Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரங்கள் எவை தெரியுமா?

இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நகரங்கள் எவை என்ற பட்டியலை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது

இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரங்கள் எவை தெரியுமா?

Tuesday August 30, 2022 , 3 min Read

இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நகரங்கள் எவை என்ற பட்டியலை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது.

ஒரு பெண் கழுத்து நிறைய நகைகளுடன் நள்ளிரவில் வீதி வழியே சென்றுபாதுகாப்பாக வீடு திரும்பும் போதுதான் உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக ஏற்றுக்கொள்ளப்படும் என்றார் தேசப்பிதா மகாத்மா காந்தி. அதற்கு எதிர்மறையாக பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள், குடும்ப வன்முறை, தாக்குதல்கள், ஆணவப் படுகொலை, கொலை உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

தேசியக் குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி,

இந்தியாவில் 2021 ஆம் ஆண்டில் மட்டும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக மொத்தம் 4,28,278 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது 2020ம் ஆண்டு 3,71,503 வழக்குகளாக இருந்த நிலையில், கடந்த ஆண்டு 15.3 சதவீதம் அதிகரித்துள்ளது.

2021 ஆம் ஆண்டில், இந்தியாவில் சராசரியாக ஒவ்வொரு 74 வினாடிக்கும் ஒருமுறை பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

Crime

இதனிடையே இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலங்களின் பட்டியலில் தலைநகர் டெல்லி முதலிடம் பிடித்துள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் டெல்லி முதலிடம்

2019-2021 ஆம் ஆண்டிற்கான தேசிய குற்ற ஆவண காப்பக தரவுகளின் படி, டெல்லி முதலிடத்தில் உள்ளது. டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஓராண்டில் மட்டும் 40 சதவீதம் வரை அதிகரித்து, 13,892 குற்றவழக்குகள் பதிவாகியுள்ளன.

நாட்டின் 19 பெருநகரங்களிலும் நடக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் டெல்லியின் பங்கு மட்டும் 32.20 சதவீதமாக உள்ளது. கடந்த ஆண்டு டெல்லியில் தினமும் 2 சிறுமிகள் வீதம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

தலைநகரில் பதிவாகியுள்ள பெண்களுக்கு எதிரான குற்றங்களில் கடத்தல், சிறுமிகளுக்கான பாலியல் வன்கொடுமை, கணவர் மூலம் பெண்கள் மீது நடத்தப்படும் குடும்ப வன்முறை ஆகியவையே அதிக அளவில் இருப்பதாக தேசியக் குற்ற ஆவண காப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட பிற பெருநகரங்களுடன் ஒப்பிடுகையில், தலைநகர் டெல்லியில் அதிக எண்ணிக்கையிலான குற்றச்சம்பவங்கள் பதிவாகியுள்ளன. குறிப்பாக கடத்தல் தொடர்பாக 3,948 வழக்குகளும், கணவர்களால் கொடுமைப்படுத்துதல் தொடர்பாக 4,674 வழக்குகளும், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்பாக 8,33 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

இந்தியாவில் உள்ள மற்ற நகரங்களை விட டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இரண்டு மடங்கு அதிகமாகும்.

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நகரங்கள் எவை?

மும்பையும் பெங்களூருவும் பட்டியலில் அடுத்த இடத்தைப் பிடித்துள்ளன. டெல்லியைத் தொடர்ந்து மும்பையில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களின் அடிப்படையில், 5,543 வழக்குகளும், பெங்களூரில் 3,127 வழக்குகளும் பதிவாகியுள்ளன. இந்தியாவில் உள்ள 19 நகரங்களில் நடந்த மொத்த குற்றங்களில் மும்பை மற்றும் பெங்களூருவில் முறையே 12.76 சதவீதம் மற்றும் 7.2 சதவீதம்.

women safety

பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தொடர்பாக மகாராஷ்டிராவில் 10,568 வழக்குகளும், உத்தரபிரதேசத்தில் 9,393 வழக்குகளும், ராஜஸ்தானில் 9,079 வழக்குகள் பதிவாகியுள்ளன.

2021 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான ஐபிசி குற்றங்களின் எண்ணிக்கையில் ஒடிசா ஐந்தாவது இடத்தில் உள்ளது. உத்தரப் பிரதேசத்தில் 44,230 வழக்குகளும், ராஜஸ்தானில் 40,056 வழக்குகளும், மேற்கு வங்கத்தில் 33,247 வழக்குகளும் மற்றும் மகாராஷ்டிராவில் 33,182 வழக்குகளும் பதிவாகியுள்ளன. ஒடிசாவில் ஐபிசி சட்டத்தின் கீழ் 27,792 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வரதட்சணை கொடுமையால் மரணம்:

இந்தியாவின் 19 பெருநகரங்களோடு ஒப்பிடும் போது, டெல்லியில் 36% வரதட்சணை இறப்புகள் அரங்கேறியுள்ளன.

தலைநகரில் 2021ல் 136 வரதட்சணை மரண வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது 19 பெருநகரங்களில் வரதட்சணை கொடுமை காரணமாக ஏற்பட்ட மொத்த இறப்புகளில் 36.26 சதவீதமாகும்.

Crime

ஒடிசா 293 வழக்குகளுடன் ஆறாவது இடத்தைப் பிடித்ததுள்ளது. அதனைத் தொடர்ந்து ராஜஸ்தான், மேற்கு வங்காளம், மத்தியப் பிரதேசம், பீகார் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன.

பாலியல் வன்கொடுமை:

2021 ஆம் ஆண்டில் மொத்தம் 31,677 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் அதிகபட்சமாக 6,337 வழக்குகள் ராஜஸ்தானிலும், அதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசம் 2,947 வழக்குகளும், உத்தரப் பிரதேசத்தில் 2,845 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

கணவன் அல்லது அவரது உறவினர்களால் கொடுமைப்படுத்தப்பட்டது தொடர்பாக 31.8 சதவீத வழக்குகள் பதிவாகியுள்ளன. அதைத் தொடர்ந்து 'பெண்களின் அடக்கத்தை சீர்குலைக்கும் நோக்கத்தில் பெண்கள் மீதான தாக்குதல்' என்ற பிரிவின் கீழ் 20.8 சதவீதம் வழக்குகள் பதிவாகியுள்ளன.

'பெண்களைக் கடத்தல் மற்றும் கடத்தல்' பிரிவின் கீழ் 17.6 சதவீதமும் மற்றும் பாலியல் வன்கொடுமை தொடர்பாக 7.4 சதவீத வழக்குகளும் பதிவாகியுள்ளன.

‘பாலியல் வன்கொடுமை புரிந்து கொலை/ கூட்டுபாலியல் வன்கொடுமை’ பிரிவின் கீழ் 48 வழக்குகளுடன் உத்தரப் பிரதேசம் மீண்டும் முதலிடத்திலும், 46 வழக்குகளுடன் அசாம் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

தென் மாநிலங்களில் சைபர் க்ரைம் நிலவரம்:

தென் மாநிலங்களில், சைபர் குற்றங்களின் எண்ணிக்கை கேரளாவில் மிகக் குறைவாகப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் சைபர் குற்றங்களின் எண்ணிக்கை 1.4 ஆகக் குறைந்துள்ளது.

Crime

ஒரு லட்சம் மக்கள்தொகையில் குற்ற நிகழ்வுகளின் விகிதம் கணக்கிடப்பட்டுள்ளது. அதன்படி,

இந்தியா முழுவதும், தெலுங்கானாவில் அதிகபட்சமாக 27.3 சைபர் குற்றங்கள் அரங்கேறியுள்ளன. கர்நாடகாவில் 12.1 சதவீதமும் பதிவாகியுள்ளது.

பெங்களூரில் 6,423 சைபர் கிரைம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து, ஐதராபாத் 3,303 வழக்குகளும், சென்னையில் 76 வழக்குகளும், கொச்சி 62 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

சிக்கிம் 2021ல் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக சைபர் கிரைம் வழக்குகளின் எண்ணிக்கை பூஜ்ஜியமாக பதிவாகியுள்ளது.