சிங்காரச் சென்னை 2.0 முதல் பொருளாதர ஆலோசனை குழு வரை: ஆளுநர் உரையில் என்னென்ன அம்சங்கள்!
16வது கூட்டத்தொடர் முதல் நாளில் ஆளுநர் உரை!
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. திமுக சட்டப்பேரவை தேர்தலில் வென்ற பிறகு நடக்கும் முதல் கூட்டத்தொடர் இதுவாகும். இதனால் என்னென்ன அறிவிப்புகள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தன.
இந்த நிலையில் 16வது சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆற்றிய உரையில் உள்ள சில முக்கியமான பாயிண்டுகளை பார்ப்போம்!
'வணக்கம்’ என தமிழில் தனது உரையை தொடங்கிய ஆளுநர், “தமிழ் இனிமையான மொழி. எளிமையான வாழ்க்கையை வாழுங்கள்,’’ எனக் கூறினார்.
* முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட உழவர் சந்தைகள் தமிழகம் முழுவதும் மீண்டும் உருவாக்கப்படும்.
* தமிழகத்தின் நிதி நிலைமை குறித்து ஜூலையில் வெள்ளை அறிக்கை.
* மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு நீட் தேர்வை ரத்து செய்ய சட்ட முன்வடிவு கொண்டுவரப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெறுவோம்.
* பெரிய நகரங்களில் நெருக்கடியைக் குறைக்கும் வண்ணம் புறநகர்ப் பகுதிகளில் நவீன வசதிகளுடன் துணை நகரங்கள் அமைக்கப்படும்.
* மருத்துவ ஆக்ஸிஜன் வழங்க ரூபாய் 50 கோடி, மூன்றாம் அலையைச் சமாளிக்கும் பொருட்டு கொரோனா மூன்றாம் அலை முன்னேற்ற நடவடிக்கைக்கு ரூபாய் 50 கோடி ஒதுக்கீடு.
* தமிழக பொருளாதாரம் மீண்டும் எழுச்சி பெற நடவடிக்கை எடுக்கும் வகையில், பொருளாதார நிபுணர்கள் ரகுராம் ராஜன், டாக்டர் அரவிந்த் சுப்பிரமணியன், பொருளாதார நிபுணர் ஜான் ட்ரீஸ், டாக்டர் எஸ்.நாராயண் ஆகியோரைக்கொண்ட பொருளாதார ஆலோசனைக்குழு அமைக்கப்படும்.
* லோக் ஆயுக்தாவுக்கு புத்துயிர்
* அரசுப் பணிகளில் ஆதி திராவிடர் மற்றும் பழக்குடியினருக்கான நிரப்பப்படாத காலியிடங்கள் சிறப்பு நியமனங்கள் மூலம் நிரப்ப முடிவு.
* வேலைவாய்ப்புகளில் பெண்கள் பங்களிப்பை அதிக அளவில் ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்காக மாவட்டம்தோறும் மகளிருக்கான விடுதிகள் அமைக்கப்படும்.
* சர்வதேசத் தரத்துக்கு சென்னை மாநகரின் கட்டமைப்பை மேம்படுத்த ‘சிங்காரச் சென்னை 2.0’ திட்டம்.
போன்ற பல்வேறு அம்சங்கள் கூறப்பட்டுள்ளன. இதில், ’சிங்காரச் சென்னை 2.0’ திட்டம், மாவட்டம்தோறும் மகளிருக்கான விடுதிகள் மற்றும் பொருளாதார ஆலோசனைக்குழு போன்ற அறிவிப்புகள் முக்கியக் கவனத்தை ஈர்த்து வருகின்றன.