இந்திய நகரங்களை வசிப்பதற்கு வசதியான நகரங்களாக மாற்ற விரும்பும் Dunzo!
டெக்ஸ்பார்க்ஸ் 2021 மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் டன்சோ இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ கபீர் பிஸ்வாஸ் டன்சோ டெலிவரி அனுபவம் மற்றும் விரிவாக்கம் பற்றி விவரித்தார்.
உள்ளூர் பகுதி டெலிவரி சேவையான டன்சோ மற்ற எந்த உலக நகரங்களையும் விட இந்திய நகரங்களை வசிப்பதற்கு வசதிமிக்கதாக மாற்றும் இலக்கை நிறைவேற்றும் நோக்கத்துடன் அடுத்த 15-18 மாதங்களில் செலவிடுவதற்கு தேவையான்ப 150 மில்லியன் டாலர் நிதி திரட்ட இருப்பதாக இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ கபீர் பிஸ்வாஸ் கூறினார்.
ஆசியாவின் மிகப்பெரிய ஸ்டார்ட் அப் தொழில்நுட்ப மாநாடான யுவர்ஸ்டோரி டெக்ஸ்பார்க்ஸ் 2021 நிகழ்ச்சியில் பேசியவர், வாடிக்கையாளர்களுக்கு 15 முதல் 20 நிமிடங்களில் டெலிவரி அளிக்கும் வகையில் விரைவான மளிகை சேவையான டன்சோ, டெய்லியை இந்தியா முழுவதும் விரிவாக்கம் செய்ய இருப்பதாகத் தெரிவித்தார்.
“அடுத்த 24 மாதங்களில் தினசரி சேவையை 20 நகரங்களில் விரிவாக்கம் செய்து, இப்பிரிவில் உள்ள 50 மில்லியன் வாடிக்கையாளர்களை டிஜிட்டல்மயமாக்குவோம்,” என்று கூறினார்.
வாடிக்கையாளர் ஏற்றுக்கொள்ளும் விலையில், குறித்த நேரத்தில், நல்ல தரத்துடன் வாரம் இருமுறை அத்தியாவசியப் பொருட்களை தொடர்ச்சியாக டெலிவரி செய்வதில் கவனம் செலுத்த இருப்பதாக கபீர் மேலும் தெரிவித்தார். இதன் மூலம், நாட்டில் உள்ள கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களின் பழக்கத்தை மாற்ற முடியும் என்றும் தெரிவித்தார்.
வாராந்திர அடிப்படையில் 25 சதவீத வளர்ச்சி கண்டு வரும் டன்சோ, டெய்லி வாடிக்கையாளர்கள் வாங்கும் பழக்கத்தை கவனித்து, அவர்கள் அடிக்கடி வாங்கும் பொருட்களை மட்டுமே இருப்பு வைத்துக்கொள்கிறது.
பெங்களூருவைச்சேர்ந்த இந்த உள்ளூர் டெலிவரி சேவை நிறுவனம், விற்பனையாகும் பொருட்களின் விலை மற்றும் டெலிவரி செலவை உள்ளடக்கிய ஜிஎம்வியை இந்த நிதியாண்டில் 65 சதவீதம் அதிகரித்துள்ளது. 90 சதவித பயனர்கள் இயற்கையான முறையில் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.
நிறுவன மரபணு
பெருந்தொற்று காலத்தில் ஆன்லைன் மூலம் அத்தியாவசியப் பொருட்களை வழங்குவது பேரூதவியாக அமைந்தது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியுடன் பொருட்களை வாங்க முடிந்தது. டன்சோ நிறுவனம் பெருந்தொற்று காலத்தில் வாடிக்கையாளர்களின் இந்தத் தேவையை பயன்படுத்தி வளர்ந்துள்ளது.
கூகுள் ஆதரவு பெற்ற டன்சோ, இந்த நிதியாண்டில் தனது வருவாயை 1.6X அதிகரிக்கச்செய்து, ரொக்க செலவை 43 சதவீதம் குறைத்துள்ளது. கடந்த 18 மாதங்களில் வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகர்கள் மத்தியில் நிகழ்ந்துள்ள 5 ஆண்டு காலத்திற்கான டிஜிட்டல்மயமாக்கத்தின் காரணமாக இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறும் கபீர், வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற அமைப்பை உருவாக்கும் நிறுவன மரபணுவும் உதவியது என்கிறார்.
“வாடிக்கையாளர்களுக்கு சரியானவற்றை உருவாக்கும் மரபணுவை பெற்றுள்ளோம். இதற்குத் தேவையானவற்றை கற்றுக்கொள்கிறோம். இந்த பிரிவில் வேறு யாரையும் விட சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை அளிக்க விரும்புகிறோம். இதற்காக தீவிரமாக முயற்சிக்கிறோம். போட்டி நிறுவனங்கள் பற்றி சிந்தித்துக்கொண்டிராமல், வாடிக்கையாளர்களுக்கு தேவையானவற்றை அளிப்பது பற்றி யோசிக்கிறோம்,” என்று கபீர் கூறினார்.
போதுமான நிதி எனும் வார்த்தையையும் அவர் அழுத்தமாகக் கூறினார். இந்தியாவில் இப்போது உள்ள அபிரிமிதமான வாய்ப்புகளால், எது சாத்தியம் என்பது தொடர்பாக கட்டுப்பாடில்லாத இலட்ச்சியங்களை உருவாக்குவதாக தெரிவித்தார்.
“தொழில்நுட்பம் தினசரி வாழ்க்கை மீது தாக்கம் செலுத்தலாம் என்பதால், வாடிக்கையாளர் பழக்க வழக்கத்திலும் இது மாற்றத்தை ஏற்படுத்தலாம். இதுவே எங்களுக்கு மிகவும் உற்சாகம் அளிக்கிறது. எனவே உங்கள் இன்றைய இலக்கு சார்ந்து போதுமான நிதி என்பது அமையும். இது சரியாக செயல்பட்டால், மேலும் வர்த்தக வாய்ப்புகளை தேடிச்செல்லத்துவங்கி, போதுமான முதலீட்டை திரட்டுவீர்கள்,” என்று கபீர் கூறினார்.
மூன்றாம் தலைமுறை
டன்சோ மூன்றாம் தலைமுறை தேவைக்கேற்ற சேவையை அடிப்படையாகக் கொண்டுள்ளதாக கபீர் தெரிவித்தார். இதில் வாடிக்கையாளர்கள் அத்தியாவசியப் பொருட்களை 15 – 20 நிமிடங்கள் பெறலாம் என்றார்.
கால்டாக்சி சேவைகள் முதல் தலைமுறை அழைப்பு சேவையாக அமைந்தது என்றால் உணவு டெலிவரி சேவை இரண்டாம் தலைமுறை சேவையாக அமைந்தன என்றார். இப்போது மூன்றாம் தலைமுறை சேவையை டன்சோ வழங்குகிறது என்றார்.
“பெரும்பாலான இந்திய நகரங்கள் மற்ற உலக நகரங்களையும் விட வசிப்பதற்கு வசதியானதாக இருக்கும்,’ என்கிறார்.
டன்சோவை பயன்படுத்தும் மக்கள் புதிய பொருட்களை தேவைக்கேற்ப பெறுவதில் கவனம் விரும்புவதாகவும் இதை நிறைவேற்றுவதில் நிறுவனம் கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்தார்.
வளர்ச்சி
2015ல் டன்சோ வாட்ஸ் அப் சார்ந்த சேவையாக துவங்கியது. வாட்ஸ் அப்’பில் தேவையான பொருள் பற்றிய தகவல் அனுப்பினால் டன்சோ அதை செயல்படுத்தும். அதன் பிறகு 24 மணி நேர டெலிவரி சேவையாக உருவாகியுள்ளது.
கூகுள் போல டன்சோ இப்போது வினைச்சொல்லாகி இருக்கிறது. வாடிக்கையாளர்களிடம் இருந்து அதிக தகவல்கள் மற்றும் தரவுகள் பெற்றிருப்பதே இதற்குக் காரணம் என்கிறார் கபீர்.
“வாடிக்கையாளர் தனக்கு தேவையானதை கூறியதும் அந்த பரிவர்த்தனையை வேகமாக நிகழ்த்தும் வாய்ப்பை நாடுகிறோம். நாங்கள் கவனம் செலுத்தும் எல்லாமே, பரிவர்த்தனையை வேகமாக நிகழ்த்துவது தொடர்பானதாக இருக்கிறது. வேகமாக டெலிவரி செய்வதில் நிறுவனம் கவனம் செலுத்துகிறது. உதாரணமாக, டெலிவரி ஆர்டர் வரும் போது டெலிவரி செய்யும் நபருக்கு அதற்குத் தேவையான நொடிகள் எத்தனை என்பது தெளிவாக தெரியும். சராசரியாக ஒரு ஆர்டர் எடுக்கப்பட 60 நொடிகளுக்கு குறைவாக இருக்கும் . இதை மேலும் குறைக்க விரும்புகிறோம்,” என்கிறார் கபீர்.
நிறுவனம் அடைய வேண்டிய இடத்திற்கு நெருக்கமாக இல்லை என்றும் இதற்காக பாடுபட வேண்டியது அதிகம் இருக்கிறது என்றும் கபீர் கூறுகிறார்.
ஆங்கில கட்டுரையாளார்: ரிஷி வர்ஷினி | தமிழில்: சைபர் சிம்மன்