’மாங்கல்யம் தந்துனா...’ முழங்க மசூதியில் நடந்த இந்துக் கல்யாணம்!
இந்து முஸ்லீம் ஒற்றுமையாக கைகோர்த்து மசூதியில் நடந்த இந்து முறை திருமணம்.
மசூதி இருந்த இடம் இந்துவிற்கா, முஸ்லீம்களுக்கா என்ற 100 ஆண்டு சர்ச்சை முடிவுக்கு வந்த போது சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படுமோ என்ற அச்சத்தை தவிடு பொடியாக்கியது, சம்பந்தப்பட்டவர்கள் கடைபிடித்த அமைதி. நாடு பிரிவினைவாதத்தில் இருந்து விடுபட்டு ஒற்றுமை வழியை தேர்ந்தெடுத்திருப்பதற்கான அடையாளமாக அந்த நிகழ்வு அமைந்தது. இதே போன்று நாட்டிற்கு முன் உதாரணமாக மற்றொரு சுபநிகழ்வு கேரளாவில் நடந்துள்ளது.
பொதுவாக மசூதிகள் என்றால் இஸ்லாமியப் பெண்களையே அனுமதிக்கமாட்டார்கள் என்று கேள்விபட்டிருக்கிறோம். ஆனால் இதற்கு விதிவிலக்காக கேரளாவைச் சேர்ந்த ஜமாத் மசூதி ஒன்று திருமண மண்டபமாக மாறி அதுவும் இந்து முறைப்படியிலான திருமணத்தை நடத்தி சைவ விருந்தும் கொடுத்து அசத்தியுள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் செருவல்லியை சேர்ந்தவர் பிந்து. இவரது கணவர் அசோகன் உயிரிழந்துவிட்ட நிலையில் மிகவும் கஷ்டப்பட்டு தன்னுடைய இரு மகள்கள் மற்றும் ஒரு மகனை வளர்த்து வருகிறார் பிந்து.
ஏழ்மை நிலையில் குடும்பத்தை நடத்தவே கஷ்டப்பட்டு வந்த பிந்து, தனது 27 வயதான மகள் அஞ்சுவிற்கு திருமண ஏற்பாடு செய்ய நினைத்திருக்கிறார். அஞ்சுவை திருமணம் செய்து கொள்ள ஆலப்புழா கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சரத் சம்மதம் தெரிவித்திருக்கிறார். ஒரு மாதத்திற்கு முன்னரே இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், கல்யாண செலவுக்கு பணம் கிடைக்காமல் கஷ்டப்பட்டிருக்கிறார் பிந்து.
இதனையடுத்து பிந்துவின் பக்கத்து வீட்டில் வசிப்பவரின் ஆலோசனைப்படி செருவாலி முஸ்லீம் ஜமாத் செயலர் நிஜுமுதீன் அலுமுட்டிலிடம் உதவி கேட்டிருக்கிறார்.
பிந்து உதவி கோரியது பற்றி ஜமாத் நிர்வாகிகளுடன் நிஜுமுதீன் ஆலோசனை நடத்தி திருமணத்திற்கு உதவி செய்ய முடிவு செய்திருக்கிறார். மேலும் திருமணத்தை ஜமாத் மசூதி வளாகத்திலேயே இந்து முறைப்படி நடத்திக் கொள்ளவும் அனுமதி தந்துள்ளனர். இதன்படி,
ஜனவரி 19ம் தேதி அஞ்சு, சரத் திருமணம் பிற்பகல் 12.15 மணியளவில் சிறப்பாக நடைபெற்றுள்ளது. மசூதி வளாகம் பூக்கள், வாழை மற்றும், தென்னை மரங்களால் அலங்கரிக்கப்பட்டு குத்துவிளக்கேற்றி வைக்கப்பட்டு இந்து மதச் சடங்குகள் நடத்தப்பட்டன. வேத மந்திரங்கள் கூற சாஸ்திரிகளும் மசூதி வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டிருந்தார். மத வேறுபாடின்றி இந்துக்களும், முஸ்லீம்களும் பெருமளவில் இந்தத் திருமணத்தில் கலந்து கொண்டனர்.
கெட்டிமேளம் முழங்க, வேத சாஸ்திரங்களோடு அஞ்சுவின் கழுத்தில் தாலி கட்டினார் சரத். மணமக்களுக்குக் கூடி இருந்தவர்கள் அனைவரும் கைதட்டியும், அட்சதை தூவியும் தங்களது ஆசிர்வாதங்களை அளித்தனர்.
அஞ்சுவிற்கு ஜமாத் சார்பில் 10 சவரன் நகையும், ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்களும் பரிசாக அளிக்கப்பட்டது. திருமணம் மட்டும் செய்து வைத்தால் போதுமா, வந்தவர்களை உபசரிக்க வேண்டாமா, அதிலும் குறை வைக்க வில்லை ஜமாத். திருமணத்திற்கு வந்திருந்த நூற்றுக்கணக்கானோருக்கு மசூதி வளாகத்திலேயே சைவ விருந்து அளிக்கப்பட்டது.
மசூதி வளாகத்தில் நடைபெற்ற இந்து திருமணத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்தத் திருமணம் பற்றி கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கேரளா எப்போதுமே மத நல்லிணக்கத்திற்கான முன்னோடி மாநிலம், அதனை இந்தத் திருமணம் நிரூபித்துள்ளது. மணமக்கள், ஜமாத் நிர்வாகிகள் மற்றும் மணமக்களின் குடும்பத்தாருக்கு பினராயி விஜயன் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.