‘ஓமந்தூரார் அரசு மருத்துவமனை’ இந்தியாவின் சிறந்த மருத்துவமனை ஆக தேர்வு: CAHO அறிவிப்பு!
ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, சென்னை மற்றும் கிறித்துவ மருத்துவக்கல்லூரி மருத்துவமனை (சிஎம்சி) ஆகியவை விருதுகளைப் பெற்ற முதன்மையான மருத்துவமனைகளாகும்.
கோவிட்-19 காலகட்டத்தில் பணியாளர்கள் மற்றும் பணி அமைவிட பாதுகாப்பில் மிகச்சிறப்பான செயல்பாட்டிற்காக இந்தியாவின் சிறந்த மருத்துவமனைகளுக்கு விருதுகளை CAHO அமைப்பு அறிவித்துள்ளது.
இவ்விருதுகளுக்காக இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மருத்துவமனைகளில் இருந்து 100-க்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன. அதன்படி,
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, மற்றும் கிறித்துவ மருத்துவக்கல்லூரி மருத்துவமனை (சிஎம்சி) ஆகியவை விருதுகளைப் பெரும் முதன்மை மருத்துவமனைகளாகும்.
பணியாளர்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழலை வழங்குவதற்கு மருத்துவமனைகள் எடுத்த முயற்சிகள், செய்த புத்தாக்கங்கள் மீதான தகவல் தொகுப்பை வெளியிடவும் CAHO திட்டமிட்டிருக்கிறது.
சுகாதாரப் பராமரிப்பு சேவைகளின் தரம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவது மீது தன்னை அர்ப்பணித்திருக்கின்ற இந்திய சுகாதார நிறுவனங்களின் ஒருங்கமைப்பான CAHO, பணியாளர்கள் மற்றும் பணியிட பாதுகாப்பில் நேர்த்திக்காக மருத்துவமனைகளுக்கு 2020 விருதுகள் போட்டியில் வெற்றி பெற்றவர்களை அறிவித்திருக்கிறது.
கோவிட்-19 பெருந்தொற்று சூழலில், பணியாளர் / பணி அமைவிட பாதுகாப்பிற்காக மருத்துவமனைகளால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அடிப்படையில் இந்த வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஐசிஎம்ஆர் –ன் NIOH அமைப்பு மற்றும் HSE தொழில்முறை பணியாளர்களின் உலகளாவிய சங்கம் ஆகியவற்றோடு இணைந்து CAHO நடத்திய இந்நிகழ்வில் வெளிநாடுகளிலிருந்து 7 மருத்துவமனைகள் உட்பட, 100-க்கும் அதிகமான மருத்துவமனைகள் பங்கேற்றன.
மிகப்பெரிய மருத்துவமனைகள் வகையில், சிஎம்சி வேலூர் (தமிழ்நாடு) மற்றும் அம்ரிதா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் (கொச்சி) ஆகியவை முதல் மற்றும் இரண்டாவது பரிசுகளை முறையே வென்றன. ராமய்யா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை (பெங்களுரு) மற்றும் எனிபோயா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை (மங்களூர்) ஆகியவற்றிற்கு ஊக்குவிப்பு விருதுகள் வழங்கப்பட்டன.
பெரிய மருத்துவமனைகள் வகையில் (300-600 படுக்கை வசதிகள்) ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி (சென்னை) மற்றும் ஃபோர்டிஸ் மருத்துவமனை, மொஹாலி (பஞ்சாப்) முதல் மற்றும் இரண்டாம் பரிசுகளை வென்றன.
இவ்வகையினத்தில் பாய் ஜெர்பாய் வாடியா குழந்தைகள் மருத்துவமனை (மும்பை) மற்றும் தவாம் மருத்துவமனை (அபுதாபி), ஊக்குவிப்பு விருதுகளை வென்றன.
நடுத்தர அளவு மருத்துவமனைகள் வகையினத்தில் (100-300 படுக்கைகள்) ஆஸ்டர் சனாத் மருத்துவமனை (ரியாத்) மற்றும் விபத்து மற்றும் அவசரநிலை சிகிச்சை மையம் (பெங்களுரு மருத்துவக்கல்லூரி) ஆகியவை முறையே முதல் இரண்டு பரிசுகளை வென்ற நிலையில் ஆனந்த் சர்ஜிக்கல் ஹாஸ்பிட்டல் (அகமதாபாத் மற்றும் கோஹினூர் ஹாஸ்பிட்டல்ஸ் (மும்பை) ஊக்குவிப்பு விருதுகளைப் பெற்றன.
சிறிய மருத்துவமனைகள் வகையினத்தில் (100 படுக்கைகளுக்கும் குறைவான) கொலம்பியா ஏசியா ஹாஸ்பிட்டல் ஹெப்பால் (பெங்களுரு) முதல் பரிசையும் தர்மகிரி செயிண்ட் ஜோசப் ஆஸ்பிட்டல் (கோழிக்கோடு, கேரளா) இரண்டாம் பரிசையும் பெற்றன. ஓக்ஹார்ட் ஹாஸ்பிட்டல் (தானே) மற்றும் ARMC AEGiS மருத்துவமனை (மலப்புரம், கேரளா) ஆகியவற்றிற்கு ஊக்குவிப்பு விருதுகள் தரப்பட்டன.
CAHO அமைப்பின் தலைவர் டாக்டர் விஜய் அகர்வால் இதுபற்றி பேசுகையில், “மருத்துவமனைகளின் கோவிட் வார்டுகளில் பணியாற்றுபவர்களில் 11%-க்கும் அதிகமானவர்களுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டிருப்பதாக இந்த விருதுகளுக்கான விண்ணப்பங்களின் புள்ளிவிவரத் தரவுகள் சுட்டிகாட்டுகின்றன. தங்களது பணியாளர்களை பாதுகாப்பது மருத்துவமனை நிர்வாகத்திற்கு மிகவும் சிரமமான, மனஅழுத்தம் தருகின்ற காலகட்டமாக இருந்து வருகிறது. குறைவான ஆதாரவளங்கள் இருந்தபோதிலும் கோவிட் – 19 தொற்றிலிருந்து தங்கள் பணியாளர்களை பாதுகாக்க பல மருத்துவமனைகள், பல புத்தாக்கங்களை மற்றும் அறிவார்ந்த நடவடிக்கைகளை அறிமுகம் செய்திருக்கின்றன.
”பாதுகாப்பான, மனஅழுத்தம் இல்லாத பணிச்சூழலை தங்கள் பணியாளர்களுக்கு வழங்க சிறந்த முயற்சிகளை எடுக்கின்ற மருத்துவமனைகளை அங்கீகரித்து கௌரவிப்பதே இவ்விருதுகளின் நோக்கம்” என்று கூறினார்.
சிகிச்சையளிக்கப்பட்ட நோயாளிகள், கோவிட் மற்றும் கோவிட் அல்லாத வார்டுகளில் தொற்று ஏற்படாத பணியாளர்களின் எண்ணிக்கை, மருத்துவமனைகள் எடுத்த பணியிட பாதுகாப்பு நடவடிக்கைகள் உட்பட, பல்வேறு நடவடிக்கைகள் விருது மதிப்பீட்டிற்காக கவனத்தில் கொள்ளப்பட்ட அம்சங்களாகும்.