சென்னையின் அடையாளமான 'டிரைவ் இன் உட்லாண்ட்ஸ்’ ஹோட்டல் மீண்டும் திறப்பு; ஆனா எங்க தெரியுமா?
சென்னையில் வளர்ந்தவர்களுக்கு, டிரைவ்-இன் உட்லாண்ட்ஸ் ஓட்டல் என்றதுமே சுவையான இனிய நினைவுகள் உடனடியாக மனதில் தோன்றும். சில வருடங்களுக்கு மூடப்பட்ட இந்த ஹோட்டல் தற்போது மீண்டும் சென்னையில் திறக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வளர்ந்தவர்களுக்கு, டிரைவ் இன் உட்லாண்ட்ஸ் ஓட்டல் என்றதுமே சுவையான இனிய நினைவுகள் உடனடியாக மனதில் தோன்றும். சென்னையின் மைய பகுதியில் அமைந்திருந்த இந்த டிரைவ் இன் ஓட்டலில் காரில் அமர்ந்த படி உணவை சுவைக்கலாம் என்பதோடு, விரும்பினால் அதன் மேஜைகளில் மணிக்கணக்கில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கலாம்.
இப்போது 18 ஆண்டுகளுக்கு பிறகு இதே அனுபவத்தை அளிக்கும் வகையில், 'உட்லாண்ட்ஸ் டிரைவ் இன் ஓட்டல்' சென்னை அரும்பாக்கத்தில், மரங்கள் அடர்ந்த சூழலில் துவக்கப்பட்டுள்ளது.
சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக திகழ்ந்த டிரைவ் இன் உட்லாண்ட்ஸ் ஓட்டல், 1962ம் ஆண்டு சென்னை கதீட்ரல் சாலையில் அமைந்திருந்த தோட்டக்கலை பூங்கா வளாகத்தில் துவங்கியது. சென்னை மைலாப்பூர் பகுதியில் நியூ உட்லாண்ட்ஸ் ஓட்டலை நடத்தி வந்த கே.கிருஷ்ணா ராவ், தோட்ட கலை துறையிடம் இருந்து குத்தகை பெற்று இந்த ஓட்டலை துவக்கினார்.
கார்களில் அமர்ந்த படி, உணவு சாப்பிட வழி செய்த இந்த டிரைவ் இன் பாணியிலான ஓட்டல் விரையில் சென்னைவாசிகள் மத்தியில் வரவேற்பை பெற்றது. பசுமையான மரங்கள் நிறைந்த சூழலில் இந்த ஓட்டலில் அமைதியாக உணவு உட்கொள்வதை பலரும் விரும்பினர்.
அந்த ஓட்டலின் மசாலா தோசை, சோளா பட்டுரா, பில்டர் காபி போன்ற உணவுகள் பலரது விருப்பத்தேர்வாயின. மேலும், பிரபலங்களும், இந்த ஓட்டலை விரும்பி பயன்படுத்தினர்.
குறிப்பாக மறைந்த பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் இந்த ஓட்டலின் நட்சத்திர வாடிக்கையாளர்களில் ஒருவர். பாக்கெட்டில் பல வண்ண பேனாக்களோடு, தலைப்பாகை அணிந்த ஸ்ரீனிவாசை இந்த ஓட்டலில் தவறாமல் காணலாம். 25 ஆண்டுகள் அவர் தினமும் இந்த ஓட்டலில் தனது நேரத்தை சில மணி நேரம் செலவிட்டார்.
சந்திப்புகளுக்கும் பெயர் பெற்றதாக இந்த ஓட்டல் மாறியது. விற்பனை பிரதிநிதிகள் காலையில் இந்த ஓட்டலில் சந்தித்து காபி அருந்திவிட்டு, பின்னர், மாலையில் மீண்டும் சந்தித்து பேசுவது வழக்கம். அதே போல, எழுத்தாளர்களும், கதாசரியர்களும் இங்கு சந்தித்து பேசுவது வழக்கம். இந்த அமைதியான சூழல் உரையாடல்களுக்கு உதவியது.
12 ஏக்கர் பரப்பில் அமைந்திருந்த பசுமையான மரங்களுக்கு நடுவே இருந்த இந்த ஓட்டலை சென்னையின் இனிமையான அனுபவங்களில் ஒன்று என கூறலாம். எனினும், 2008ம் ஆண்டில் குத்தகை முடிந்த பிறகு, வேளாண் தோட்டக்கலை கழகம் மற்றும் மாநில அரசு இந்த இடத்தை செம்மொழி பூங்காவாக மாற்றியது.
தற்போது இந்த ஓட்டலின் நினைவுகளையும், அனுபவத்தையும் மீட்டெடுக்கும் வகையில், புதிய டிரைவ் ஒன் உட்லாண்ட்ஸ் ஓட்டல், சென்னை அரும்பாக்கத்தில் திறக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் மரங்கள் நிறைந்த சூழலில் ஓட்டல் அமைந்துள்ளது.
உட்லாண்ட் நிறுவனரின் பேத்தி சுசீத்ரா ராவ் மற்றும் உடுப்பி ஹோமில் மத்ஸ்யா நடத்தி வரும் ராம் பட் இணைந்து இந்த புதிய ஓட்டலை துவக்கியுள்ளனர்.
டிரைவ் இன் ஓட்டல் நினைவுகளை அளிக்கும் வகையில் இந்த ஓட்டலை அமைத்துள்ளதாகவும், பி.பி.ஸ்ரீனிவாஸ் நினைவாக ஒரு மூலையை உருவாக்கியுள்ளதாகவும் ராம் பட், இது தொடர்பாக ஆங்கில நாளிதழ் இந்துவிடம் தெரிவித்துள்ளார். மேலும், பழைய ஓட்டலின் புகைப்படங்கள் பலவும் இடம்பெற்றுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன் இந்த இடத்தை கண்டறிந்து, மரங்களை வளர்த்து இந்த இடத்தை தயார் செய்துள்ளனர். பிரத்யேக கிரானைட் கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
தற்போதைய புதிய ஓட்டலில் 20 கார்கள் நிறுத்தும் வசதி உள்ளது. குளிர்சாதன அறையில் 100 பேர அமர்ந்து சாப்பிடலாம். வெளியே உள்ள வராண்டாவில் 40 பேர் அமரலாம்.
திறக்கப்பட்ட சில நாட்களிலேயே மூத்த குடிமக்கள் பலர் இந்த ஓட்டலுக்கு வந்து சாப்பிடும் வழக்கம் கொண்டுள்ளனர். இங்கேயே நடை பயிற்சியும் மேற்கொள்கின்றனர். குழந்தைகளுக்கான பகுதியும் அமைக்கப்பட உள்ளது.
சென்னையின் பழைய நினைவுகளோடு சுவையான உணவை ருசிப்பதற்கான இடமாக அமைந்துள்ளது.
தகவல் உதவி: தி ஹிந்து
Edited by Induja Raghunathan