Freshworks விற்பனை துணைத்தலைவராக ஷெல்டன் ரெகோ நியமனம்!
புதிய பொறுப்பில் அவர், இந்தியாவில் பிராந்திய வர்த்தக உத்திகளை வழிநடத்துவார். சந்தை பங்கை அதிகரிப்பது, வாடிக்கையாளர் உறவை வளர்த்தெடுப்பது மற்றும் வளர்சிக்கான புதிய வாய்ப்புகளை கண்டறிவது ஆகியவற்றில் கவனம் செலுத்துவார்.
அமெரிக்காவின் நாஸ்டாக் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஃப்ரெஷ்வொர்க்ஸ், இந்தியாவில் வளர்ச்சியை முன்னெடுக்க Shelton Rego-வை விற்பனை பிரிவு துணைத்தலைவராக நியமினம் செய்துள்ளது.
புதிய பொறுப்பில் அவர், இந்தியாவில் பிராந்திய வர்த்தக உத்திகளை வழிநடத்துவார். சந்தை பங்கை அதிகரிப்பது, வாடிக்கையாளர் உறவை வளர்த்தெடுப்பது மற்றும் வளர்சிக்கான புதிய வாய்ப்புகளை கண்டறிவது ஆகியவற்றில் கவனம் செலுத்துவார்.
“இந்தியாவில் சாஸ் துறை ஜாம்பவான்களுக்கு வலுவான சந்தை பங்கை உருவாக்கிக் கொடுத்ததில் ஷெல்டன் ரெகோவுக்கு நல்ல அனுபவம் உள்ளது. பிரெஷ்வொர்க்ஸ் நிறுவனத்திலும் அவர் இதை நிகழ்த்துவார் என நம்புகிறோம். அவரது சொந்த நாட்டு அனுபவம், எங்கள் வாடிக்கையாளர்கள், ஊழியர்களுக்கு உதவுவதோடு, வளர்ச்சிக்கும் உதவும்,“ என்று பிரெஷ்வொர்க்ஸ் சர்வதேச செயல்பாடுகள் தலைவர் அபே ஸ்மித் கூறியுள்ளார்.
ரேகோ முன்னதாக ஜியோ பிளாட்பார்மிசில், ஜியோ கிளவுட் தலைவராக செயல்பட்டுள்ளார். அதற்கு முன், கூகுள் கிளவுட், சேப், கான்கூர், ஆரக்கிள் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.
“உலக அளவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டுள்ள இந்திய நிறுவனம் ஃப்ரெஷ்வொர்க்ஸில் புதிய பொறுப்பு ஏற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். முதலீட்டின் மீது நல்ல பலன் அளிக்கும் எளிமையான செயல்திறன் மிக்க மென்பொருள் ஃப்ரெஷ்வொர்க்ஸ் நிறுவனத்தை போட்டியாளர்களிடம் இருந்து வேறுபடுத்துகிறது. நிறுவனங்கள் ஆக்கத்திறன் ஏஐ நுட்பத்தை எதிர்கொண்டு வரும் நிலையில், பிரெட்டி ஏஐ தீர்வை கொண்டுள்ள ஃப்ரெஷ்வொர்க்ஸ் வாடிக்கையாளர்களின் தேர்வாக இருக்கும்,” என ஷெல்டன் ரெகோ கூறியுள்ளார்.
ஃப்ரெஷ்வொர்க்ஸ், தற்போது சர்வதேச அளவில் 68 ஆயிரம் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. மகிந்திரா, ஆசியன் பெயிண்ட்ஸ், டாடா சேவைகள், டன்சோ, போன்பே, பர்பில், வின்சோ கேம்ஸ் உள்ளிட்ட உள்நாட்டு நிறுவனங்களும் இதில் அடங்கும்.
நிறுவனம் 2026ல் ஒரு பில்லியன் டாலர் ஆண்டு வருவாயை நோக்கி முன்னேறும் நிலையில், ஷெல்டன் ரெகோ இந்திய நிறுவனங்களுக்கு ஃப்ரெஷ்வொர்க்ஸின் ஏஐ சார்ந்த சேவைகளை அறிமுகம் செய்து, உலக முன்னணி தலைவர்களுடன் இணைந்து செயல்படுவார் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜூன் மாதம் முடிந்த காலாண்டில், நிறுவனம் 20 சதவீத வருவாய் உயர்வை கொண்டுள்ளது. முந்தைய ஆண்டில் 145 மில்லியன் டாலரில் இருந்து, 174.1 மில்லியன் டாலரை அடைந்துள்ளது. 2023 இரண்டாம் காலாண்டில் இதன் செயல்பாட்டு வருமானம் 11.8 மில்லியன் டாலரில் இருந்து 13.1 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
அண்மையில் நிறுவனம், முரளி ஸ்வாமிநாதனை தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக நியமித்தது. கடந்த மாதம், தலைமை பிராடகட் அதிகாரி பிரகாஷ் ராமமூர்த்தி, ஐந்தாண்டுகளுக்கு பிறகு பதவி விலகினார்.
ஆகஸ்ட் 5 எஸ்.இ.சியில் தாக்கல் செய்த தகவல் படி, நிறுவனம் தலைமை தணிக்கை அதிகாரியாக பிலிப் லாரன்சை நியமித்தது. தலைமை வருவாய் அதிகாரியாக இருந்த பிரதீப் ரத்தினம் பிப்ரவரியில் பதவி விலகினார்.
ஆங்கிலத்தில்: புவனா காமத், தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan