அதானிக்கு நிதி அமைச்சகம் எதிர்ப்பா? விமான நிலையங்கள் குத்தகையில் உண்மை நிலை என்ன?
அதானி குழுமத்துக்கு நிதி அமைச்சகமும், நிதி ஆயோக்கும் எதிர்ப்பு!
கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்திய விமான நிலைய ஆணையத்தின் ஜெய்ப்பூர், கௌஹாத்தி, திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்களை பொதுத்துறை, தனியார் கூட்டு முயற்சியில் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடுவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்திய விமானநிலைய ஆணையம் நடத்திய ஏலப்போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு இயக்கி, பராமரித்து, மேம்படுத்துவதற்காக 50 ஆண்டுகளுக்கு இந்த விமான நிலையங்களைக் குத்தகைக்கு விடபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆறு விமானங்களை அதானி குழுமம் பெறுவதற்கு நிதி அமைச்சகமும், நிதி ஆயோக்கும் எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் பரவியது. இந்தத் தகவல் உண்மையில்லை என்று உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம் மறுத்துள்ளது. இது தொடர்பாக உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம், 6 விமான நிலையங்களும் பொதுத்துறை தனியார் கூட்டு ஏல முறையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதானி குழுமம் பொதுத்துறை தனியார் கூட்டு ஏல முறையில் ஆறு விமான நிலையங்களை பெறுவதற்கு நிதி அமைச்சகமும், நிதி ஆயோக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும், அதை அரசு புறந்தள்ளியதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த செய்தி முற்றிலும் தவறானது. இந்திய அரசின் ஏல ஒப்பந்த இணையதளத்தின் மூலமாக வெளிப்படையான முறையில் ஏலம் நடைபெற்றுள்ளது.
உலகெங்கிலும் இருந்து 25 நிறுவனங்கள் பதிவு செய்த நிலையில், ஆறு விமான நிலையங்களுக்கு 86 பதிவுகள் பெறப்பட்டன. 10 பல்வேறு நிறுவனங்களில் இருந்து 32 கோரிக்கைகள் ஆறு விமான நிலையங்களுக்கு பெறப்பட்டன.
இதில் கலந்து கொண்ட எந்த நிறுவனமும் எந்தவிதமான எதிர்ப்பையோ, வருத்தத்தையோ தெரிவிக்கவில்லை. அதேபோல விண்ணப்பங்கள் பரிசீலனையின்போது எந்த நிறுவனம் வெற்றிபெறும் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாமல் இருந்தது.
‘பயணி ஒருவருக்கான கட்டணத்திற்கு’ எந்த விண்ணப்பம் அதிக ஏலத்தொகையை குறிப்பிட்டிருக்கிறதோ, அதுவே வெற்றியாளராக தீர்மானிக்கப்படும். அந்த வகையில், தகுதி வாய்ந்த ஏல விண்ணப்பங்களைத் திறந்து பார்த்த பிறகு, அதானி எண்டெர்பிரைசஸ் லிமிடெட்டின் ஏலத்தொகை மற்ற நிறுவனங்களை விட ஆறு விமான நிலையங்களுக்கும் அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டது.
எனவே, செய்தித்தாளில் வெளியான செய்தி தவறானதாகும். உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் இது தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. 2020 அக்டோபர் 19 வெளியான தீர்ப்பில், இந்த மனுக்களைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம், இந்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட பொதுத்துறை தனியார் கூட்டு செயல்முறைக்கு ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.
தகவல் உதவி: பிஐபி | தொகுப்பு: மலையரசு