'சுந்தர் பிச்சைக்கு தொலைநோக்கு தலைமைப் பண்பு இல்லை' - 18 வருட கூகுள் ஊழியரின் காட்டமான பதிவு!
தொடர்ந்து 18 வருடங்கள் கூகுளில் பணியாற்றிய பொறியாளர் ஒருவர் தற்போது தனது பணியை ராஜினாமா செய்துள்ளதோடு, கூகுள் சி இ ஓ சுந்தர் பிச்சைக்கு ‘தொலைநோக்கு தலைமை’ இல்லை என கடுமையாக விமர்சித்து வெளியிட்டுள்ள பதிவு இணையத்தை பரபரக்க வைத்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் இருந்தே பல பெரிய நிறுவனங்கள் ஆட்குறைப்பு வேலைகளைத் தொடங்கி விட்டன. பெரும்பாலும் பொருளாதார சூழ்நிலைகளை காரணம் காட்டி இந்த பணி நீக்கம் நடைபெற்று வருகின்றன.
உலகின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான கூகுளும் ஏற்கனவே 10,000 பேர் வரை இந்த ஆண்டில் பணி நீக்கம் செய்துள்ளது. இந்த ஆட்குறைப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என சமீபத்தில் வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியது.
கூகுளில் இருந்து அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டவர்களும், கூகுள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். இதனால் இணையத்தில் அடிக்கடி பேசுபொருளாகவே கூகுள் நிறுவனம் இருந்து வருகிறது.
இந்நிலையில், ஏற்கனவே இப்படி ஆட்குறைப்பு நடவடிக்கைகளால் சர்ச்சைகளில் சிக்கி வரும் கூகுள் நிறுவனம், தற்போது முன்னாள் ஊழியர் ஒருவரின் கடுமையான விமர்சனத்தால் மீண்டும் இணையத்தில் பேசுபொருளாகி இருக்கிறது.
காட்டமான விமர்சனம்
சுமார் 18 வருடங்கள் கூகுளில் பொறியாளராக வேலை பார்த்த Ian Hickson என்பவர்தான் தற்போது கூகுளைப் பற்றி பரபரப்பான, காட்டமான விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.
அந்த முன்னாள் ஊழியர், ‘கூகுள் நிறுவனத்தின் கலாச்சாரம் காலப்போக்கில் அழிந்து வருவதாகவும், சி இ ஓ சுந்தர்பிச்சைக்கு தொலைநோக்கு தலைமைத்துவம் இல்லாததுதான் அதற்குக் காரணம்’ என்றும் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து சமூகவலைதளப் பதிவு ஒன்றை வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊழியர்கள் மகிழ்ச்சியாகப் பணிபுரிவதற்கு மிகவும் உகந்த இடங்களில் ஒன்றாக கூகுள் கருதப்படுகிறது. அதற்கு முக்கியக் காரணம் தனது ஊழியர்களுக்கு மிகச் சிறந்த சலுகைகளையும், நன்மைகளையும் கூகுள் வழங்கி வருவதுதான். ஆனால், அது உண்மையில்லை... நாம் பிரமித்துப் பார்க்கும் அளவிற்கு கூகுளின் நிர்வாகம் தற்போது இல்லை என இயன் வெளிப்படையாக தனது பதிவில் கூறி இருக்கிறார்.
18 வருட ஊழியர்
கடந்த 2005ம் ஆண்டு அக்டோபரில் கூகுளில் ஹெச்டிஎம்எல்-ல் பணிக்குச் சேர்ந்தவர்தான் இந்த இயன். ஒன்பது ஆண்டுகள் அங்கு பணி புரிந்தவர், பிறகு கூகுளின் மற்றொரு பிரிவான ப்ளூட்டரில் பொறியாளராக பணி புரிந்தார். சுமார் 18 ஆண்டுகள் கூகுளில் வேலை பார்த்த இயன், கடந்த வாரம் தனது வேலையை ராஜினாமா செய்தார்.
தனது ராஜினாமாவிற்குப் பிறகு கூகுளின் நிர்வாகத்தில் தற்போதுள்ள குறைகளை சுட்டிக் காட்ட நினைத்த அவர், தனது சமூகவலைதளப் பக்கத்தில் விரிவான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர்,
“பணிக்கு சேர்ந்த ஆரம்பத்தில், பயனர்கள் மற்றும் இந்த சமூகத்தின் மீது கூகுள் நிறுவனம் எவ்வளவு அக்கறைக் கொண்டுள்ளது என்பதைக் கண்கூடாக நான் பார்த்துள்ளேன். ஊழியர்கள் மீது நிறுவனம் கொண்டிருந்த அக்கறையால், ஊழியர்களும் உலகத் தகவல்களை ஒழுங்கமைத்து, அதை உலகளாவிய ரீதியில் அணுகக்கூடியதாகவும் பயனுள்ளதாகவும் மாற்றும் நிறுவனத்தின் நோக்கத்தில் எப்படியெல்லாம் கடமைப்பட்டிருந்தனர் என்பதையும் நேரடியாக நான் அறிவேன்."
லாப நோக்கத்திற்கு மாறியது!
காலப்போக்கில் தொழில்நுட்ப நிறுவனங்களின் பணி கலாச்சாரம் மாறத் தொடங்கி விடுகிறது. உதாரணமாக, ஒரு காலத்தில் பயனர்களின் சிறந்த நலன்களை மனதில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவுகள், காலப்போக்கில் அதிக லாபம் ஈட்டுவதை மட்டுமே இலக்காகக் கொண்டு அதிகளவில் எடுக்கப்பட்டது. ஒரு காலத்தில் கூகுளின் கலாச்சாரத்தின் அடையாளமாக இருந்த வெளிப்படைத்தன்மை, நாளாக நாளாக கரையத் தொடங்கியது.
சுந்தர் பிச்சையின் வழிகாட்டுதலின் கீழ், நிறுவனத்தின் தலைமையானது, தரநிலை ஊழியர்களுடன் தொடர்பு கொள்ளாமல் போனது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆயிரக்கணக்கானவர்களை கூகுள் பணி நீக்கம் செய்தது ஒரு கட்டாயப் பிழை ஆகும்.
காலாண்டு வருவாய் வளர்ச்சியில், குறுகிய பார்வையால் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது. பணிநீக்கங்கள் கூகுளின் கலாச்சாரத்தில் பேரழிவு தரக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஏனெனில், அவை ஊழியர்கள் மற்றும் நிர்வாகத்தினருக்கு இடையே உள்ள நம்பிக்கையை சிதைத்து, தரவரிசை மற்றும் கோப்புகளிடையே பயம் மற்றும் சித்தப்பிரமை உணர்வுக்கு வழிவகுத்தது.
பல்வேறு முன்னாள் கூகுள் ஊழியர்கள் சமூக ஊடக தளங்களில் பணிநீக்கம் செய்யப்பட்ட அனுபவத்தை விவரித்துள்ளனர். அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதை திடீரென அறிந்ததாகவும், பலர் தங்கள் அமைப்புகளில் இருந்து வெளியேறியதாகவும் கூறியுள்ளனர். நூற்றுக்கணக்கான கூகுள் ஊழியர்களும் சுந்தர்பிச்சைக்கு கடிதம் எழுதி, பணிநீக்க நிலைமையை சிறப்பாகக் கையாளக் கோரினர்.
சுந்தர் பிச்சை தான் காரணம்
”இன்று கூகுள் நிறுவன பிரச்சனைகளில் பெரும்பாலானவை சுந்தர் பிச்சையின் தொலைநோக்கு தலைமையின் பற்றாக்குறையே ஆகும். மேலும், ஆரம்பகால கூகுளின் நெறிமுறைகளை பராமரிப்பதில் அவருக்கு தெளிவான அக்கறையின்மையினாலும் இந்த பிரச்சினைகள் உருவாகி இருக்கின்றன,” என இவ்வாறு அடுக்கடுக்கான காரணங்களை முன்வைத்துள்ளார் இயன்.
ஆனால், என்ன காரணத்திற்காக 18 வருடங்களுக்குப் பிறகு இயன் தனது வேலையை ராஜினாமா செய்தார் என்பது பற்றித் தெரியவில்லை. கூகுளின் பணி கலாச்சாரம் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சையின் தலைமைத்துவம் ஆகியவற்றின் மீது கொண்ட அதிருப்தியால் அவர் தனது வேலையை ராஜினாமா செய்ததாகக் கூறப்படுகிறது.
தினமும் ஒரு மணி நேரம் வேலை; ஆண்டிற்கு சம்பளம் ரூ.1.2 கோடி - வைரலாகும் கூகுள் ஊழியரின் கதை!