வெள்ள பாதிப்பில் மக்களுக்கு உதவும் தற்காலிக கூடாரம் வடிவமைத்து பரிசு வென்றுள்ள ஐஐடி மாணவர்கள்!
சென்னையில் 2015-ல் ஏற்பட்ட வெள்ளம் அனைவரையும் ஆட்டிப் படைத்தது; அந்த நிகழ்வை படிப்பினையாய் கொண்டு, ஐ.ஐ.டி மெட்ராசை சேர்ந்த மூன்று மாணவர்கள் வலுவான, மடக்கக்கூடிய மற்றும் எளிதில் எங்கும் செல்லக்கூடிய சிறிய கூடாரம் போன்ற தற்காலிக தங்குமிட வீடு ஒன்றை வடிவமைத்து உருவாக்கியுள்ளனர். வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்படும் மக்களக்கு இது மிகவும் உதவியாக இருக்கும். தற்போது சென்னையில் நிகழும் சூழலுக்கு இது மிக அவசியம்.
அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் நடத்திய தேசிய அளவிலான சமூக நிறுவன யோசனை சவாலில் கலந்துக்கொண்டு இந்த தற்காலிக கூடார முன்மாதிரியை அமைத்து முதல் பரிசை தட்டி சென்றுள்ளனர்.
கடந்த வருடம் இந்த போட்டியை தொடங்கியுள்ளனர், இது இப்போட்டியின் இரண்டாம் பதிவு. இந்தியா முழுவதும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கு தங்கள் யோசனைகளையும், தங்கள் தொழில் முயற்சிகளையும் பகிர உதவுவதே இப்போட்டியின் நோக்கம். மேலும் இது மாணவர்கள் ஒருவருக்கொருவர் சந்திக்க ஒரு பெரிய நெட்வொர்க்கிங் தளமாக செயல்படுகிறது, தொடக்க நிலை வழிகாட்டிகள் மற்றும் முதலீட்டாளர்கள் முன் தங்களது திறன் மற்றும் திறமைகளை வெளிப்படுத்த முடியும்.
நான்காம் ஆண்டு சிவில் பொறியியல் படிக்கும் கோபிநாத், ஸ்ரீராம், மற்றும் சந்தோஷ்; இந்த 'மாடுலர் ஹவுசிங்'-ஐ கண்டுபிடித்துள்ளனர்.
"டெலஸ்கோபிக் முறையை முன்மாதிரியாய் கொண்டே இதை உருவாக்கியுள்ளோம். அதாவது தொலைநோக்கியை மடிக்கவும், சிறியதாகவும், பெரியதாகவும் விரிக்க முடியும்; அதே போல் தான் இதுவும். இது 400 சதுர அடி பரப்பளவு கொண்ட கூடாரம், மற்றும் ஒரு 5/5 பெட்டிக்குள் மடிக்க முடியும்," என்கிறார் கோபிநாத்.
இந்த முன் மாதிரியில் கழிப்பறைகள், மின்சாரம், நீர் மற்றும் வெப்ப இணைப்புகளையும் இணைத்துள்ளனர். இந்த வசதிகள் இருந்தாலும் கூட இதை அமைக்கவும், பல இடத்திற்கு எடுத்துச் செல்லவும் சுலபாமாகவே இருக்கும். மேலும் இதில் சூரிய சக்தி அமைப்புகளை ஒருங்கிணைக்க உள்ளனர்.
இந்த கூடாரம் எஃகு மற்றும் அலுமினியமால் உருவாக்கப்பட்டுள்ளது, அதனால் மற்ற டெண்டுகளைக் காட்டிலும் இது நீடித்து நிலைக்கும். ஒரே நேரத்தில் நான்கு குடும்பங்கள் தங்கும் அளவிற்கு இதில் இடமும் வசதியும் இருக்கும்.
மேலும் இது தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகளான அரசு சாரா அமைப்புகள் மற்றும் அரசு அமைப்புகள் போன்றவற்றுக்கு கிடைக்க வழி செய்ய உள்ளனர். இதன் மூலம் அவசர காலத்தில் மக்களுக்கு இது பெரும் உதவியாக அமையும்.
இந்த யோசனைக்காக முதல் இடம் பிடித்து 35,000 ரூபாய் பரிசாக பெற்றுள்ளனர் மாணவர்கள். இந்த போட்டியின் முதல் சுற்றுக்கு 100 குழு கலந்துக்கொண்டது. இறுதி சுற்றுக்கு 15 குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு அதிலிருந்து வெற்றியாளர்களை தீர்மானித்துள்ளனர்.
போட்டியின் பொது பேசிய, அசிம் பிரேம்ஜி அறக்கட்டளையின் பிரதான மக்கள் அலுவலர், சுதேஷ் வெங்கடேஷ்,
“வேலை இல்லா திண்டாட்டம் நிகழும் இந்த சூழலில் சமூக தொழில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றது. இது வேலை வாய்ப்பை அமைப்பதோடு நேர்மையான சமூக தாக்கத்தை ஏற்படுத்தும்,” என்றார்.