வரிச்சேவை நிறுவனம்.
ஒவ்வொரு ஆரம்ப நிலை தொழில்முனைவோர் அல்லது ஒவ்வொரு சிறுதொழில் நிறுவன அதிபரும் கொண்டிருக்கக் கூடிய கவலை என்பது வரித்தாக்கல் மற்றும் தணிக்கை ஆகும். இது முக்கியமானது மட்டும் அல்ல, மிகவும் சிக்கலானதாகவும் இருக்கிறது. இதுவே, சுனீல் தாசரி, தனது 23 ஆண்டுகால ஆரக்கிள் நிறுவன அனுபவத்தில் உணர்ந்த விஷயமாகவும் இருக்கிறது.
“அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்ப தீர்மானித்த போது, பெரும்பாலான இந்தியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையைத் தீர்க்கும் வகையில் என் புதிய நிறுவனம் இருக்க வேண்டும் என தீர்மானித்துக்கொண்டேன். பெரும்பாலான இந்தியர்கள் வரி பிரச்சனைகளை அறிந்திராத மற்றும், சந்தை ஏற்பு குறைவாக இருந்த காலத்தில் நான் தீர்வை உண்டாக்க வரித்துறையை தேர்வு செய்தேன்,” என்கிறார் சுனீல்.
ஓ.இ.சி.டி நாடுகளின் சராசரியான 47 சதவீதத்தினர் வரித்தாக்கல் செய்வதுடன் ஒப்பிட்டால் இந்தியாவில் இன்று, 1.4 சதவீதத்தினர் மட்டுமே வரி செலுத்துகின்றனர் மற்றும் 4.8 சதவீதத்தினர் வரித்தாக்கல் செய்கின்றனர்.
EZTax
2016ல் சுனீல் சொந்த நிதி திரட்டி, ’இஸிடாக்ஸ்’ (EZTax) நிறுவனத்தை நிறுவினார். 2017ல் இதன் போர்டல் அமைக்கப்பட்டது. வரி செலுத்துபவர்கள் ஆன்லைனில் வரித்தாக்கல் செய்ய வழி செய்யும், வருமான வரி கணக்கு தாக்கலுக்கான சுயசேவை மேடை முதல் எஸ்.ஏ.ஏ.எஸ் சேவையாக அமைந்தது.
அதே ஆண்டு, அக்டோபரில், சிறுதொழில் நிறுவனங்கள், ஜிஎஸ்டி தாக்கல் மற்றும் தணிக்கை உள்ளிட்டவற்றை கவனிப்பதற்கான இஸிடாக்ஸ் புக்ஸ் (EZTax Books) சேவையை அறிமுகம் செய்தது.
வரி மற்றும் தணிக்கையை எளிதாக்குவதே தங்கள் சேவையின் சிறப்பம்சம் என்கிறார் சுனீல். சுய சேவை மற்றும் வழிகாட்டல் சார்ந்த வரித்தாக்கல் சேவைக்கு, நீங்கள் இந்த மேடையில் பதிவு செய்து கொண்டு, படிவம் 16 அல்லது இதர தகவல்களை பதிவேற்றி, ஏழு நிமிடங்களில் இ-பைலிங் செய்யலாம். பொருத்தமான ஆவணங்களை பதிவேற்றி மற்றும் கட்டணம் செலுத்தி, வல்லுனர் உதவியையும் கோரலாம்.
சுயசேவை ஜி.எஸ்.டி தணிக்கை மேடையை பொருத்தவரை, வாடிக்கையாளர் வர்த்தக நாடு அடிப்படையில் பதிவு செய்து கொண்டு, இன்வாய்ஸ் வழங்கத்துவங்கி தணிக்கையை தொடரலாம். தேவைப்படும் போது அல்லது காலாண்டிற்கு டிடிஎஸ் தயார் செய்யலாம்.
“பதிவு செய்து, ஆவணங்களை சமர்ப்பித்து, பணம் செலுத்தத் துவங்குங்கள். அதன் பிறகு, எங்கள் குழு பொறுப்பேற்று கோரிக்கையை செயல்படுத்தும்,” என்கிறார் சுனீல்.
சவால்கள்
எனினும் இந்த பணி எளிதாக இருக்கவில்லை. அதிலும் குறிப்பாக இந்தக்குழு 2016ல் துவங்கிய போது எளிதாக இருக்கவில்லை. இந்தியாவில் பெரும்பாலான வரித்தாக்கல் மென்பொருள்கள், வரி ஆலோசகர்களை மையமாகக் கொண்டிருந்தன.
அதிகம் அறியாதவர்கள் கூட, எளிதாக வரித்தாக்கல் செய்யும் வகையில், வரி செலுத்துபவர்களுக்கான வரி மென்பொருளை உருவாக்குவது சவாலாக இருந்தது. ஏனெனில், எஸ்.எம்.இ நிறுவனங்கள், கற்றுக்கொண்ட பலவற்றை இதற்காக மறக்க வேண்டியிருந்தது.
“மேலும், வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி துறை செய்த மாற்றங்களுக்கு ஈடு கொடுப்பது மற்றும் நுகர்வோர் இந்த மாற்றங்களை அறியச்செய்வது எங்கள் பயணத்தை கடினமாக்கியது. B2B மற்றும் B2C பரப்பை நேரடியாக நுகர்வோரை அடையும் மாதிரி மூலம் சென்றடைவது கடினம். எங்கள் EZTax Books தீர்வு மூலம், பி2பி பிரிவுக்குச்செல்வதற்கு முன் பி2சி நம்பிக்கையை பெற்று இதை சாத்திதோம்,” என்கிறார் சுனீல்.
போட்டி
இன்று வரித்தாக்கல் மேடைகள் வேகமாக வளர்ந்து வருகின்றன. கடந்த ஆண்டும், கிளியர்டாக்ஸ் நிறுவனம், ஹாங்காங்கைச்சேர்ந்த கம்போசிட் காபிட்டல் நிறுவனத்திடம் இருந்து பி சுற்று நிதியாக 50 மில்லியன் டாலர் திரட்டியது. கிளியர்டாக்ஸ், ஓய் காம்பினேட்டர் நிறுவனத்தால் ஆதரிக்கப்பட்ட முதல் இந்தியா சார்ந்த ஸ்டார்ட் அப்பாக இருக்கிறது. பீட்டர் தியல் மற்றும் சீன் பார்க்கர் ஆதரவு பெற்ற நிதி, செக்கோயா கேபிட்டலும் இந்நிறுவனத்தின் மற்ற முதலீட்டாளர்கள்.
மேலும், கொல்கத்தாவைச் சேர்ந்த டாக்ஸ்மந்த்ரா மற்றும் பிற ஸ்டார்ட் அப்களும் இருக்கின்றன. இருப்பினும், பெரும்பாலான வரித்தாக்கல் சேவைகள், வருமான வரி அல்லது ஜிஎஸ்.டி அல்லது தணிக்கையில் கவனம் செலுத்துகின்றன என்கிறார் சுனீல்.
“வாடிக்கையாளர்கள், பல்வேறு சேவையாளர்கள் இடையே மாறிக்கொள்வதில் சிக்கலை உணரலாம். எங்கள் நிறுவனத்தின் நோக்கம் நீண்ட கால பங்குதாரராக இருப்பதாக அமைந்துள்ளது. மென்பொருள் மூலம் மற்றும் வருமான வரி, ஜி.எஸ்.டி. தணிக்கை, பதிவு தொடர்பான வல்லுனர் ஆலோசனைகள் மூலம் சேவை அளிப்பது எங்கள் நோக்கமாக உள்ளது. புதுமையான ஐடி தீர்வுகள் மற்றும் செலவு குறைந்த வல்லுனர் ஆலோசனைகள் எங்கள் தனித்தன்மையாக இருக்கிறது,” என்கிறார் சுனீல்.
நிறுவனம் 1,10,200 க்கும் மேற்பட்ட B2C வாடிக்கையாளர்கள் மற்றும் 5,000 க்கும் மேற்பட்ட ஜிஎஸ்டி வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. அனுராதா டைமர், தாத்ரி (சூப்பர் மார்க்கெட்) மற்றும் ஜேஸ்கே மெட்லே (உற்பத்தி) ஆகிய நிறுவனங்கள் இதில் அடங்கும். ரூ.20 கோடிக்கு மேல் வருவாய் உள்ள நிறுவனங்கள் மற்றும் வர்த்தகங்களை வாடிக்கையாளர்களாக நிறுவனம் கொண்டுள்ளது.
வருவாய் மாதிரி
“எங்கள் வல்லுனர் சேவை 35 சதவீத மார்ஜின் அளிக்கிறது. மென்பொருள் சேவை இலவசம் முதல் குறைந்தபட்ச கட்டணம் கொண்டுள்ள நிலையில், அடுத்த ஆண்டு இது மாறலாம் என எதிர்பார்க்கிறோம். நாங்கள் வழங்கும் விதத்தின் அடிப்படையில் எங்கள் சேவைகள் வகைப்படுத்தப்படுகின்றன,” என்கிறார் சுனீல்.
ஜிஎஸ்டி தணிக்கைக்கு, நிறுவனம் ஆண்டுக்கு ரூ.5,000 வசூலிக்கிறது. ஐடிஆர்க்கு வல்லுனர் சேவை ரூ.499 முதல் துவங்குகிறது. ஜிஎஸ்டி ஆலோசனை ஆண்டுக்கு ரூ.349 முதல் ரூ.96,000 வரை அமைகிறது. விர்ச்சுவல் தணிக்கை சேவை மாதம் ரூ.3,000 முதல் ரூ.40,000 வரை அமையலாம்.
“வரி சேவையில் முன்னணி நிறுவனமாக விளங்க வேண்டும் என்பது எங்கள் இலக்கு. ஆண்டுக்கு மில்லியன் வரித்தாக்கலோடு, முன்னணி மூன்று நிறுவனங்களில் ஒன்றாக இடம்பெற விரும்புகிறோம். பல நகரங்களில் வரி மையங்களை அமைக்க உள்ளோம். செயற்கை நுண்ணறிவு மாதிரிகளையும் வழங்க உள்ளோம்,” என்று எதிர்காலத் திட்டம் பற்றி சுனீல் கூறுகிறார்.
ஆங்கில கட்டுரையாளர்: சிந்து கஷ்யப் | தமிழில்: சைபர்சிம்மன்