14 வயதில் கிரான்ட் மாஸ்டர் ஆன பரத் சுப்பிரமணியம்; விஸ்வநாதன் ஆனந்த் வாழ்த்து!
சென்னையைச் சேர்ந்த 14 வயதே ஆன பரத் சுப்ரமணியன் சர்வதேச சதுரங்க போட்டி தொடரில் அசத்தலாக விளையாடி இந்தியாவின் 73வது கிராண்ட் மாஸ்டராகியுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த 14 வயதே ஆன பரத் சுப்ரமணியன் சர்வதேச சதுரங்க போட்டி தொடரில் அசத்தலாக விளையாடி இந்தியாவின் 73வது கிராண்ட் மாஸ்டராகியுள்ளார்.
நடிப்பில் ஆஸ்கார் விருது எப்படி உயரிய ஒன்றாகக் கருதப்படுகிறதோ, அதேபோல் தான் செஸ் விளையாட்டு வீரர்களுக்கு கிராண்ட் மாஸ்டர் பட்டம் என்பது மிகப்பெரிய கெளரவாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் இதுவரை 70க்கும் மேற்பட்டோர் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்றிருந்தாலும் இன்றளவும் செஸ் கேம் என்றாலே நம் அனைவரது நினைவிற்கும் வருவது ‘விஸ்வநாதன் ஆனந்த்’ என்ற ஒற்றைப் பெயர் தான். விஸ்வநாதன் ஆனந்தையே தட்டித்தூக்கும் விதமாக 14 வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறுவன் ஒருவர்.
14 வயதிலேயே அசத்தல்; யார் இந்த பரத் சுப்பிரமணியம்?
சென்னையச் சேர்ந்த பரத் சுப்பிரமணியம் தனது 5 வயது முதலே தந்தை ஹரிசங்கரிடம் சதுரங்கம் விளையாட கற்று வந்தார். அதன் பின்னர், கிராண்ட்மாஸ்டர் ராமச்சந்திரன் ரமேஷிடம் சதுரங்க விளையாட்டின் நுணுக்கங்களை கற்றுக் கொண்ட பரத் சுப்பிரமணியம், 2019ம் ஆண்டு நடந்த கிராண்ட்மாஸ்டர் அலெக்சாண்டர் கோலோஷ்சபோவின் பயிற்சி அமர்வுகளில் கலந்து கொள்ளத் தொடங்கினார்.
இந்த அமர்வுகள் அவரது ஆட்ட நுணுக்கங்களை மேம்படுத்துவதில் பயனுள்ளதாக இருந்தது. மேலும், அவரது நெறிமுறைகளை வேகமாக அடைய உதவியது.
ஜனவரி 2020ம் ஆண்டு முன்னாள் உலக சாம்பியன் ஜிஎம் விளாடிமிர் க்ராம்னிக் மற்றும் முன்னாள் உலக சதுரங்க சவாலாளரான ஜிஎம் போரிஸ் கெல்ஃபான்ட் ஆகியோரால் நடத்தப்பட்ட மைக்ரோசென்ஸ் நெட்வொர்க்குகள் சிறப்பு பயிற்சி முகாமிற்கு பரத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தனது சிறப்பான காய் நகர்த்தும் திறமையால் பரத், 2020 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற சதுரங்கப் போட்டித் தொடரில் 11வது இடத்தையும், கடந்த ஆண்டு பல்கேரியாவில் நடந்த தொடரில் 4 ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.
இந்தியாவின் 73வது கிராண்ட் மாஸ்டர் பட்டம்:
இத்தாலியில் புகழ்பெற்ற வெர்கானி கோப்பை செஸ் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னையைச் சேர்ந்த 14 வயதே ஆன பரத் சுப்பிரமணியம் பங்கேற்றார். 9 சுற்றுகள் கொண்ட இந்த தொடரில், 6.5 புள்ளிகள் அதாவது 6 தொடரில் வெற்றி, இரண்டில் தோல்வி, ஒரு டிரா என புள்ளிகளைப் பெற்று 7ம் இடத்தை பிடித்துள்ளார்.
கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறுவதற்கான 3வது தகுதியை இந்த தொடர் மூலம் அடைந்துள்ளார் பரத் சுப்பிரமணியம். ஆனால், கிராண்ட் மாஸ்டருக்குத் தேவையான 2500 எலோ ரேட்டிங் புள்ளிகளைப் பெற்றதையடுத்து, கிராண்ட் மாஸ்டர் பட்டத்தைப் பெற்றார்.
வெர்கானி கோப்பை செஸ் போட்டியில் பரத் 7வது இடத்தை பிடித்திருந்தாலும், 3வது ஜிஎம் தகுதி பெற்றதையடுத்து கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றுள்ளார். இதற்கு முன்னதாக 2020ம் ஆண்டு பிப்ரவரியில் மாஸ்கோவில் நடந்த ஏரோபிளாட் ஓபனில் 11வது இடத்தை பரத் பெற்றாலும் முதல் ஜிஎம்முக்கான தகுதியையும், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பல்கேரியாவில் நடந்த ஜூனியர் ரவுண்ட் செஸ் போட்டியில் 4வது இடத்தை பரத் பெற்று 2வது ஜிஎம் தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.
’உலகின் அதிவேக சதுரங்க வீரர்’ ஐந்து முறை ‘உலக சாம்பியன் பட்டம்’ வென்றவருமான இந்தியாவின் செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த், திறமையான சிறுவனான பரத் சுப்பிரமணியம் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றது மகிழ்ச்சி அளிப்பதாகப் பாராட்டியுள்ளார்.
அனைத்து இந்திய செஸ் சம்மேளனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில், “பரத் சுப்பிரமணியம் நாட்டின் 73-வது கிராண்ட் மாஸ்டராக உருவாகியுள்ளார். அவருக்கு அனைத்து இந்திய செஸ் சம்மேளனம் வாழ்த்து தெரிவிக்கிறது” எனத் தெரிவித்துள்ளது.