சுரைக்காயில் இருந்து புதுமையான கலைப் படைப்புகள்!
சீமா பிரசாத் மைசூரு பகுதியைச் சுற்றியுள்ள பெண்கள், விவசாயிகள், பழங்குடியினர் போன்றோர் சுரைக்காய் கொண்டு கலைப்படைப்புகளை உருவாக்கி வருவாய் ஈட்ட பயிற்சியளிக்கிறார்.
பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதுடன் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
கர்நாடகாவின் மைசூரு பகுதியில் வசிக்கும் சீமா பிரசாத் சுரைக்காய் கொண்டு பிளாஸ்டிக்கிற்கான புதுமையான மாற்றை உருவாக்கியுள்ளார். இது சற்றே விநோதமான முயற்சியாகும்.
சீமா சுரைக்காயின் தடிமனான தோல் பகுதியைக் கொண்டு கண்டெயினர், பொருட்களை சேமித்து வைக்கும் பாத்திரம், குவளை, பென் ஸ்டாண்ட், அலங்கார விளக்குத் திரை போன்ற பல்வேறு பொருட்களைத் தயாரிக்கிறார்.
2017ம் ஆண்டு சீமா இந்தக் கலை வடிவத்தை ஊக்குவிக்கத் தீர்மானித்து தனது கணவர் கிருஷ்ணா பிரசாத் உடன் இணைந்து 'க்ருஷிகலா’ (Krishikala) தொடங்கினார். கிராமவாசிகள் சுரைக்காய் கொண்டு கலைநயமிக்க பொருட்களை உருவாக்கி வருவாய் ஈட்ட இந்த நிறுவனம் உதவுகிறது. இதற்காக விவசாயிகள், பெண்கள், பழங்குடியினர் போன்றோருக்கு சீமா பயிற்சியளிக்கிறார்.
”சுரைக்காயை மக்கள் அதிகம் விரும்பி வாங்குவதில்லை என்பதால் சுரைக்காய் வளர்ப்பின் மூலம் விவசாயிகளால் அதிக லாபம் ஈட்டமுடிவதில்லை. எனினும் தற்போது அதன் மதிப்பை உணர்ந்து அதிகம் வளர்க்கத் தொடங்கியுள்ளனர்,” என்று சீமா பிரசாத் தெரிவித்ததாக ‘EdexLive’ குறிப்பிட்டுள்ளது.
சுரைக்காயை கலையாக மாற்றுதல்
அரசு சாரா நிறுவனம் ஒன்றின் மூலம் டான்சானியா மற்றும் கென்யா பகுதிகளில் சுரைக்காயைக் கொண்டு கலைப்பொருட்களைத் தயாரிப்பதை சீமா கண்டார். அப்போதுதான் இந்த எண்ணம் அவருக்குத் தோன்றியது.
”ஆப்ரிக்காவில் உள்ள பல உள்ளூர் சமூகங்கள் இந்தக் கலையில் நிபுணத்துவம் பெற்றுள்ளனர். இந்த செயல்முறை குறித்து நான் தெரிந்துகொண்டபோது இந்த காய்கறி வகையை பாதுகாக்க இந்தக் கலையை பயன்படுத்துவதற்கான சாத்தியம் இருப்பதைத் தெரிந்து கொண்டேன்,” என்று சீமா ‘டெக்கான் ஹெரால்ட்’ உடனான உரையாடலில் தெரிவித்தார்.
க்ருஷிகலா மூலம் கிராமப்புற பெண்களும் விவசாயிகளும் சுரைக்காய் கொண்டு பல்வேறு பொருட்களைத் தயாரிக்கின்றனர். இவை ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட 500 ரூபாய்க்கு சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகளும் கிராமப்புற பெண்களும் சிறப்பாக வருவாய் ஈட்டி வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள முடிகிறது.
க்ருஷிகலா ஊழியரான நந்தினி ’நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்’ உடனான உரையாடலில் கூறும்போது,
“சுரைக்காய் அறுவடை செய்யப்பட்ட பிறகு 45 நாட்கள் காயவைக்கப்படுகிறது. பின்னர் சுரைக்காயில் ஒரு துளை போடப்பட்டு விதைகள் நீக்கப்படுகிறது. சுரைக்காயை இரவு முழுவதும் ஊறவைத்து அதனுள் இருக்கும் சதைப்பகுதி நீக்கப்படுகிறது. அதன் பிறகு கலைப்பொருட்கள் உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறது. முழுமையாக சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் தயாரிக்க தற்போது ஆர்கானிக் நிறங்களைக் கொண்டு ஆராய்ந்து வருகிறோம்,” என்றார்.
கர்நாடகா முழுவதும் உள்ள கிராமங்களில் சுரைக்காயைப் பதப்படுத்தும் யூனிட்களை அமைக்க விரும்புகிறார். இதனால் மக்கள் சுரைக்காயை உற்பத்தி செய்து நேரடியாக விற்பனை செய்யமுடியும். இந்த யூனிட் அமைப்பதற்கு சுமார் 20,000 ரூபாய் வரை முதலீடு தேவைப்படும். சீமா நெல், மூங்கில், புல் போன்ற இதர பொருட்களையும் கொண்டு சுற்றுச்சூழலுக்கு உகந்த கலைப்படைப்புகளையும் உருவாக்க விரும்புகிறார்.
கட்டுரை: THINK CHANGE INDIA