முருகப்பா குழுமத்தில் இயக்குனர் குழும உரிமைக் கோரும் பெண் வாரிசு!
தென்னிந்தியாவின் நூற்றாண்டுக்கு மேல் பழமை வாய்ந்த முருகப்பா குழுமத்தின் வழி வந்த வள்ளி அருணாசலம், இயக்குனர் குழுமத்தில் ஆண் வாரிசுகள் மட்டுமே இருப்பதாகவும், பெண் வாரிசுகளுக்கும் உரிமை வேண்டும் என்கிறார்.
நூற்றாண்டுக்கு மேல் பாரம்பரியம் மிக்க தென்னிந்தியாவின் புகழ் மிக்க தொழில் சாம்ராஜியங்களில் ஒன்றான ’முருகப்பா குழுமத்தின்’ முன்னாள் செயல் தலைவரான வள்ளி அருணாசலம், இயக்குனர் குழுமத்தில் தங்களுக்கு பிரதிநித்துவம் வேண்டும் என கோரிக்கையை எழுப்பியிருக்கிறார்.
சென்னையை தலைமையகமாகக் கொண்ட ’முருகப்பா குழுமம்’, 1900ம் ஆண்டு நிறுவப்பட்டது. சோழமண்டலம் பைனான்ஸ், பாரி அக்ரோ, கோரமண்டல் இஞ்சினியரிங் உள்ளிட்ட 28 நிறுவனங்களை உள்ளடக்கிய இக்குழுமம் பல பிரபலமான பிராண்ட்களையும் கொண்டிருக்கிறது.
முருகப்ப செட்டியாரால் துவங்கப்பட்ட இக்குழுமம் தற்போது குடும்பத்தின் நான்காம் தலைமுறையால் நிர்வகிக்கப்படுகிறது. 37,000 கோடி மதிப்புள்ளதாக கருதப்படும், குழும நிறுவனங்களை கட்டுப்படுத்தும் நிறுவனமாக அம்பாடி இன்வெஸ்ட்மண்ட்ஸ் விளங்குகிறது.
இந்நிலையில், குழுமத்தின் முன்னாள் செயல் தலைவரான எம்.வி.முருகப்பனின் மூத்த மகளான வள்ளி அருணாச்சலம், குழுமத்தின் இயக்குனர் குழுமத்தில் தங்களுக்கு பிரதிநித்துவம் வேண்டும் எனும் கோரிக்கையை எழுப்பி இருக்கிறார்.
அமெரிக்காவில் வசிக்கும் தொழில்நுட்ப ஆலோசகரான வள்ளி, அவரது சகோதரி வெள்ளச்சி மற்றும் தாய், குழுமத்தை கட்டுப்படுத்தும் அம்பாடி இன்வெஸ்ட்மண்ட்ஸ் நிறுவனத்தில் 8.15 சதவீத பங்குகளைக் கொண்டிருக்கின்றனர்.
பங்கு உரிமையின் அடிப்படையில், இயக்குனர் குழுமத்தில் தங்களுக்கு இடம் வேண்டும் எனும் கோரிக்கையை 2 ஆண்டுகளுக்கு முன் எழுப்பியதாகவும், இதற்கு இன்னமும் சாதகமான பதில் கிடைக்கவில்லை என்றும், வள்ளி அருணாசலம், பிஸ்னஸ் லைன் நாளிதழிடம் தெரிவித்துள்ளார்.
கார்பரண்டம் யூனிவர்சல் தலைவராக இருந்த எம்.வி.முருகப்பன், 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மறைந்தார்.
“என் தந்தை இறப்பதற்கு முன், இதே அளவு பங்குகளுடன் அம்பாடி நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் அங்கம் வகித்தார். ஆனால் அவர் மரணம் அடைந்த பிறகு, இயக்குனர் குழு இடம் எங்களுக்கு ஏன் மறுக்கப்படுகிறது என புரியவில்லை என்று வள்ளி அருணாசலம் கூறியுள்ளார்.
இந்த கோரிக்கை தொடர்பாக குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களுடன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் கடித போக்குவரத்து கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முருகப்ப குழும வழக்கப்படி ஆண் வாரிசுகளுக்கு மட்டுமே இயக்குனர் குழுமத்தில் இடம் அளிக்கப்படுவதாக அறிய முடிகிறது. குழுமத்தின் இணையதளத்தில், இடம்பெற்றுள்ள குடும்ப அமைப்பை விவரிக்கும் வரைபடத்தில், ஆண் வாரிசுகள் மட்டுமே இடம் பெற்றுள்ளதாக நியூஸ் மினிட் செய்திதளம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில், தனது உரிமைக்காக மட்டும் அல்லாமல், பொதுவாக பாலின பாகுபாட்டிற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடியதாக இந்த விவகாரம் அமையும் என்று வள்ளி அருணாசலம், இந்த தளத்திடம் தெரிவித்துள்ளார்.
இரண்டு ஆண்டுகளாக இயக்குனர் குழுமத்தில் இடம்பெறவும் முடியவில்லை என்றும், நியாயமான மதிப்பில் பங்குகளை விற்பதற்கான கோரிக்கையும் நிறைவேறவில்லை என்று அவர் கூறுகிறார்.
“கட்டுப்படுத்தும் நிறுவன பங்குகளை குடும்பத்திற்குள் விற்பனை செய்ய வேண்டும் என்பது என் தந்தையின் விருப்பம். அதையே நாங்கள் இரண்டு ஆண்டுகளாக செய்ய முயற்சிக்கிறோம்,” என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனால், குழுமத்தின் தரப்பில் இந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை, பங்குகளை வாங்க தங்களிடம் பணம் இல்லை என தெரிவிக்கப்பட்டதாக கூறுபவர், இயக்குனர் குழுமத்தில் தங்களுக்கு இடம் அளிக்க வேண்டும் எனும் கோரிக்கை நியாயமானதே என்கிறார்.
குடும்ப வர்த்தகத்தை நிர்வகிப்பதில் ஆண் வாரிசுகளுக்கு உள்ள அதே உரிமை பெண் வாரிசுகளுக்கும் அளிக்கப்பட வேண்டும் என தாங்கள் வலியுறுத்துவதாக அவர் பிஸ்னஸ் லைன் நாளிதழிடம் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் குழுமத்தில் இடம்பெற முடியாததற்கு இதுவரை பதில் அளிக்கப்படவில்லை. குடும்ப உறுப்பினர்களுடான இ-மெயில் பரிவர்த்தனையில், இதை வாரிசுரிமையாக கோருவதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கு நான் பங்கு உரிமை அடிப்படையில் கோருவதாக பதில் அளித்தேன்,” என்றும் வள்ளி கூறியுள்ளார்.
”நானும் சகோதரியும் படித்தவர்கள். எங்களுக்கு தொழில்துறையில் அனுபவம் உள்ளது. எங்கள் திறன் ஏன் குடும்ப வர்த்தகத்தை நடத்த பயன்படக்கூடாது என கேட்கிறோம்,” என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக குழுமத்தின் பதில் பெற முயற்சித்த போதும் முடியவில்லை என நியூஸ் மினிட் தெரிவித்துள்ளது.
இதனிடையே, இந்த விவகாரத்தை சுமூகமாக முடிவுக்குக் கொண்டு வர குடும்ப உறுப்பினர்கள் முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வள்ளி அருணாசலம் இது குறித்து ஊடகத்தை அணுகியது துரதிர்ஷ்டவசமானது என ஊழியர்களுக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில் குழுமத் தலைவர் எம்.எம்.முருகப்பன் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தொகுப்பு: சைபர்சிம்மன்