நிர்வாகப் பொறுப்புகளில் உள்ள பெண்கள் சக பெண் ஊழியர்களின் முன்னேற்றத்துக்கு உதவுகிறார்களா?
கார்ப்பரேட் துறையில் உயர் பதவிகள் வகிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில் மற்ற பெண்களின் முன்னேற்றத்திலும் இவர்கள் பங்களிக்கிறார்கள்.
இந்தியாவின் கார்ப்பரேட் துறையில் பாலின அடிப்படையில் இருக்கும் இடைவெளி குறைந்து வருவதைப் பார்க்கமுடிகிறது. வணிக உலகில் இது மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியுள்ளது. பல்வேறு பெண்கள் தலைமைப் பொறுப்புகள் வகிக்கத் தொடங்கியுள்ளனர்.
மூத்த மேலாண்மைப் பொறுப்புகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தைப் பொருத்தவரை 39 சதவீதத்துடன் இந்தியா மூன்றாம் இடத்தில் இருப்பதாக The Grant Thornton Women in Business 2021 அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இந்தியாவில் நடுத்தர அளவில் செயல்படும் வணிகங்களில் 47 சதவீத வணிகங்களில் பெண்கள் சிஇஓ-க்களாக இருப்பதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெவ்வேறு பின்னணி கொண்டவர்களை இணைத்துக்கொள்வது, அனைவரையும் உள்ளடக்கிய சூழலை உருவாக்குவது போன்றவற்றின் முக்கியத்துவத்தை நிறுவனங்கள் உணர்ந்துள்ளதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
பெருந்தொற்று காரணமாக பல்வேறு துறைகள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தாலும் வீட்டிலிருந்தே பணிபுரிவதற்கான வாய்ப்புகள் பெண்கள் வேலைகளைத் தொடர ஊக்குவித்துள்ளன.
தலைமைப்பொறுப்பில் பெண்கள் நியமிக்கப்படுவதற்கான முக்கியக் காரணம் இந்த நிறுவனங்கள் பெண்கள் தலைமையில் செயல்பட்டு வருகின்றன.
அமெரிக்காவைச் சேர்ந்த கார்ப்பரேட் வுமன் டைரக்டர்ஸ் இண்டர்நேஷனல் (CWDI) 55 நாடுகளில் உள்ள கிட்டத்தட்ட 3,000 நிறுவனங்களில் கணக்கெடுப்பு நடத்தியது. இதன்படி, பெண்கள் சிஇஓ-வாக இருக்கும் 143 நிறுவனங்களில் இயக்குநர் குழு மற்றும் நிர்வாகப் பொறுப்புகளில் அதிகளவில் பெண்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
பிரதிநிதித்துவம் முக்கியம்
மருத்துவத் துறையில் மிகவும் பிரபலமான நிறுவனமான அப்போலோ மருத்துவமனை குழுமத்தில் ரெட்டி குடும்பத்தின் மகள்கள் பெரும்பாலும் உயர் பதவிகள் வகித்து வருகின்றனர்.
பெண்கள் சிஇஓ-க்களாக செயல்படும் நிறுவனங்களில் முக்கிய தலைமைப் பொறுப்புகளில் பெண்கள் நியமிக்கப்படுவதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் எண்டர்பிரைஸ் லிமிடெட், நிர்வாகத் துணைத் தலைவர் ப்ரீதா ரெட்டி தெரிவித்துள்ளார்.
“ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் உயர் பதவி வரை முன்னேறி செல்வதற்குத் தேவையான திறன் பயிற்சியை பெண் சிஇஓ-க்கள் ஏற்பாடு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம். மாதவிடாய் விடுப்பு, பிரசவகால விடுப்பு நீட்டிக்கப்படுதல், மழலையர் காப்பக வசதி என பெண்களுக்கே உரிய பிரச்சனைகளுக்கு சுமுகமான தீர்வுகளை பெண் சிஇஓ-க்கள் உருவாக்கித் தருவார்கள்,” என்று ப்ரீதா ரெட்டி குறிப்பிட்டுள்ளார்.
Heads up for Tail நிறுவனர் ராஷி சனோன் நாரங் கூறும்போது,
“பாலினம், வயது போன்ற பாகுபாடுகள் இல்லாமல் பலர் உயர் பதவி வகிக்கும்போது மற்றவர்களுக்கும் முன்னேற வாய்ப்பிருப்பது தெரியவரும். தடைகளைத் தகர்த்தெறிந்து புதிய துறைகளில் சாதனை படைக்கும் பெண்கள் மற்றவர்களுக்கும் பாதை வகுத்துக் கொடுக்கிறார்கள்,” என்கிறார்.
திறமை அடிப்படையிலேயே வாய்ப்பு
Juggernaut நிறுவனத்தின் சிக்கி சர்கார், ஆர்வத்துடன் செயல்படும் புத்திசாலி ஊழியர்களை அந்நிறுவனம் ஊக்குவிப்பதாகத் தெரிவிக்கிறார். பன்முகத்தன்மையையும் அனைவரையும் உள்ளடக்கிய சூழலையும் உருவாக்குவதற்கு முதலில் வெளிப்படையான உரையாடலைத் தொடங்கவேண்டும் என்பது இவரது கருத்து.
”மாற்றத்தைக் கொண்டு சேர்க்க திரும்பத் திரும்ப பேசவேண்டும். நாங்கள் அதையே பின்பற்றுகிறோம். கிடங்கு, சில்லறை வர்த்தக ஸ்டோர் என அனைத்து பொறுப்புகளிலும் பெண்கள் பங்களிக்கத் தேவையான சூழலை உருவாக்கித் தருகிறோம். பாலினம் சார்ந்த வேறுபாடுகளைக் களையும் வகையில் உரையாடல்களைத் தொடங்கியுள்ளோம்,” என்கிறார்.
பணிச்சூழலில் பாலின சமத்துவம் அவசியம் என்பதை வலியுறுத்தும் ப்ரீதா,
”இன்று பெண்கள் உயர் பதவிகளை வகிக்கத் தயாராக இருக்கின்றனர். எனவே ஊழியர்களின் பாலினம் சார்ந்து மதிப்பிடாமல் அவர்களது திறனை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடவேண்டும். அப்போலோவில் திறன் அடிப்படையில் மட்டுமே ஊழியர்களின் முன்னேற்றம் அமைந்திருக்கும். பெண்கள் தங்கள் பணியையும் குடும்பத்தையும் சிறப்பாக சமன்படுத்தும் வகையிலும் நிறுவனத்தில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலும் மனித வளத் துறையில் கொள்கைகள் வகுக்கப்படுகின்றன,” என்று குறிப்பிடுகிறார்.
பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் எத்தனையோ முயற்சிகள் எடுக்கப்பட்டு கொள்கைகள் வகுக்கப்பட்டாலும்கூட, மேலும், சிறப்பான சூழலை அமைத்துக் கொடுப்பதற்கான அவசியம் உள்ளது. குடும்பப் பொறுப்புகளை சுமக்கவேண்டிய கட்டாயம் ஏற்படுவதால் பெண்கள் தங்கள் பணி வாழ்க்கையை பாதிலேயே விட்டு விடுகின்றனர்.
”தாய்மையைப் போற்றவேண்டியது முக்கியம்தான். எனக்கும் சின்னக் குழந்தைகள் இருப்பதால் தொழிலையும் கவனித்துக்கொண்டு குழந்தைகளையும் பராமரிப்பதில் எத்தகைய அழுத்தம் இருக்கும் என்பதை நானும் அனுபவித்திருக்கிறேன். எனக்கு பலர் உதவினார்கள். ஆனால் உதவி கிடைக்காத எத்தனையோ அம்மாக்கள் இருக்கிறார்களே? இவர்களது நிலை என்ன? பணியாளர்களில் குறைந்த எண்ணிக்கையில் பெண்களின் பங்களிப்பு இருப்பதே தலைமைப்பொறுப்புகளில் பெண்கள் குறைவாக இருப்பதற்கான முக்கியக் காரணம் என்று கருதுகிறேன்,” என்கிறார் ப்ரீதா.
பணிச்சூழலில் பெண்கள் முன்னேறி தலைமைப் பொறுப்புகள் வரை நியமிக்கப்படுவதற்குத் தேவையான எத்தனையோ முயற்சிகள் எடுத்தப்பட்டு வந்தாலும்கூட பாலின சமத்துவத்தை ஊக்குவிப்பதில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டால் மட்டுமே அந்த நோக்கம் முழுமையடையும்.
ஆங்கில கட்டுரையாளர்: பூர்வி குப்தா | தமிழில்: ஸ்ரீவித்யா