கொரோனா வைரஸ் பாதிப்பு: இந்தியாவில் மேலும் சிலருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது!
டெல்லி மற்றும் ஜெய்பூர் நோயாளியுடன் இருந்த சிலருக்கு கோவிட்-19 தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகவில், கொரோனா வைரஸ் அறிகுறிகளுக்காக, 284 பேர் வீட்டில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
ஜெய்பூரில் மேலும் ஒருவருக்கு கோவிட்-19 (கொரோனா வைரஸ்) உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே, உறுதி செய்யப்பட்ட இத்தாலிய நோயாளியின் மனைவியாவார். ஜெய்பூரில் 14 இத்தாலியர்கள், ஒரு இந்தியருக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதே போல் தில்லியில் கோவிட்-19 உறுதி செய்யப்பட்ட ஒருவரின் ஆக்ரா குடும்ப உறுப்பினர்கள் 6 பேருக்கும் கோவிட்-19 உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் தெலங்கானாவில் 2 பேருக்கு அதிகபட்ச காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.
இதனிடையே கர்நாடகா சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, மாநிலத்தில் கொரோனா வைரஸ் அறிகுறிகளுக்காக 284 பேரை வீட்டில் தனிமைப்படுத்தி கண்காணித்து வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
“பெங்களூரு உள்பட, மாநிலம் முழுவதும் 284 பேரை கொரோனா வைரஸ் அறிகுறிகளுக்காக கண்காணித்து வருகிறோம்,” என துறையின் பரவக்கூடிய நோய் பிரிவு இணை இயக்குனர் பிரகாஷ் குமார் ஐ.ஏன்.என்.எஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போது கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். கேரளாவில் மூன்று பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான செய்தியை அடுத்து, உடுப்பி, மைசூரு, சாம்ராஜ் நகர் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
ஜனவரி 20ம் தேதி முதல், கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில் 39.391 பயணிகள் கோரோனா வைரஸ் தொடர்பான தெர்மல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். பரிசோதிக்கப்பட்ட பயணிகளில் மூன்று பேர் மட்டுமே, கொரோனா வைரஸ் மையப் புள்ளியான சீனாவின் வூஹான் நகருக்கு சென்று வந்தவர்கள். 180 பேர் சீனாவின் மற்ற பகுதிகளுக்கு சென்று வந்தவர்கள்.
“அண்மையில் சீனா அல்லது கொரோனா வைரஸ் பாதித்த நாடுகளுக்குச் சென்று வந்த பயணிகள், கொரோனா அறிகுறிகளைக் கொண்டிருந்தால் உடனே சுகாதார அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருப்பதாகவும், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வழி செய்யப்படும்,” என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
செய்தி: பிஐபி | தமிழில்: சைபர்சிம்மன்