‘அடுத்த 5 ஆண்டுகளில் 83 மில்லியன் வேலை இழப்பு; 69 மில்லியன் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்’ - ஆய்வில் தகவல்!
வரலாறு காணாத பெருந்தொற்று மற்றும் தானியங்கிமயம் கடந்த பத்தாண்டுகளில் ஊழியர்களுக்கு இரட்டை பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், அடுத்த 5 ஆண்டுகளில் உலக அளவில் வேலை வாய்ப்புகளின் தன்மையில் பெரும் மாற்றம் ஏற்பட இருப்பதை புதிய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
அடுத்த ஐந்தாண்டுகளில், உலகளவில் 25 சதவீத வேலைகள் மாறும் என்றும், 83 மில்லியன் வேலை இழப்பு ஏற்பட்டு, 69 மில்லியன் புதிய வேலைவாய்ப்புகள் உண்டாகும் என உலக பொருளாதார அமைப்பின் (WEF) வேலைவாய்ப்பு எதிர்காலம் தொடர்பான அறிக்கை தெரிவிக்கிறது.
பசுமை மாற்றம் மற்றும் சப்ளை செயின் உள்ளூர்மயமாக்கம், 23-27 காலத்தில் வேலைவாய்ப்பு சந்தையில் தாக்கம் செலுத்தினாலும், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் அணுகல் தாக்கத்தினால், நிகர வேலைவாய்ப்புகள் குறையும், என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது. 803 நிறுவனங்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த அறிக்கை அமைந்துள்ளது.
பரவலான புரிதலுக்கு மாறாக, உடனடி வேலைவாய்ப்பு இழப்பு என்பது தொழில்நுட்பம் அல்லாத காரணங்களினால் ஏற்படும் என்பதை இது உணர்த்துகிறது.
வளர்ச்சி தேக்கம் உள்ளிட்ட பொருளாதாரக் காரணிகள் மற்றும் நிறுவனங்கள் தேவைக்கேற்ப திறன் வளர்த்துக் கொள்வதில் வேகம் இல்லாதது ஆகிய அம்சங்கள் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை பாதிக்கும் என்று கருதப்படுகிறது.
வேலைவாய்ப்பு வளர்ச்சி குறைந்திருக்கும் அதே நேரத்தில் நிறுவனங்கள், ஊழியர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும் தெரிவிக்கின்றன.
நீடித்த வேலைவாய்ப்பிற்காக, 44 சதவீத தொழிலாளர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் எனும் நிலையில், மறு திறனாக்கத்தின் முக்கியத்துவத்தையும் இந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது.
துறைகளை பொருத்தவரை, டிஜிட்டல் காமர்ஸ் துறை அதிக வேலைவாய்ப்பை உருவாக்குவதில் முன்னிலை வகிக்கும். இரண்டு மில்லியன் புதிய வேலைவாய்ப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன. கல்வி மற்றும் விவசாயம் ஆகியத் துறையிலும் வேலைவாய்ப்பு முன்னேற்றம் இருக்கும்.
உலகலாவிய போக்கிற்கு ஏற்ப, இந்தியவில் 22 சதவீத வேலைவாய்ப்புகள் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய நிறுவனங்களைப் பொருத்தவரை, 61 சதவீத நிறுவனங்கள் இ.எஸ்.ஜி தர நிர்ணயம் போன்ற அம்சங்கள் வேலைவாய்ப்பு வளர்ச்சியை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கின்றன. புதிய தொழில்நுட்பங்கள் ஏற்ப மற்றும் டிஜிட்டல் அணுகல் அடுத்த இடங்களில் வருகின்றன.
செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், நீடித்த வளர்ச்சி வல்லுனர்கள், வர்த்தக அறிவு அறிஞர்கள், தகவல் பாதுகாப்பு வல்லுனர்கள் ஆகிய பிரிவுகளில் அதிக வேலைவாய்ப்பு தேவை என எதிர்பார்கப்படும் நிலையில், அலசல் மற்றும் படைப்பூக்க சிந்தனையில் உள்ள திறன் இடைவெளி களையப்பட வேண்டும் என நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.
இந்தியாவிலும், நிறுவனங்களில் முன்னணி பொறுப்புகள் ஏஐ மற்றும் இயந்திர கற்றல் வல்லுனர்களால் நிரப்பப்படும் என அறிக்கை தெரிவிக்கிறது.
Edited by Induja Raghunathan