உடல்நிலை சரியில்லாத போதும் மகனுக்காக உற்சாகம்: ரோஹித்திற்கு முத்தமழை பொழிந்து தாயார் நெகிழ்ச்சி!
"என்னுடைய மகிழ்ச்சியைத் தெரிவிக்க வார்த்தைகள் இல்லை. ரசிகர்களின் உற்சாகத்தைப் பாருங்கள்! இது போன்ற ஒரு சூழ்நிலையை நான் அனுபவித்ததில்லை,என்று நெகிழ்ந்துள்ளார் ரோஹித்தின் தாயார்.
இந்திய அணியின் உலகக்கோப்பை வெற்றிக் கொண்டாட்ட பேரணி முடிந்து தன் அம்மாவை வெற்றிக் கேப்டன் ரோஹித் சர்மா சந்தித்த போது ரோஹித் சர்மாவிற்கு முத்தங்களை இட்டார் தாயார் பூர்ணிமா. இந்த வீடியோ வைரலானது.
'ஹிட்மேன்' என்று செல்லமாக அழைக்கப்படும் ரோஹித் சர்மா, இந்த உலகக்கோப்பைக்குப் பிறகு டி20 ஆடமாட்டேன் என்று முன்னமேயே தெரிவித்ததைப் பகிர்ந்து கொண்டார். கபில்தேவ், தோனி ஆகியோர் பட்டியலில் தன் பெயரையும் சாதனையாளராக ரோஹித் சர்மா இணைத்துக் கொண்டார்.
ரோஹித்தை விடவும் ஆக்ரோஷமாக, வியூகங்களில் தலைசிறந்த விராட் கோலிக்கு இந்த கொண்டாட்ட வாய்ப்பு அவரது கேப்டன்சி காலத்தில் கிடைக்காவிட்டாலும் இறுதிப் போட்டியில் அதிகபட்ச ஸ்கோருடன் கோலியின் பங்கு என்றும் பேசப்படக்கூடியதே. பும்ராவின் அருமையான 2 பவுல்டுகள், ஹர்திக் பாண்டியாவின் கிளாசன் விக்கெட் மற்றும் கடைசி ஓவர் கட்டுப்படுத்தல் இந்திய அணிக்கு 7 ரன்கள் வித்தியாச இறுதி வெற்றியைப் பெற்றுக்கொடுத்தது.
வெற்றிக் கொண்டாட்டத்தில் விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் அனைத்து வேறுபாடுகளையும் கருத்து வேற்றுமைகளையும் தள்ளி வைத்து விட்டு வான்கடேயில் நடனமாடி ரசிகர்களை மகிழ்வித்தார்கள்.
![rohit and mother](https://images.yourstory.com/cs/18/7be5482008d911e9bb473d9d98ed1e05/Imageftdj-1720258049122.jpg?fm=png&auto=format&w=800)
ரோஹித் சர்மா குறித்து அவரது தாயார் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்குக் கூறும்போது,
“இந்த நாளைக் காண்பேன் என்று நான் நினைக்கவில்லை. உலகக் கோப்பைக்கு முன்பாக எங்களைச் சந்தித்தான் ரோஹித் அப்போது இதுதான் கடைசி டி20 உலககோப்பை, டி20 போட்டிகளில் இனி ஆட மாட்டேன் என்றான். சரி, வென்று வா மகனே என்று சொல்லி அனுப்பினேன். எனக்கு உடல் நிலை சரியில்லை, மருத்துவரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி வைத்திருந்தேன். ஆனாலும் இந்த நாளை மறக்க முடியுமா? அதனால் வந்து விட்டேன்.
"என்னுடைய மகிழ்ச்சியைத் தெரிவிக்க வார்த்தைகள் இல்லை. ரசிகர்களின் உற்சாகத்தைப் பாருங்கள்! இது போன்ற ஒரு சூழ்நிலையை நான் அனுபவித்ததில்லை. இத்தனை ரசிகர்களின் அன்பிற்குப் பாத்திரமானவனாக என் மகன் இருக்கிறான் என்பது பெருமையளிப்பதோடு அவனது கடின உழைப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் எடுத்துக் காட்டானது. இன்று நான் ஒரு மகிழ்ச்சியான தாய்...” என்றார்.
உலகக்கோப்பை டி20யை வென்ற பிறகே விராட் கோலி, கேப்டன் ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டி20-யிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது என்பதோடு இளம் வீரர்களுக்கு நற்செய்தியாகவும் அமைந்துள்ளது.