IMF அமைப்பின் முன்னாள் பொருளாதார வல்லுனர்கள் சுவரில் இடம்பெறும் முதல் பெண் கீதா கோபினாத்!
இந்தியாவைச்சேர்ந்த கீதா கோபினாத், சர்வதேச நிதியம் அமைப்பின் முன்னாள் தலைமை பொருளாதார வல்லுனர்கள் சுவரில் இடம்பெறும் முதல் பெண்மணி எனும் சிறப்பை பெற்றுள்ளார்.
இந்தியாவைச்சேர்ந்த கீதா கோபினாத், சர்வதேச நிதியம் (IMF) அமைப்பின் முன்னாள் தலைமை பொருளாதார வல்லுனர்கள் சுவரில் இடம்பெறும் முதல் பெண்மணி மற்றும் இரண்டாவது இந்தியர் எனும் சிறப்பை பெற்றுள்ளார்.
2003 முதல் 2006 வரை ஐஎம்.எப் அமைப்பின் முதன்மை பொருளாதார வல்லுனர் மற்றும் ஆய்வு இயக்குனராக இருந்த ரகுராம் ராஜன் இந்த சிறப்பை பெற்ற முதல் இந்தியராக விளங்குகிறார்.
கீதா கோபினாத் 2018ல் ஐ.எம்.எப் தலைமை பொருளாதார வல்லுனராக நியமிக்கப்பட்டவர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துணை நிர்வாக இயக்குனராக பதவி உயர்வு பெற்றார்.
"வழக்கமான போக்கை உடைக்கும் வகையில், ஐஎம்.எப் அமைப்பின் முன்னாள் தலைமை பொருளாதார வல்லுனர்கள் wall-இல் இணைந்துள்ளேன்,” என்று கீதா கோபினாத் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இந்த செய்தியுடன், முன்னாள் பொருளாதார வல்லுனர்கள் இடம்பெறும் சுவர் படத்தையும் பகிர்ந்துள்ளார்.
வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த சர்வதேச அமைப்பின் முதல் பெண் தலைமை பொருளாதார வல்லுனராக கீதா கோபினாத் மூன்று ஆண்டுகள் செயல்பட்டுள்ளார். அவரது ஆய்வுகள் முன்னணி பொருளாதார் சஞ்சிகைகளில் இடம்பெற்றுள்ளன.
ஐ.எம்.எப் அமைப்பின் தலைமை பொருளாதார வல்லுனராக நியமிக்கப்படுவதற்கு முன் அவர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதார துறையில் பேராசிரியராக இருந்தார். அதற்கு முன், சிக்காகோ பல்கலைக்கழக வர்த்தக பள்ளியில் உதவிப் பேராசிரியராக இருந்தார்.
கேரளாவின் கன்னூரில் பிறந்து வளர்ந்த கீதா கோபினாத், தில்லியின் லேடி ஸ்ரீராம் பெண்கள் கல்லூரியில் படித்த பின், தில்லி ஸ்கூல் ஆப் எக்கனாமிக்ஸ் மற்றும் வாஷிங்டன் பல்கலையில் முதுகலை பட்டம் பெற்றார். அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலையில் டாக்டர் பட்டம் பெற்றார்.
சர்வதேச நிதி மற்றும் மேக்ரோ எகனாமிக்ஸ் ஆகிய துறைகளில் நிபுணத்துவம் பெற்ற கீதா கோபினாத், சர்வதேச பொருளாதாரம் கையேட்டின் ஆசிரியராக இருக்கிறார். அமெரிக்கன் எக்கனாமிக் ரிவ்யூ இதழின் இணை ஆசிரியராகவும், பொருளதார ஆய்வுகள் தொடர்பான இதழின் நிர்வாக இயக்குனராகவும் இருக்கிறார்.
செய்தி- பிடிஐ | தமிழில்: சைபர் சிம்மன்