CSK-க்கு விசில் போடு: தமிழகத்திற்கு 450 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்!
கொரோனா இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், கொரோனாவுக்கு எதிரான போரில் உதவும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தமிழக அரசிடம் 450 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கியுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தலைநகர் தில்லி உள்ளிட்ட பல பகுதிகளில் கொரோனா பாதிப்பு தீவிரமாக இருப்பதோடு, கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்கான ஆக்சிஜன் தட்டுப்பாடும் நிலவுகிறது.
கொரோனா பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில் சேவை அமைப்புகளும் நிறுவனங்களும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னை ஐபிஎல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில், தமிழக மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட 450 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டுள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இயக்குனர் ஆர்.ஸ்ரீனிவாசன் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தலைவர் ரூபா குருனாத் ஆகியோர் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, ஆகிச்ஜன் செறிவூட்டிகளை அளித்தனர்.
கொரோனா நிவாரணப்பணிகளில் ஈடுபட்டுள்ள பூமிகா அறக்கட்டளை வாயிலாக இந்த ஆக்சிஜன் செறிவூட்டிகள் கொள்முதல் செய்யப்படுவதாகவும், இதன் விநியோகத்திலும் அறக்கட்டளை உதவி செய்யும் என்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்சிஜன் செறிவூட்டிகளில் முதல் பகுதி வந்து சேர்ந்துள்ளதாகவும், எஞ்சியவை அடுத்த வாரம் வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகள் மற்றும் சென்னை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வரும் கொரோனா நோயாளிகள் நலனுக்காக இவை வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டிவிட்டர் பக்கத்திலும் தகவல் வெளியிட்டுள்ளது.
“நம்ம தமிழகத்தின் நலனுக்காக, 450 ஆக்சிஜன் செறிவூட்டிகளை, பூமிகா அறக்கடளை வாயிலாக வழங்குவதன் மூலம் எங்கள் பங்களிப்பை செலுத்துகிறோம்,” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
”தமிழக மக்கள் மற்றும் சென்னை மக்கள் சென்னை சூப்பர் கிங்க்சின் இதயத்துடிப்பாக விளங்குபவர்கள். இந்த பெருந்தொற்றுக்கு எதிரான போரில் நாம் ஒன்றாக இருக்கிறோம் என்பதை அவர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறோம்,” என சென்னை அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.