விழாக்கால விற்பனையில் 4 பில்லியன் டாலரை குறி வைக்கும் இ-காமர்ஸ் நிறுவனங்கள்!
விழாக்கால விற்பனை துவங்கியுள்ள நிலையில், அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் தீவிர போட்டியில் ஈடுபட்டிருப்பதோடு, பொருளாதார மந்தநிலையையும் சமாளிக்க வழி தேடுகின்றன.
அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் விழாக்கால விற்பனையை துவக்கியுள்ள நிலையில் வருடாந்திர ஆன்லைன் விற்பனை திருவிழா கோலாகலமாக துவங்கியுள்ளது. இந்த ஆண்டு பொருளாதார மந்தநிலை காரணமாகக் கூடுதல் நெருக்கடி இருந்தாலும், ஆன்லைன் வாடிக்கையாளர்கள் இதை பொருட்படுத்தமாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு போலவே, அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட், கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் (Great Indian Festival) மற்றும் பிக் பில்லியன் டேஸ் (Big Billion Days) ஆகிய ஆறு நாள் சிறப்பு விற்பனையைத் துவக்கியுள்ளன.
இந்த இரண்டு இ-காமர்ஸ் ஜாம்பவான்களும் அதிக ஆன்லைன் வாடிக்கையாளர்களை கவர்வதில் ஈடுப்பட்டிருக்கும் போது, ஒட்டுமொத்த போக்கில் மாற்றங்களும் எதிர்பார்க்கப்படுகின்றன.
அதிக விற்பனை
”பொதுவான பொருளாதார மந்தநிலையை மீறி, இந்த ஆண்டு விழாக்காலத்தில் (செப் 25 முதல் அக் 29) இந்தியாவில் ஆன்லைன் ரீடைல் நிறுவனங்கள் விற்பனை மூலம் 4.8 பில்லியன் டாலர் எதிர்பார்ப்பதாக,” போரஸ்டர் ஆய்வாளர் சதீஷ் மீனா தெரிவிக்கிறார்.
இந்த விற்பனையில் 80 சதவீத விற்பனை, அதாவது 3.8 பில்லியன் டாலர், ஆறு நாள் காலத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.
”இந்த விழாக்காலத்தில், ஆன்லைன் நிறுவனங்கள் 3.7 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் விற்பனை செய்ய உள்ளனர். இது ஆண்டு அடிப்படையில் 65 சதவீத உயர்வாகும்,” என்று ரெட்சீர் கன்சல்டிங் தெரிவித்துள்ளது.
ஆன்லைன் நிறுவனங்கள் விற்பனை செய்யும் பொருட்கள் அதிகரித்திருப்பது வளர்ச்சிக்கான முக்கியக் காரணமாகும். மொபைல் போன்கள் இதில் முன்னணியில் உள்ளன.
மந்தநிலை தாக்கம்
இ-காமர்ஸ் துறையில் முக்கிய மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு விழாக்கால விற்பனைத் துவங்கியுள்ளது. இந்த ஆண்டு துவக்கத்தில், அரசு இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கான புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது.
அதே நேரத்தில், பொருளாதார மந்தநிலை வாடிக்கையாளர்கள் வாங்கும் சக்தி தொடர்பான கேள்விகளை எழுப்பியுள்ளது.
”ஆப்லைனில் இருந்து ஆன்லைன் செலவுக்கான மாற்றம் மற்றும் முதல் அரையாண்டு மந்த நிலை, விற்பனையைத் தூண்டும். 2019 முதல் பாதியில் நிறுவனங்கள் எதிர்கொண்ட மந்தமான விற்பனை வளர்ச்சிக்கு பலவித காரணங்கள் உள்ளன. புதிய இ-காமர்ஸ் கொள்கை அமல் செய்யப்பட்டது மற்றும் பொருளாதார மந்த நிலை இவற்றில் முக்கியமானவை. எனினும், வாடிக்கையாளர்கள் நல்ல தள்ளுபடி வாய்ப்பை எதிர்நோக்கி இருப்பது மற்றும் புதிய பொருட்கள் அறிமுகம், சலுகைகள் ஆகியவை காரணமாக, மேற்சொன்னவற்றின் தாக்கம் குறைவாகவே இருக்கும்,” என்று தனது குறிப்பில் சதீஷ் தெரிவித்துள்ளார்.
2018ல், விழாக்காலத்தில் ஆன்லைன் விற்பனை, 2.3 முதல் 2.9 பில்லியன் டாலராக இருந்ததாக கருதப்படுகிறந்து. இந்த ஆண்டு இதைவிட அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய அம்சங்கள்
எனினும், 2019 விழாக்கால விற்பனையில் ஒரு சில மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. அதிகம் விற்பனையாகும் பொருளாக மொபைல்கள் இடத்தில் நுகர்வோர் மின்னணு பொருட்கள் இடம் பெறும் என கருதப்படுகிறது.
“மொபைல்கள் விற்பனை வளர்ச்சி குறைந்து வருவது பரவலான போக்காக இருக்கிறது. முந்தைய ஆண்டுகளை விட இந்த ஆண்டு ஜி,.எம்.வி.யில் மொபைல்கள் பங்கு குறைவாக இருக்கும்,” என்கிறது ரெட்சீர்.
நுகர்வோர் மின்னணு பொருட்கள் மற்றும் பேஷன் பொருட்கள் அதிகம் விரும்பப்படும் என அது தெரிவிக்கிறது. பர்னிச்சர் பிரிவும் ஆச்சர்யம் அளிக்கலாம்.
இந்த ஆண்டு விழாக்கால விற்பனை இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களின் விற்பனையாளர்களின் எழுச்சியாகவும் அமையலாம். இந்த பகுதிகளில் தான் அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் தீவிர கவனம் செலுத்துகின்றன.
”பட்ஜெட் மற்றும் கட்டுப்பாடுகள் பற்றி கவலைப்படாமல் ஒட்டுமொத்த நாடும் ஒன்றிணைந்து கொண்டாடுவதற்கான வாய்ப்பாக பிக் பில்லியன் டேஸ் விற்பனை அமைகிறது. ஃபிளிப்கார்ட்டில், இந்த விற்பனைக்கு தயாராவதற்காக நாங்கள் கடுமையாக உழைத்திருக்கிறோம். சிறந்த விழாக்காலத்தை அளிக்க மொத்த விற்பனைச் சூழலுடனும் இணைந்து செயல்பட தயாராக இருக்கிறோம்,” என்று ஃபிளிப்கார்ட் சி.இ.ஓ கல்யாண் கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.
இருப்பினும், இந்த ஆண்டு ஆன்லைன் விற்பனை கடந்த ஆண்டின் 90 சதவீத ஒப்பிடும் போது, 32 சதவீதம் வளர்ச்சி பெறும் என எதிர்பார்ப்பதாக சதீஷ் கூறுகிறார். “சந்தையில் நிலவும் வாடிக்கையாளர் மனநிலையை வைத்து பார்க்கும் போது 30 சதவீத வளர்ச்சி நல்லது தான்,” என்கிறார் அவர்.
வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் தங்கள் பரப்பை விரிவாக்கி இருப்பதும் கவனிக்கத்தக்கது.
“மளிகை மற்றும் சிறு வர்த்தகங்களுக்கு, கடந்த ஆண்டுகளில் எங்களுடைய பெஸ்ட் பிரைஸ் கேஷ் & கேரி ஸ்டோர்கள் விழாக்காலத்திற்கு ஏற்ற இடமாக மாறியிருக்கின்றன. இந்த ஆண்டும் எங்கள் கடைகள் முழுவதும் புத்துணர்ச்சி அளிக்கும் ரகங்களை கொண்டிருக்கிறோம். எங்கள் பிராண்ட்கள் மற்றும் சிறுதொழில் நிறுவனங்கள் தயாரிப்புகளும் இதில் அடங்கும்,” என்கிறார் வால்மார்ட் இந்தியா தலைவர் கிருஷ்ண ஐயர்.
இந்த ஆண்டு ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசான், ஆன்லைன் வாடிக்கைளார்கள் பரப்பை கவர தீவிர போட்டியில் ஈடுபட உள்ளன.
“இரண்டு நிறுவனங்களுமே தீவிரம் காட்டுகின்றன. கடந்த ஆண்டை விட ஃபிளிப்கார்ட் இன்னும் தீவிரமாக இருக்கிறது,” என்கிறார் சதீஷ்.
ஆங்கில கட்டுரையாளர்: சமீர் ரஞ்சன் & திம்மையா பூஜாரி | தமிழில்: சைபர்சிம்மன்