சீரம் இன்ஸ்டிடியூட்டில் பெரும் தீ விபத்து: கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் பாதிப்பா?
சீரம் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் திடீரென பெரும் தீ விபத்து; அதன் சிஇஒ அதார் பூனாவாலா கூறுவது என்ன?
இந்தியா இரண்டு தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. புனே தலைமையிடமான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவால் தயாரிக்கப்படும் ஆக்ஸ்போர்டு / அஸ்ட்ராஜெனெகா உருவாக்கிய, 'Covishield' ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசி மற்றும், பாரத் பயோடெக் உருவாக்கிய ’Covaxin' 'கோவாக்சின்' தடுப்பூசி தான் அவை.
அவசரகால அடிப்படையில் இந்த தடுப்பூசிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருப்பதால், புனேவின் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா (Serum Institute of India-SII) நிறுவனம், இந்த தடுப்பூசியைப் பெருமளவில் தயாரித்து உலகம் முழுக்க விநியோகம் செய்யவிருக்கிறது.
அதன்படி புனேவுக்கு அருகில் இருக்கும் மஞ்ச்ரி என்னும் கிராமத்தில் இருக்கும் சீரம் இன்ஸ்டிடியூட்டில் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வந்தன. இதற்கிடையே, இந்த மஞ்ச்ரி என்னும் கிராமத்தில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் இன்று மதியம் திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
மஞ்சரி வளாகத்தில் புதிய கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் ஐந்தாவது மாடி வரை தீ பரவி வருவதாக அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"எங்களுக்குத் தெரிந்தவரை, இக்கட்டிடம் கோவிஷீல்ட் உற்பத்தி ஆலையுடன் நேரடியாக இணைக்கப்படவில்லை," என்று அவர் கூறினார்.
தீ தொடங்கிய நேரத்தில், பெரும்பாலான மக்கள் வெளியேற்றப்பட்டனர் என்றும் அந்த அதிகாரி கூறினார்.
"தீ தீவிரமடைந்தபோது நான்கு பேர் சிக்கிக்கொண்டனர். அந்த நான்கு பேரில் மூன்று பேர் எங்கள் குழுவினரால் மீட்கப்பட்டுள்ளனர், நான்காவது நபரை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன," என்று மீட்பு நடவடிக்கையை மேற்பார்வையிடும் அதிகாரி கூறினார்.
புனே சிட்டி தீயணைப்புப் படையின் தலைமை தீயணைப்பு அதிகாரி பிரசாந்த் ரான்பைஸ்,
“மஞ்சரியில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் ஒரு பிரிவில் தீ விபத்து குறித்து எங்களுக்கு அழைப்பு வந்தது. குறைந்தது ஐந்து தீ அணைப்பு வாகனங்கள் மற்றும் கூடுதல் வாட்டர் டேங்கர்களை அந்த இடத்திற்கு அனுப்பியுள்ளோம்.
மதியம் 2:30 மணியளவில், தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் எங்களுக்கு அழைப்புகள் வந்தன. சில தீயணைப்பு வாகனங்கள் அப்பகுதியை அடைந்து மீட்பு பணியைத் தொடங்கியுள்ளன. இப்போதைக்கு, நெருப்பின் தன்மை, சேதத்தின் அளவு அல்லது காரணம் குறித்த விவரங்கள் எங்களிடம் இல்லை. எங்கள் முன்னுரிமை தீயைக் கட்டுக்குள் கொண்டுவருவதோடு, எந்தவொரு சேதத்தையும் தவிர்க்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து ஏராளமான புகை வெளியேறுவதால், நெருப்பின் மூலத்தைக் கண்டுபிடித்து அதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது கடினம். நாங்கள் இப்போது மொத்தம் 10 தீயணைப்பு டெண்டர்கள், ஒரு ஹைட்ராலிக் லிப்ட் மற்றும் பிற உபகரணங்களை பயன்படுத்தி வருகிறோம், என்றார்.
இதற்கிடையில், சீரம் இன்ஸ்டிடியூட்டின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா, தீ விபத்தால் பெரிய இழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று கூறி இருக்கிறார். ஒரு ட்வீட்டில்,
“அனைவருக்கும், உங்கள் அக்கறை மற்றும் பிரார்த்தனைகளுக்கு நன்றி. இதுவரை மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒரு சில தளங்கள் அழிக்கப்பட்ட போதிலும், தீ காரணமாக எந்த உயிர்களும் இழக்கப்படவில்லை அல்லது பெரிய காயங்கள் ஏற்படவில்லை,” எனக் கூறியுள்ளார்.
மேலும் தனது அடுத்த ட்வீட்டில்,
“Covishield தடுப்பூசி மருந்தை பொருத்தவரை எந்த பாதிப்பும் இல்லை என அரசுகள் மற்றும் பொதுமக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த வளாகத்தில் 'கோவிஷீல்டு' மட்டுமல்லாமல் பல நோய்களுக்கான தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வந்தன. முதல்கட்ட தகவல்படி, காசநோய் தடுப்பூசி தயாரிக்கப்படும் இடத்தின் அருகில் இந்த பெரிய தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் கோவிஷீல்டு தயாரிப்பு ஆலை இந்த இடத்தில் இருந்து கொஞ்சம் தொலைவில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் எந்தவித பிரச்னையும் இல்லை என்றும் ஆலை நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.
தகவல் மற்றும் பட உதவி: indianexpress | தொகுப்பு: மலையரசு