முதலீட்டு கூட்டாண்மை: தமிழக முதல்வர் மற்றும் தொழில் துறை அமைச்சரை சந்தித்த யுஏஇ அமைச்சர் அல் மரியை!
அப்துல்லா பின் டூக் அல் மரி மற்றும் அவரது 30 பேர் கொண்ட குழுவுடன் நடந்த உரையாடலில் லாஜிஸ்டிக்ஸ், சில்லறை விற்பனை மற்றும் மலிவு விலை வீடுகள் உள்ளிட்ட பலதுறைகளில் முதலீட்டுக் கூட்டாண்மை பற்றி விவாதிக்கப்பட்டது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரத் துறை அமைச்சரும் Investopia-வின் தலைவருமான அப்துல்லா பின் டூக் அல் மரியை வியாழன் அன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து, பல்வேறு துறைகளில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மற்றும் வேலைவாய்ப்பை மையமாக கொண்டு முதலீட்டு கூட்டாண்மை குறித்து விவாதித்தார்.
அப்துல்லா பின் டூக் அல் மரி மற்றும் அவரது 30 பேர் கொண்ட குழுவுடன் நடந்த உரையாடலில் லாஜிஸ்டிக்ஸ், தளவாடங்கள், சில்லறை விற்பனை மற்றும் மலிவு விலை வீடுகள் உள்ளிட்ட பலதுறைகளில் முதலீட்டுக் கூட்டாண்மை பற்றி விவாதிக்கப்பட்டது. மாநில தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்தச் சந்திப்பு குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிடும்போது,
“தலைமைச் செயலகத்தில் யுஏஇ பொருளாதார அமைச்சர் அல் மரியை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் தமிழ்நாட்டின் சிறந்த நண்பரும் நலம் விரும்பியுமாவார். 2022 மார்ச்சில் நான் ஐக்கிய அரபு எமிரேட்சுக்குச் சென்ற போது அவரைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைந்தேன். எங்கள் சந்திப்பின் போது சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில், வேலை உருவாக்கம் கவனம் செலுத்துமாறு சில்லரை வணிகம், மலிவு விலை வீடுகள் போன்ற துறைகளில் முதலீட்டுக் கூட்டாண்மை பற்றி விவாதித்தோம்,” என்று பதிவிட்டார்.
![Stalin UAE](https://images.yourstory.com/cs/18/7be5482008d911e9bb473d9d98ed1e05/StalinUAE-1721986251324.png?fm=png&auto=format&w=800)
முன்னதாக புதன் கிழமை மாலை சென்னையில் நடைபெற்ற “இன்வெஸ்டோபியா குளோபல் டாக்ஸ்” என்ற நிகழ்வில் இன்வெஸ்டோபியா சேர்மனும் யுஏஇ பொருளாதார அமைச்சருமான அப்துல்லா பின் டூக் அல் மரி, தொழில்முனைவு மற்றும் SME-களுக்கான மாநில அமைச்சர் மாண்புமிகு ஆலியா அப்துல்லா அல்மஸ்ரூயி மற்றும் 300க்கும் மேற்பட்ட தலைவர்கள், தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் ஆகியோர் கலந்து கொண்டு ஐக்கிய அரபு எமிரேட்சுடன் புதிய மற்றும் நீடித்த பொருளாதாரத் துறைகளில் இருதரப்புக்கும் இடையேயான பொருளாதார கூட்டுறவை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடினர்.
![Investopia Gloabl](https://images.yourstory.com/cs/18/7be5482008d911e9bb473d9d98ed1e05/InvestopiaGlobal-1721986300143.jpg?fm=png&auto=format&w=800)
இன்வெஸ்டோபியா குளோபல் பிரதிநிதிகளிடம் பேசிய தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா,
"விவசாயம் மற்றும் உணவுப்பாதுகாப்பு துறைகளில் யுஏஇயுடன் ஒத்துழைக்க ஆர்வமாக இருப்பதாகவும் இன்வெஸ்டோபியாவின் முன் முயற்சிகளை முன்னெடுப்பதற்கு பணிக்குழு உருவாக்கப்படும். தமிழ்நாட்டின் பலம் மின்னணுவியல், சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின்சாரம், உற்பத்தி மற்றும் விண்வெளித் தொழில்நுட்பத்தில் உள்ளது. மேலும், வளர்ந்து வரும் ஸ்டார்ட்-அப் தொழில்கள் ஆகிய முன்னெடுப்புகளுக்கு பணிக்குழு அமைப்பதாகவும்," தெரிவித்தார்.