இந்தியாவில் 'ஜனவரி 13 முதல் கொரோனா தடுப்பூசி’ - யாருக்கு முன்னுரிமை?
நாடு முழுவதும் வரும் 13ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டும்!
நாடு முழுவதும் வரும் 13ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக முன்களப்பணியாளர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பானது வெகுவாகக் குறைந்ததுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இரண்டு கொரோனா தடுப்பூசிகளுக்கு அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று சீரம் நிறுவனத்தின் ‘Covishield'. மற்றொன்று, பாரத் பயோடெக் நிறுவனத்தின் 'Covaxin'.
கொரோனா வைரஸ் நோய்த்தொற்று தடுப்பூசிகளான கோவிஷீல்டு, கோவாக்சினுக்கு அவசரகால பயன்பாட்டு அனுமதி வழங்குவதாக இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி அதிகாரபூர்வமாக அறிவித்ததையடுத்து, கடந்த வாரம் இரண்டு தடுப்பூசிகளுக்கான ஒத்திகை நாடு முழுவதும் நடைபெற்றது.
இந்நிலையில், 13ம் தேதியிலிருந்து கொரோனா தடுப்பூசி போடப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது மத்திய அரசு. முதற்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. சென்னை உட்பட நாடு முழுவதும் நான்கு இடங்களில் கொரோனா தடுப்பூசியை இருப்பு வைக்கும் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையில், புது தில்லியில் சுகாதார அமைச்சகத்தின் செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய செயலாளர் ராஜேஷ் பூஷண், ஜி.எம்.எஸ்.டி எனப்படும் நான்கு முதன்மை தடுப்பூசி மையங்கள், ஹரியானாவின் கர்னல், மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தாவில் உள்ளன என்றும், நாட்டில் மொத்தம் 37 தடுப்பூசி மையங்கள் உள்ளன என்றும் தெரிவித்தார். அங்கு தடுப்பூசிகள் மொத்தமாக சேமித்து, விநியோகிக்கப்படும் என்றும் அவர் கூறினார்,
"சேமிக்கப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை மற்றும் வெப்பநிலை ஆகியவை டிஜிட்டல் முறையில் கண்காணிக்கப்படும். ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இந்த வசதி இந்தியாவில் உள்ளது. சுகாதாரத்துறைப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களின் தரவுகள் CO-WIN தளத்தில் அவர்களது மொத்த விவரங்களும் இருப்பதால் அவர்கள் பதிவு செய்ய வேண்டிய தேவையில்லை.”
நாட்டின் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.5 லட்சத்தை விடக் குறைவாகவே உள்ளது. அதேபோல நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் குறைந்துவருகிறது. தற்போது வெறும் 1.97 சதவீத மக்களுக்கு மட்டுமே தொற்று உள்ளது.
மொத்த பாதிப்புகளில் சுமார் 44 சதவீதம் பேர் மிதமானது முதல் கடுமையான அறிகுறிகளைக் கொண்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றன. மீதமுள்ள 56 சதவிகித பேர் மிகவும் லேசான அல்லது அறிகுறியில்லாமல் வீடுகளிலே தங்களை தனிப்படுத்திக் கொண்டுள்ளனர்” என்று மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறினார்.
தகவல்: பிடிஐ