முகேஷ் அம்பானிக்கு ஆபத்து: Z+ பாதுகாப்பு கொடுத்த மத்திய அரசு!
இந்தியாவின் பில்லியனர் தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானிக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பை மத்திய அரசு அதிகரித்துள்ளது.
இந்தியாவின் பில்லியனர் தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானிக்கு இசட் ப்ளஸ் (Z Plus) பாதுகாப்பை மத்திய அரசு அதிகரித்துள்ளது.
முகேஷ் அம்பானிக்கு பாதுகாப்பு:
இந்தியாவின் 2வது பணக்காரராக மற்றும் உலக அளவில் பெரும் பிரபலமான பிசினஸ்மேனாக வலம் வரும் முகேஷ் அம்பானிக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பை அதிகரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி கால் பதிக்காத துறைகளே இல்லை எனச் சொல்லும் அளவிற்கு மின்சாரம், எரிபொருள், நுகர்பொருட்கள், தகவல் தொடர்பு, ரீடெய்ல் உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்து பில்லியன்களில் லாபம் ஈட்டி வருகிறார்.
இந்தியாவின் நம்பர் ஒன் தொழிலதிபரான முகேஷ் அம்பானிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு ஏஜென்சிகள் தெரிவித்ததை அடுத்து இதுவரை வழங்கப்பட்டு வந்த 'Z' பாதுகாப்பு 'Z +' பாதுகாப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இசட் ப்ளஸ் பாதுகாப்பு என்றால் என்ன?
இந்தியாவைப் பொறுத்தவரை விவிஐபி பிரிவைச் சேர்ந்த பிரபலங்கள், முக்கியத் தலைவர்களுக்கு, உளவுத்துறை கொடுக்கும் தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
ஆட்களுக்கு தக்கபடி, எக்ஸ், ஒய், இசட், இசட் பிளஸ், கருப்பு பூனை படை என 5 வகையான பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. வி.ஐ.பி-க்கள், வி.வி.ஐ.பி-க்கள், விளையாட்டு துறை, பொழுதுபோக்குத்துறை, அரசியல்வாதிகளுக்கும் இந்த வகையான பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகிறது.
இதில், இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்புதான் மிகவும் உயர்ந்த பாதுகாப்பு ஆகும். இதில் 10 கமாண்டோ படையினர் உட்பட 55 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
சிஆர்பிஎஃப் டைரக்டர் ஜெனரல் (டிஜி) குல்தீப் சிங் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நாடு முழுவதும் சிஆர்பிஎஃப் மூலமாக 119 நபர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. மத்திய உள்துறை அமைச்சகம் விஐபி பாதுகாப்பு பணிகளுக்காக புதிய பட்டாலியனை வழங்கியுள்ளது. ஏற்கனவே 6 பட்டாலியன்களில் ஒவ்வொரு பிரிவிலும் சுமார் 800 பேர் பணியாற்றி வருகின்றனர்,” எனத் தெரிவித்தார்.
முகேஷ் அம்பானிக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதன் மூலமாக ஷிப்ட் அடிப்படையில் 40-50 கமாண்டோக்கள் பாதுகாப்பில் இருப்பார்கள். இந்த பாதுகாப்புச் செலவை முகேஷ் அம்பானி வழங்குவார்.
பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் முகேஷ் அம்பானியின் வீடு மற்றும் அலுவலகத்திற்கும் துப்பாக்கி ஏந்தி போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும். அதேபோல் வெளிநாடு, வெளியூர் என எங்கு சென்றாலும் சிஆர்பிஎஃப் காமாண்டோக்கள் பாதுகாப்பிற்காகச் செல்வார்கள்.
பாதுகாப்பை அதிகரிக்க காரணம் என்ன?
கடந்த ஆண்டு மும்பை ஆண்டிலியா பகுதியில் அமைந்துள்ள முகேஷ் அம்பானியின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பைக் கிளப்பியது. 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முகேஷ் அம்பானியின் வீட்டிற்கு அருகே வெடிபொருட்கள் நிரப்பட்ட கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து தேசிய புலனாய்வு முகாமை விசாரித்து வந்த நிலையில், இதில் தொடர்புடைய உதவி காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து, உச்ச நீதிமன்ற அனுமதியுடன் முகேஷ் அம்பானிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. தற்போது உளவுத்துறை அமைப்பு முகேஷ் அம்பானிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்ததை அடுத்து, அவரது பாதுகாப்பை அதிகரிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
தற்போது வரை முகேஷ் அம்பானிக்கு Z பிரிவும், அவரது மனைவி நீது அம்பானிக்கு பிரிவு பாதுகாப்பும் வழங்கப்பட்டு வந்தது. தற்போது முகேஷ் அம்பானிக்கு மட்டும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு - கனிமொழி
அம்பானி & அதானி டாப் பணக்காரர்கள் மட்டுமல்ல; இவர்கள் டாப் 2 கடனாளிகளும் கூட...