முற்றிய கூகுள் விவகாரம்: சுந்தர் பிச்சை சிஇஒ பதவியில் தொடருவாரா? அல்லது ராஜினாமா செய்வாரா?
கூகுள் நிறுவனத்தின் சி இ ஓ பொறுப்பில் இருந்து சுந்தர் பிச்சை நீக்கப்படலாம் அல்லது அவரே ராஜினாமா செய்யலாம் என்ற தகவல் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொழில்நுட்ப உலகில் முடிசூடா மன்னனாக விளங்கி வருகிறது கூகுள் நிறுவனம். ’கூகுள் இன்றி அமையாது உலகு’ என மக்கள் கொண்டாடும் அளவிற்கு, தேடல் தொடங்கி அதன் பயனர்களுக்கு பல்வேறு தொழில்நுட்ப வசதிகளைச் செய்து கொடுத்து, மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் அங்கமாகவே கூகுள் மாறி விட்டது என்றால் அது மிகையில்லை.
இந்த கூகுள் நிறுவனத்தின் சி இ ஓவாக தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை பதவி வகித்து வருகிறார். ஆனால், சமீபகாலமாகவே சுந்தர் பிச்சையின் பதவிக்கு பல்வேறு விதத்தில் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.
அந்தவகையில், தற்போது Gemini AI எனும் கூகுளின் சாட்பாட் சர்ச்சை வலுத்துள்ளதின் மூலம் சுந்தர் பிச்சை கூகுளில் இருந்து பதவி விலகலாம் அல்லது அவர் பதவி நீக்கம் செய்யப்படலாம் என்ற தகவல் இணைய உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என்ன பிரச்சனை?
கடந்த 2022 -ம் ஆண்டு கூகுளுக்கு போட்டியாக ChatGPTஎனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை Open AI நிறுவனம் அறிமுகப்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக 2023ம் ஆண்டு Bard எனும் தொழில்நுட்பத்தை Google நிறுவனம் அறிமுகப்படுத்தியது. பின்னர், இந்த தொழிநுட்பம் வலுப்படுத்தப்பட்டு Gemini AI என்னும் சாட்பாட்டாக அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆனால், ஆரம்பம் முதலே இந்த ஜெமினி ஏஐ தொழில்நுட்பம் மக்களை திருப்தி படுத்தவில்லை என்றே கூறவேண்டும். தொழில்நுட்பக் கோளாறால் சரிவர செயல்படுவதில்லை, பயனர்களுக்கு சரியான விடையைக் கொடுப்பதில்லை, புகைப்படத்தை உருவாகும் image generation -ல் தெளிவான புகைப்படங்கள் இல்லை என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் இதன் மீது சுமத்தப்பட்டன. இந்தப் பிரச்சனை விரைவில் சரிசெய்யப்படும் என கூகுள் நிறுவனம் உறுதியளித்தது. ஆனாலும் இந்த சாட்பாட்டில் மக்களுக்கு திருப்தி ஏற்படவில்லை.
தொடர் சர்ச்சை
உதாரணமாக, Gemini AI -ல் மோடி ஒரு பாசிசவாதியா என பயனாளர் ஒருவர் கேள்வி எழுப்பியதற்கு, ‘ஆம் அவரது செயல்பாடுகளை வைத்து பார்க்கையில் பாசிசவாதி’ எனப் பதில் வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. Gemini AI சட்டங்களை மீறுவதாக, மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் புகாரை முன்வைத்தார். ஆனால், தொழில்நுட்பக் கோளாறுகளால் தவறு நிகழ்ந்துவிட்டது என இந்த விவகாரத்தில் கூகுள் இணை நிறுவனரான Sergey Brin மன்னிப்பு கோரினார்.
அதோடு, தொடர்ந்து ஜெமினி சாட்பாட்டில் படங்களை தவறாக சித்தரிப்பதாக சமூக வலைத்தளங்களில் சில பயனர்கள் வெளியிட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஜெமினியின் இமேஜ் ஜெனரேஷன் தொழில்நுட்பத்தின் பிரச்னையை சரிசெய்ய தொடர்ந்து முயற்சிகள் செய்வதாக சுந்தர் பிச்சை தெரிவித்தார்.
ஆனால், இந்த AI தொழில்நுட்பம் எதிர்பார்த்த அளவு வெற்றியை தராததால் கூகுள் சமீபத்தில் இந்த செயலியை இடைநிறுத்தியது. இதனால், அந்நிறுவனத்தின் பங்குகள் சரிந்தன. இதுவும் சுந்தர் பிச்சை எதிரான ஒன்றாக மாறியது. இது ஒருபுறம் இருக்க, தொடர் பணி நீக்கங்கள் காரணமாகவும் சுந்தர் பிச்சை சர்ச்சையில் சிக்கினார்.
வலுக்கும் எதிர்ப்பு
இப்படித் தொடர் சர்ச்சைகளில் சிக்கி வருவதால், கூகுளுக்கு வேறொரு நல்ல தலைமை தேவை என்ற குரல் சமூகவலைதளங்களில் வலுக்கத் தொடங்கியது.
Open AI நிறுவனத்தைச் சேர்ந்த அரவிந்த் சீனிவாஸ் என்பவர்,
‘கூகுள் நிறுவனம் நன்றாக செயல்பட வேண்டுமென்றால் சுந்தர் பிச்சை பதவி விலக வேண்டும்’ என கூறியுள்ளார். இதேபோல், ஆய்வாளர்கள் பென் தாம்சன் மற்றும் மார்க் ஷ்முலிக் ஆகியோர் கூகுளில் தலைமைப் பொறுப்புக்களை நீக்க வேண்டும் அல்லது மாற்றியமைக்க வேண்டும் என நேரடியாகவே சுந்தர் பிச்சைக்கு எதிராக பேசி உள்ளனர்.
‘எதிர்காலத்தில் கூகுளை வழிநடத்த சுந்தர் பிச்சை பொருத்தமானவர் அல்ல’ என்று மார்க் ஷ்முலிக்கும், ‘கடந்த கால பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டிய அவசியம் உள்ளது’ என்று பென் தாம்சனும் கூறியுள்ளனர்.
ராஜினாமா?
இப்படியாக கூகுளின் தலைமையில் மாற்றம் தேவை என்ற கருத்துகள் அதிகரித்து வரும் நிலையில், அதன் எதிரொலியாக சுந்தர் பிச்சையை உயர் பதவியில் இருந்து நீக்க அந்நிறுவனம் பரிசீலித்து வருவதாக சமூகவலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.
இது ஒருபுறம் இருக்க, தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருவதால் சுந்தர் பிச்சையே தனது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, கூகுள் நிறுவனத்திலிருந்து சுந்தர் பிச்சை பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை அவருக்கு பல வழிகளில் வருவதால் அவர் பதவி விலகும் நிர்பந்தத்தில் இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.
பொறுத்திருந்து பார்க்கலாம்
தமிழகத்தைச் சேர்ந்தவரான சுந்தர் பிச்சை, கடந்த 2004ம் ஆண்டில் இருந்து கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 2015ம் ஆண்டு கூகுள் சிஇஓ-ஆக அவர் பொறுப்பேற்றார். இவரது தலைமையில் கூகுள் நிறுவனம் பல மடங்கு வளர்ச்சியைக் கண்டது. பல புதிய விசயங்கள் மடடுமின்றி, அதிரடி மாற்றங்களும் கூகுளில் கொண்டு வரப்பட்டன.
ஆனால், வளர்ச்சியைப் போலவே பல சர்ச்சைகளிலும் தொடர்ந்து சுந்தர் பிச்சை சிக்கி வருகிறார். ஒவ்வொரு முறையும் இதே போன்று அவருக்கு எதிரான எதிர்ப்பு வலுக்கும் போதும், அவர் கூகுள் தலைமைப் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றே வலியுறுத்தப்பட்டு வருகிறது. கடந்தாண்டு கூகுளில் இருந்து சுமார் 12 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட போதும், இதே போன்று சுந்தர் பிச்சை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற எதிர்ப்பு வலுத்தது. ஆனால் அடுத்தடுத்த பிரச்சினைகளால் இந்த விவகாரம் நீர்த்துப் போனது.
இம்முறையும் அதேபோல் இந்த பிரச்சினை நீர்த்துப் போகுமா அல்லது சுந்தர் பிச்சை ராஜினாமா அல்லது பணிநீக்கம் செய்யப்படுவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
'சுந்தர் பிச்சைக்கு தொலைநோக்கு தலைமைப் பண்பு இல்லை' - 18 வருட கூகுள் ஊழியரின் காட்டமான பதிவு!