சிறுமி ஆசிஃபாவிற்கு நீதி கிடைக்கப் போராடும் துணிச்சல்மிகு நபர்கள்!
காஷ்மீரைச் சேர்ந்த எட்டு வயது பழங்குடி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் கடந்த சில நாட்களாக டிவி சானல்கள், செய்தித்தாள்கள், சாலைகள் என எங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆசிஃபா பானு, பேக்கர்வால் எனப்படும் நாடோடி சமூகத்தைச் சேர்ந்தவர். இந்தச் சிறுமி தொலைந்து போன ஒரு வாரம் கழித்து கதுவாவின் ஹிராநகர் பகுதியில் ஜனவரி 17-ம் தேதி சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
ஆசிஃபாவை ஒரு கோவிலில் கடத்தி வைத்து மயக்க மருந்து கொடுத்து தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஒரு தலைமை காவலர், ஒரு துணை காவல் ஆய்வாளர், இரண்டு சிறப்பு காவல் அதிகாரிகள் என நான்கு காவல் துறையினர் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஏழு பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சஞ்சி ராம், சிறப்பு காவல் அதிகாரி தீபக் கஜுரியா, சிறப்பு காவல் அதிகாரி சுரேந்தர் குமார், பர்வேஷ் குமார் மற்றும் விஷால் ஜங்கோத்ரா ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாவர். துணை காவல் ஆய்வாளர் ஆனந்த் தத்தா மற்றும் தலைமை காவலர் திலக் ராஜ் இருவரும் குற்றத்தை மறைத்து தடயங்களை அழித்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரசியல் கட்சிகளிடையே மாறி மாறி குற்றச்சாட்டுகள் பாய்ந்து வருகிறது. இந்த கொந்தளிப்புகளுக்கிடையே ஐந்து நபர்கள் இந்த காட்டுமிராண்டித்தனத்தை எதிர்த்து நீதிக்காக போராடி நம்பிக்கை அளிக்கின்றனர்.
ராகுல் பண்டிதா – இவர் ஒரு எழுத்தாளர் மற்றும் பத்திரிக்கையாளர். நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவம் குறித்து முதல் நாளில் இருந்தே தகவல்களை பதிவு செய்து வருகிறார். இவரது அறிக்கை வழக்கின் முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது.
தீபிகா சிங் ரஜாவத் – இவர் ஆசிஃபா தரப்பில் வாதாடும் வழக்கறிஞர். இந்த வழக்கில் இருந்து விலகிடவேண்டும் என கொலை மிரட்டல்கள் விடப்பட்டும் அச்சுறுத்தப்பட்டும் மனம் தளராமல் பாதிப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைக்க போராடவேண்டும் என உறுதியுடன் உள்ளார்.
நான் எத்தனை நாள் உயிரோடு இருப்பேன் என்பது எனக்குத் தெரியாது. நான் பாலியல் பலாத்காரம் செய்யப்படலாம். என்னுடைய கௌரவம் பாதிக்கப்படலாம். நான் கொலை செய்யப்படலாம். ’நாங்கள் உன்னை மன்னிக்கவே மாட்டோம்’ என என்னை மிரட்டினார்கள். நான் ஆபத்தில் இருக்கிறேன் என்பதை உச்சநீதி மன்றத்தில் கூறுவேன் என என்டிடிவி-க்கு அளித்த நேர்காணலில் ரஜாவத் தெரிவித்தார்.
ரமேஷ் குமார் ஜல்லா – குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளரான இவர் தனது விசாரணையை திட்டமிடப்பட்ட நேரத்திற்கு முன்பே நிறைவுசெய்து வழக்கு துரிதமாக முன்னேற உதவினார்.
தலிப் ஹுசைன் – இவர் உள்ளூர் வழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலர். கடந்த இரண்டு மாதங்களாக இந்த வழக்கில் நீதிக்காக போராடி வருகிறார். இந்த வழக்கு கவனத்தைப் பெற்ற பிறகு இவருக்கு கொலை மிரட்டல்கள் வந்தன. உதம்பூர் நகரில் குண்டர்களால் தாக்கப்பட்டார்.
ஜம்மு வர்த்தக சங்கத்தினர் (Jammu Chamber of Commerce) : செய்தியாளர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்து ஆசிஃபாவிற்கு தங்களது ஆதரவை தெரிவித்து ஜம்மு வழக்குரைஞர்கள் சங்கத்தின் தற்போதைய வேலை நிறுத்தப் போராட்டத்திலிருந்து விலகியுள்ளனர்.
இந்திய பார் கவுன்சிலைச் (பிசிஐ) சேர்ந்த ஐந்து பேர் கொண்ட குழு ஜம்மு காஷ்மீரின் கதுவா பகுதிக்குச் சென்று இந்தச் சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கையை தாக்கல் செய்ய உச்ச நீதி மன்றத்திடம் ஏப்ரல் 19-ம் தேதி வரை அவகாசம் பெறப்பட்டுள்ளதாக பிசிஐயின் தலைவர் மன்னன் மிஸ்ரா தெரிவித்தார். பிசிஐ முன்னாள் தலைவர் தருண் அகர்வால், பிசிஐ துணைத்தலைவர் எஸ் பிரபாகரன் மற்றும் ராமசந்திர ஜி ஷா, உத்தர்காண்ட் பார் கவுன்சிலைச் சேர்ந்த ரசியா பெய்க், வழக்கறிஞரான நரேஷ் தீக்ஷித் ஆகியோர் ஐந்து பேர் கொண்ட இந்தக் குழுவில் அடங்குவர்.
கட்டுரை : THINK CHANGE INDIA