கல்வி கற்க வயது ஒரு தடையல்ல என்று நிரூபித்துள்ள 85 வயது மூதாட்டி!
இவருடன் கேரளாவின் வயநாடு பகுதியில் பழங்குடி குடியேற்றங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 3,000 பேர் எழுத்தறிவு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
“கற்றுக்கொள்வதை நிறுத்திக்கொள்பவர்கள் எந்த வயதினராக இருப்பினும் வயது முதிர்ந்தவர்கள். அதேபோல் தொடர்ந்து கற்றுக்கொள்பவர்கள் இளமையானவர்களாக இருப்பார்கள்,” என்கிறார் தொழிலதிபர் மற்றும் ஃபோர்ட் மோட்டார் நிறுவனத்தின் நிறுவனரான ஹென்ரி போர்ட்.
வயநாடு பகுதியைச் சேர்ந்த 85 வயது கெம்பிக்கு இது பொருத்தமானதாக இருக்கும். இவர் சமீபத்தில் கேரள மாநில எழுத்தறிவு இயக்கத்தின் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
இந்தத் தேர்வு எழுதிய 2,993 பேரில் மனந்தவாடியில் உள்ள பதச்சிகுன்னு காலனியைச் சேர்ந்த கெம்பிதான் வயது முதிர்ந்தவர்.
கேரளாவின் வயநாடு பகுதியின் பழங்குடி இனத்தைச் சேர்ந்த கெம்பி மாநில ஏஜென்சி நடத்திய எழுத்தறிவு தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளதாக இந்தியா டுடே தெரிவிக்கிறது. பழங்குடி கல்வியறிவு திட்டத்தில் இரண்டாம் கட்டமாக நடத்தப்பட்ட தேர்வு எழுதிய கெம்பி Edex Live உடனான உரையாடலில் கூறும்போது,
“குழந்தைப் பருவத்திலேயே எனக்கு படிப்பில் ஆர்வம் இருந்தது. ஆனால் நான் பள்ளிக்குச் செல்ல என்னுடைய பெற்றோர் அனுமதிக்கவில்லை,” என்றார்.
கெம்பி சிறு வயதில் தினக்கூலியாக பணியாற்றியுள்ளார். இருப்பினும் படிப்பின் மீது ஆர்வம் இருந்து வந்தது. கல்வி குறித்து பிரச்சாரம் மேற்கொண்ட கிளாரம்மா மற்றும் பயிற்றுவிப்பாளர் சுனிதா இவரை அணுகியபோது இத்தனை ஆண்டுகள் கழித்து இவர் படிப்பதற்கான மற்றொரு வாய்ப்பு கிடைத்தது.
கிளாரம்மா உடன் இணைந்து சுனிதா பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களுக்கான கல்வியறிவு திட்டம் குறித்து மாநிலம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டபோது கெம்பாவை படிக்க ஊக்குவித்துள்ளார். பட்டியல் பழங்குடி மக்கள் மேம்பாட்டுத் துறை உடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
கெம்பி தினக்கூலியாக பணியாற்றும் தனது இரண்டு மகன்கள் குறித்து கூறும்போது,
”அவர்கள் இருவருமே பள்ளிக்குச் சென்று படித்துள்ளனர். எனவே வகுப்பில் கற்றுக்கொடுப்பதை நான் புரிந்துகொள்ள அவர்கள் உதவுவார்கள். வகுப்பில் உடன் படிப்பவர்களும் எனக்கு உதவுவார்கள்,” என்றார். கெம்பி தற்போது கணிணி படிக்க விரும்புகிறார்.
மாநிலத்தில் நடத்தப்பட்ட சமீபத்திய தேர்விற்குப் பிறகு கே.எஸ்.எல்.எம் ஏற்பாடு செய்த முதல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 7,302-ஆக அதிகரித்துள்ளது.
கட்டுரை: THINK CHANGE INDIA