இந்தியாவில் கொரோனா தடுப்பூசியை பெறுவது எப்படி?
26ஆயிரம் தன்னார்வலர்களைக்கொண்டு கோவேக்சின் தடுப்பூசி பரிசோதனை செய்யப்படும்!
இந்தியாவில் இரண்டு கொரோனா தடுப்பூசிகளுக்கு அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி அளவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு. மற்றொன்று, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின். 26ஆயிரம் தன்னார்வலர்களைக்கொண்டு Covaxin தடுப்பூசி பரிசோதனை செய்யப்படும் என பாரத் பயோடெக் நிறுவனம் அண்மையில் தெரிவித்திருந்தது.
அதன்படி தடுப்பூசிக்கான சோதனை நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கடந்த சனிக்கிழமையன்று நடத்தப்பட்டது. அப்போது, கொரோனா தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் அதன் திறன் குறித்து வரும் வதந்திகள், தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்திருந்தார்.
27 கோடி பேரில் 50 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஜூலை மாதம் வரை தடுப்பூசி போடுவது தொடர்பான விவரங்கள் இறுதி செய்யப்படும் என அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறியிருந்தார்.
அரசு மற்றும் தனியார் சுகாதார வசதிகளிலிருந்து தடுப்பூசி பயனர்கள் குறித்த தகவல்களை சேகரிக்க மையம் அதிகாரப்பூர்வ ஆன்லைன் தளமான Co-WIN என்ற செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பயனாளிகளின் தரவு பதிவேற்றப்படுவதை உறுதிசெய்யுமாறு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தபட்டது.
நாட்டிலுள்ள 120 கோடி மக்களுக்கு ஐந்து கட்டங்களாகத் தடுப்பூசியைச் செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. காரணம் இதனால், அதிக ஆபத்தில் உள்ளவர்களுக்கும் தேவைப்படுபவர்களுக்கும் தடுப்பூசி கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. வரும் 13ம் தேதி முதல் இந்தியாவில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கும் என மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசியை பெறுவது எப்படி?
கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என நினைப்பவர்கள்,
- முதலில் CoWIN என்ற தளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.
- அதில் ஆதார் அல்லது அரசின் ஏதேனும் ஒரு புகைப்பட அடையாளத்தைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- அதைத்தொடர்ந்து தடுப்பூசி வழங்கப்படும் தேதி, இடம் மற்றும் நேரம் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும்.
தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்கள் நிச்சயம் முன்னரே இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று அரசு திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
இந்தியாவைப்பொறுத்தவரை, 3 வகையான இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆரம்பச் சுகாதார மையங்களில் தடுப்பூசி வழங்கப்படும். அடுத்த கட்டமாகப் பள்ளிகள், சமூக அரங்குகளில் வழங்கப்படும். இதைத் தவிர மிகவும் பின்தங்கிய மற்றும் கிராமங்களில் சிறப்பு வாகனங்கள் மூலம் தடுப்பூசி செலுத்து மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தடுப்பூசி வழங்கும் அனைத்து இடங்களிலும் காத்திருக்கும் அறை, தடுப்பூசி செலுத்தும் அறை, கண்காணிப்பு அறை என மூன்று அறைகள் இருக்கும். தடுப்பூசி எடுத்துக்கொள்ள வருபவர்கள் முதலில் காத்திருக்கும் அறையில் இருப்பார்கள். அங்கு அவரது அடையாள அட்டைகள் சரி பார்க்கப்பட்டு, தடுப்பூசி செலுத்தும் அறைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். அதன் பின், சிறிது நேரம் கண்காணிப்பு அறையில் தடுப்பு மருந்து எடுத்துக்கொண்டவர்களின் உடல் நிலை கண்காணிக்கப்படும். அதன் பின்னர், அவர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள்.
தகவல் உதவி- deccanherald | தொகுப்பு: மலையரசு