கேன்சரை கண்டறியும் Nanofibre: ஆண்டுக்கு ரூ.2.2 கோடி வருமானம் ஈட்டும் இளம் தொழில் முனைவோர்!
கல்வியறிவற்றவர்கள் நிறைந்த ஓர் குக்கிராமத்தில் பிறந்து, கடும் வறுமையான குடும்பச் சூழ்நிலையில் வளர்ந்து, அன்றாட உணவுக்கே கஷ்டப்படும் ஓர் குடும்பத்தில் இருந்து வந்து, இன்று ஆண்டுக்கு ரூ. 2.2 கோடி வருவாய் ஈட்டும் கேன்சரை கண்டறியும் கருவி தயாரிக்கும் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்துகிறார் சந்தீப்.
’ஏழையாக பிறந்தது குற்றமல்ல, ஆனால் ஏழையாகவே வாழ்ந்து மறைவது நம் குற்றமே’ என்று உழைப்பின் பெருமையை விளக்கும் ஓர் பொன்மொழியொன்று உண்டு. இன்று வாழ்க்கையின் உச்சத்தைத் தொட்டவர்களில் பெரும்பாலானவர்கள் ஏழ்மையோடு போராடி வென்றவர்களே.
அப்படியொரு வெற்றியாளர்தான் சந்தீப் பட்டேல். கல்வியறிவற்றவர்கள் நிறைந்த ஓர் குக்கிராமத்தில் பிறந்து, அன்றாட உணவுக்கே கஷ்டப்படும் ஓர் குடும்பத்தில் இருந்து வந்து, இன்று ஆண்டுக்கு ரூ. 2.2 கோடி வருவாய் ஈட்டும் கேன்சரை கண்டறியும் நேனோபைபர் தயாரிக்கும் 'E-Spin NanoTech' எனும் நிறுவனத்தை உருவாக்கி நடத்தி வருகிறார் இவர்.
இவரின் நிறுவனம் புற்றுநோய் கண்டறிதல், ஆப்டிக்கல் சென்சார்கள், காற்று வடிகட்டுதல் போன்றவற்றுக்கான நேனோ ஃபைபர்களை உருவாக்கி வருகிறது. இவரது குழந்தைப் பருவம் மிகுந்த சிரமங்கள் நிறைந்ததாகவும், கஷ்டங்களை கொண்டதாகவும் இருந்தது.
மகாராஷ்டிராவில் உள்ள பிம்ப்ரி என்ற குக்கிராமத்தில் ஒரு சிறிய மண் வீட்டில் சந்தீப் வளர்ந்தார். அவரது கல்வியறிவு இல்லாத பெற்றோர் ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்தனர். சந்தீப்பும், அவரது உடன்பிறப்புகளும் பெரும்பாலான நேரங்களில் பசியுடனே இரவு படுக்கும் நிலையில் கடும் வறுமையான குடும்பச் சூழ்நிலை.
அந்த கிராமத்தில் அடிப்படை சுகாதார மற்றும் கல்வி வசதிகள் ஏதும் கிடையாது. ஆனாலும் சந்தீப் நன்கு கல்வி கற்று வாழ்க்கையில் முன்னேற விரும்பினார்.
இதுகுறித்து எஸ்எம்பி ஸ்டோரியிடம் சந்தீப் கூறியதாவது,
“இவ்வளவு வறுமையில் இருந்த நான், இன்று கான்பூரை தளமாகக் கொண்ட ஈ-ஸ்பின் நேனோடெக் நிறுவனத்தின் நிறுவனர். எங்கள் நிறுவனம் தற்போது ஆண்டுக்கு ரூ.2 கோடிக்கு மேல் சம்பாதிக்கிறது, மேலும் நிகழாண்டு ரூ.10 கோடியை இலக்காக கொண்டு செயல்படுகிறது,” என்கிறார்.
ஒரு காலத்தில் ஒரு வேளை உணவுக்காக போராடியவன், இன்று எனது கிராமத்தில் நடைபெறும் திருமணம் உள்ளிட்ட இதர நிகழ்ச்சிகளுக்குத் தலைமை விருந்தினராக அழைக்கப்படுகிறேன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை என்கிறார் 32 வயதே ஆன சந்தீப்.
கல்வியின் ஆர்வம் மிகுந்த சந்தீப்பை, அவரது மாமா, அருகில் உள்ள தாந்த்ரா என்ற கிராமத்துக்கு அழைத்துச் சென்று கல்வியறிவு வழங்கினார். இதுவே அவரது வாழ்க்கையில் ஓர் திருப்புமுனையாக அமைந்தது.
அங்கு நான் கல்வி கற்கும்போது என்னை அறியாமலேயே எனக்கு அறிவியலில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. இதனால் கிராமத்தில் தொலைக்காட்சிகள் மற்றும் டீசல் என்ஜின்களின் இயந்திர பழுதுபார்க்கும் பணிகளை சந்தீப் ஆர்வமுடன் கவனிப்பார்.
இந்நிலையில் பள்ளியில் பட்டம் பெற்ற பிறகு, சந்தீப் தனது சொந்த கிராமமான பிம்ப்ரிக்கு திரும்பினார். அங்கும் அவர் தொடர்ந்து படித்து வந்தார். ஆனால் கிராமத்தில் ஒரு சிறிய கடையைத் தொடங்கி நடத்திய தனது தாய்க்கும் உதவி செய்து வந்தார்.
குடும்பத்தில் மூத்த மகன் என்பதால், நான் சில பொறுப்புகளை ஏற்க வேண்டியிருந்தது. காலையில் பள்ளி, மாலை கடை, இரவு நேரங்களில் புத்தக வாசிப்பு என காலம் ஓடியது. இந்நிலையில் நான் எனது மூத்த இடைநிலைக் கல்வியை முடிக்க மீண்டும் தாந்த்ராவுக்குத் திரும்பினேன். பின்னர் பிடெக் படிக்க விரும்பினேன். தொடர்ந்து கான்பூர் ஐஐடியில் பிஎச்டி சேர்ந்தேன்.
அங்கே அவருடன் பயின்ற ஒருவர் ஈ-ஸ்பின் இயந்திரத்தை வடிவமைக்கவும், செயல்படுத்தவும் போராடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த இயந்திரத்தை வடிவமைக்கும் பொறுப்பு சந்தீப்பிடம் வழங்கப்பட்டது. இதுவே அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதுவே தொழில்நுட்பத்தை தயாரிப்புகளாக மாற்றும் அவரது நேனோ தொழில்நுட்ப தயாரிப்புகளின் மீதான ஆர்வத்தைத் தூண்டியது.
அந்நேரத்தில், ஃபைபர் ஆராய்ச்சித் துறையில் தரமான ஊழியர்கள் கிடைப்பது பெரும் பிரச்னையாக இருந்தது. மேலும் மிகக்குறைந்த செலவில் இத்துறையில் சாதிக்கவேண்டிய சவாலையும் இந்தியா எதிர்கொண்டிருந்தது.
”பல மாதங்களாக நான் மேற்கொண்ட ஓர் முழுமையான ஆராய்ச்சிக்குப் பிறகு இச்சிக்கல்களை தீர்க்கும் வழியைக் கண்டறிந்தேன். மேலும், அதே நேரத்தில் நான் எனது சொந்த நிறுவனத்தையும் தொடங்க விரும்பினேன். ஏனெனில் இந்தியா நேனோ தயாரிப்புகளுக்கான மிகப் பெரிய சந்தையைக் கொண்டுள்ளதை அறிந்தேன்.”
இதையடுத்து, கான்பூர் ஐஐடி.யில் உள்ள SIDBI Incubation and Innovation Centre (SIIC)
உதவியுடன் 2010ல் E-Spin NanoTech தொடங்கினேன். எனது நிறுவனம் மூலம் உயர்தரமான, குறைந்த விலை நேனோ ஃபைபர் தயாரிப்புகளை வழங்கி, இத்துறையின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றுவதில் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் எங்கள் தயாரிப்புகள் பல்வேறு துறைகளில் பரவலான பயன்பாடுகளைக் கொண்டுள்ளன என்கிறார்.
ஏனெனில், அப்போது இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட பெரும்பாலான நேனோ இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டவையாக இருந்தன. இவற்றை சிறந்த காப்புறுதி சேவைகளுடன் மலிவான விலையில் சந்தீப் தயாரித்தளித்தார். இருப்பினும் சந்தீப்புக்கு நிலையான இருப்பிடம் மற்றும் பட்டறை போன்றவை இல்லாததால் மிகுந்த சிரமத்துக்குள்ளானார்.
அப்போது கான்பூரில் நல்ல தரமான தயாரிப்புகளை வழங்கக்கூடிய எந்த ஓர் நல்ல உற்பத்தியாளர்களும் இல்லை. நல்ல பயிற்சி பெற்ற ஊழியர்களும் கிடைக்கவில்லை. எனவே, நான் டெல்லிக்குச் செல்ல வேண்டியிருந்தது. மேலும், ஊழியர்கள் தங்கள் குடும்பங்களுக்கு அருகில் வாழ்ந்தால்தான், அவர்கள் கடினமாக உழைத்து பணத்தை மிச்சப்படுத்துவார்கள் என்றும் நான் நம்பினேன். எனவே, இளைஞர்களை வேலைக்கு அமர்த்த முடிவு செய்தேன். நகரத்திலிருந்து இளைஞர்களை வேலைக்கு அமர்த்தவும், அவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் திட்டமிட்டேன்.
இதை நான் செயல்படுத்தியதால், ஈ-ஸ்பின் வாடிக்கையாளர்கள் இந்தியா முழுவதும் பல்வேறு நேனோ ஆராய்ச்சி ஆய்வகங்களை உருவாக்கி செயல்பட்டு வருகின்றனர். இதனால் எங்கள் நிறுவனத்தின் ஆண்டு வருமானம் ரூ.2.2 கோடியாக உயர்ந்துள்ளது.
இப்போது, நாங்கள் நேனோ ஃபைபர் அடிப்படையிலான காற்று வடிகட்டும் முகமூடி, மற்றும் கேபின்களில் காற்று சுத்திகரிப்பு வடிவமைப்பு போன்றவற்றை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறோம் என்கிறார்.
மேலும், ஒரு நல்ல உற்பத்தி அமைப்பு மற்றும் தனித்துவமான செயல்முறை வடிவமைப்புகளுடன் இத்துறையில் களமிறங்கும் யாரும் எளிதில் வெற்றியடைய முடியும் என்கிறார் இவர். அரசு அதிக டெண்டர்களை எங்களுக்கு அளித்து அதரவு தெரிவித்து ஊக்கப்படுத்தினால், எங்கள் நிறுவனம் மட்டுமன்றி நாட்டு மக்களும் பயனடைவார்கள் என்று சந்தீப் கருத்து தெரிவிக்கிறார்.
(இந்த கதை SME களின் வெற்றிக் கதைகளைக் காண்பிப்பதற்காக MSME அமைச்சகத்துடன் இணைந்து வெளியிடப்பட்டுள்ளது)
ஆங்கிலத்தில் ரிஷப் மன்சூர், | தமிழில் திவ்யாதரன்