ஜெய்ப்பூர் டூ ஜெனீவா: ரஞ்சித்தின் 'சுற்றுலா காதல்' கதை!
10ம் வகுப்பில் தோல்வி அடைந்தவரின் நம்ப முடியாத வாழ்க்கை!
வாழ்க்கையில் சில கதைகளைக் கேட்கும்போது இப்படியெல்லாம் நடந்திருக்குமா என்று யோசிக்க வைக்கும். அப்படி ஒரு கதைக்குச் சொந்தக்காரர் ஜெய்ப்பூரைச் சேர்ந்த ரஞ்சித் சிங் ராஜ்.
ஜெய்ப்பூரின் தூசி நிறைந்த பாதைகளில் இருந்து ஜெனீவா வாழ்க்கை வரை தனித்துவமான கதை கொண்டது ரஞ்சித் சிங் ராஜ்-ன் பயணம். பின்னடைவு, சுறுசுறுப்பு மற்றும் கடின உழைப்பு என அனைத்தும் ரஞ்சித்தின் வாழ்க்கையில் நிரம்பியிருக்கிறது. ஜெய்ப்பூரை பூர்வீகமாகக் கொண்ட ஒரு வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித். இவரின் குழந்தைப் பருவம் பல இந்தியர்களை போலவே, கடினமான சூழலைக் கொண்டது.
என்றாலும், குடும்பச் சூழ்நிலைகளைத் தாண்டி படித்து நன்றாக வர வேண்டும் என்று பெற்றோர்கள் ரஞ்சித்தை பள்ளிக்கு அனுப்பினர். ஆனால் அவருக்கு பள்ளி செல்வதில் ஆர்வம் இல்லை. விளைவு 10ம் வகுப்பில் தோல்வி அடைந்துவிட்டார். கல்வி கைவிட்ட நிலையில் தனது 16 வயதில் ஒரு ஆட்டோ ரிக்ஷாவை ஓட்டத் தொடங்கினார்.
அடுத்த சில ஆண்டுகளுக்கு இதுவே அவரின் பிரதான தொழிலாக இருந்தது. ஜெய்ப்பூரில் பிரதான வர்க்கமாக இருப்பது சுற்றுலா. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க மற்ற ஆட்டோ டிரைவர்கள் ஆங்கிலம், பிரஞ்சு, ஸ்பானிஷ் மற்றும் பிற வெளிநாட்டு மொழிகளைப் பேசுவதை கவனித்த ரஞ்சித், தானும் ஆங்கிலம் கற்றுகொண்டு சுற்றுலா தொழில் இறங்கியுள்ளார்.
அப்படி ஆரம்பித்தவர், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அழைத்துக்கொண்டு ராஜஸ்தான் முழுவதும் சுற்றிக்காண்பிக்க ஆரம்பித்தார். விளையாட்டாக ஆரம்பித்த இந்தத் தொழில் அவரின் வாழ்க்கையைக் கண்டுபிடிக்க உதவியது. எப்படி என்கிறீர்களா?
சுற்றுலாப் பயணிகளுக்கு டூரிஸ்ட் கைடாக இருந்தபோது தான் முதன்முதலில் தனது மனைவியை சந்தித்திருக்கிறார். ஆம், ரஞ்சித்தின் மனைவி இந்தியாவைச் சுற்றி பார்க்க வந்து, ராஜஸ்தானில் ரஞ்சித்தின் சுற்றுலா பயணியாக வந்தவர்தான் அவரின் மனைவி. ஜெய்ப்பூரை சுற்றிப்பார்க்க வந்த அவளுடைய பயண வழிகாட்டியாக இருந்த ரஞ்சித் பின்னாளில் அவரையே காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார்.
தங்களின் காதல் கதையை விவரிக்கும் ரஞ்சித்,
“நாங்கள் முதலில் சிட்டி பேலஸில் சந்தித்தோம். அவள் தனது தோழி ஒருவருடன் இந்தியா முழுவதும் பயணம் செய்ய வந்திருந்தார். எங்கள் சந்திப்பில் நெருங்கிப் பழகினோம், நிறைய பேசினோம், ஒருவருக்கொருவர் விரும்ப ஆரம்பித்தோம். ஆனால் விரைவாகவே அவள் பிரான்ஸுக்குத் திரும்பினால். என்றாலும், நாங்கள் ஸ்கைப் வழியாக இணைந்திருந்தோம். விரைவாகவே நாங்கள் காதலிக்கிறோம் என்பதை நாங்கள் உணர்ந்தோம். அவளை சந்திக்க பிரான்ஸ் செல்ல பல முயற்சிகளை மேற்கொண்டேன். ஆனால், எனது விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
பல முறை விசா நிராகரிக்கப்பட்ட பிறகும், எங்கள் நீண்ட தூர உறவை எவ்வாறு தக்க வைத்துக் கொள்ள முடியும் என்றும் நம்பினோம். என் மனைவி அடுத்த முறை இந்தியா வந்தபோது விசா நிராகரிப்பை சரிசெய்யும் முயற்சியாக, நாங்கள் இருவரும் பிரெஞ்சு தூதரகத்தின் முன் அமர்ந்து, எதிர்ப்பு தெரிவித்து, இந்தியாவுக்கான பிரெஞ்சு தூதரை சந்திக்கக் கோரினோம்.
போராட்டத்தின் விளைவாக தூதரக அதிகாரி எங்களைச் சந்தித்தார். இறுதியாக எனக்கு பிரான்சுக்குச் செல்ல மூன்று மாத சுற்றுலா விசா வழங்கினர். அதன்பின் பல முறை பிரான்சுக்கு பயணப்பட்டேன். 2014 ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்ட எங்களுக்கு இப்போது ஒரு குழந்தை இருக்கிறது.
”பின்னர் பிரான்சில் நிரந்தரமாக தங்க விண்ணப்பித்தேன். நிரந்தரமாக தங்க பிரெஞ்சு மொழியை கற்றுக்கொள்ளக் கூறினர். இதற்காக பிரெஞ்சு வகுப்புகளில் சேர்ந்து பிரெஞ்சு மொழியை கற்றுக்கொண்டேன்," என தனது கதையை கூறும் ரஞ்சித் இப்போது பிரான்ஸ்வாசி.
இப்போது ஜெனீவாவில் வசிக்கிறார். அங்கு ஒரு உணவகத்தில் வேலை செய்து வரும் ரஞ்சித் சமையல் தொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றை வைத்துள்ளார். மேலும் ஜெனீவாவில் சொந்தமாக உணவகம் ஒன்றை திறக்க வேண்டும் என்ற கனவுடன் தற்போது கடுமையாக உழைத்து வருகிறார்.
தகவல் - indiatimes | தமிழில்: மலையரசு