கமலா ஹாரீஸ் தெரியும்: அவரது தாத்தா கோபாலன் பற்றி தெரியுமா?
தாத்தாவுடனான நினைவுகளை அசைபோடும் கமலா ஹாரீஸ்!
கமலா ஹாரீஸின் இத்தகைய வளர்ச்சிக்கு அவரது தாத்தா முக்கியக் காரணம் என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும்!
ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் மற்றும் அமெரிக்காவின் துணைத் அதிபரும் தற்போதைய கலிபோர்னியா செனட்டருமான கமலா ஹாரிஸ், தனது முதல் பிரசாரத்தில் இந்தயாய மற்றும் ஜமைக்கா பாரம்பரியத்தைப் பற்றி மிகவும் நேர்மையாகப் பேசினார்.
”என் தாயும், தந்தையும் உலகின் எதிர் எதிர் பக்கங்களிலிருந்து அமெரிக்காவுக்குள் வந்தவர்கள். உலகத்தரம் வாய்ந்த கல்வியைத் தேடி ஒருவர் இந்தியாவிலிருந்தும் மற்றொருவர் ஜமைக்காவிலிருந்தும் இங்கு வந்தார்கள். அவர்கள் இருவரும் ஒன்றிணைந்து 1960ம் ஆண்டு சிவில் உரிமை இயக்கத்தில் இணைத்துக்கொண்டனர். ஓக்லாண்ட் [கலிபோர்னியா] வீதிகளில் அணிவகுத்துச் செல்லும் மாணவர்களாக அவர்கள் சந்தித்ததும் அப்படித்தான். அன்றைக்கு போல இன்றைக்கும் நீதிக்காக போராட வேண்டிய நிலை நீடித்துக்கொண்டுதான் இருக்கிறது,” என்று பேசினார் அவர்.
இருப்பினும், அவரது பேச்சில் விடுபட்டு போன ஒரே நபர் அவரது தாய்வழி தாத்தா. இந்திய அரசு ஊழியர் பி.வி.கோபாலன் என்பவர் தான் கமலா ஹாரீஸின் தாத்தா. கமலா ஹாரிஸ் ஒருமுறை, "என் உலகில் எனக்கு பிடித்த நபர்களில் ஒருவர்" என்று தனது தாத்தாவை குறிப்பிட்டிருந்தார்.
1998ல் அவர் இறக்கும் வரை, கமலாவின் வாழ்க்கையில் பொது சேவை மற்றும் மனித உரிமைகள் குறித்த மதிப்புகளை வழங்கிய வழிகாட்டியாக இருந்தார் அவரது தாத்தா கோபாலன்.
2009 ஆம் ஆண்டு பத்திரிகையாளர் அஜீஸ் ஹனிஃபாவுக்கு அளித்த பேட்டியில், தாத்தா கோபாலன் தனது வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றி கமலா ஹாரீஸ் பேசினார்.
"என் வாழ்க்கையில் மிகவும் செல்வாக்கு செலுத்தியவர்களில் ஒருவர், என் அம்மாவைத் தவிர, என் தாத்தா பி.வி.கோபாலன். இந்தியாவில் உயர்ந்த பதவியில் இருந்தார். அது இந்த நாட்டில் மாநில செயலாளர் பதவியைப் போன்றது. அவர் ஓய்வு பெற்ற பின்பு, மெட்ராஸில் உள்ள பெசன்ட் நகர் கடற்கரையில் அவருடன் நடந்து சென்றது என்னால் மறக்க முடியாத பிடித்த நினைவுகள். அவர் ஓய்வுபெற்ற அரசாங்க அதிகாரிகளான தனது நண்பர்களுடன் தினமும் காலையில் கடற்கரையில் நடந்து செல்வார், அவர்கள் அரசியல் , ஊழல், நீதி, போராட்டம் குறித்து பேசுவார்கள்.”
அவர்கள் சிரிப்பார்கள், குரல் கொடுப்பார்கள், வாதிடுவார்கள், அந்த உரையாடல்கள் வலுவாக இருக்கும். அந்த உரையாடல்கள் கற்றல் அடிப்படையில் நேர்மையாக இருப்பதற்கும், ஒருமைப்பாட்டைக் கொண்டிருப்பதற்கும் எனக்குள் ஒரு வலுவான தாக்கத்தை ஏற்படுத்தின, என்று தனது தாத்தாவுடனான நினைவுகளை அப்போது பகிர்ந்துகொண்டார் கமலா ஹாரீஸ்.
கமலா ஹாரீஸ் தாத்தா கோபாலன் யார் எனப் பார்ப்போம்!
தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பைங்கநாடு என்ற கிராமத்தில் 1911ல் பிறந்தவர் கோபாலன். ராஜம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. 1930’களில் அரசாங்கப் பணியில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
இந்திய சிவில் சர்வீஸில் பணியாற்றியதால் புது தில்லி, கொல்கத்தா மற்றும் மும்பை போன்ற முக்கிய நகரங்களுக்கு மாற்றபட்டார். போக்குவரத்து அமைச்சகத்திலும், தொழிலாளர் நலத்துறை செயலாளர் என இந்திய அரசின் பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார்.
ஊழல் எதிர்ப்பு நிலைப்பாடு: ஊழல், லஞ்சம் ஆகியவற்றை அறவே வெறுத்தார். அவர் மும்பையில் மூத்த வணிக அதிகாரியாக நியமிக்கப்பட்டபோது, தனது வீட்டுக்கு பார்ஸலுடன் வரும் அந்நியர்களை அனுமதிக்க மாட்டார். பார்வையாளர்கள் குழந்தைகளுக்கு வழங்க இனிப்புகள் அல்லது பழங்களைக் கொண்டுவந்தால் மட்டுமே அனுமதி.
மற்றபடி, வேறு எந்த வகையான பார்சலையும் வீட்டுக்குள் கொண்டுவர அந்நியர்களை அவர் அனுமதித்தில்லை. அந்த அளவுக்கு கண்டிப்புடனும் நேர்மையுடனும் இருந்தார்.
முற்போக்கான பார்வை: 1958 ஆம் ஆண்டில், கோபாலனின் மகள் ஷியாமலா (கமலாவின் தாய்), அப்போது 19 வயதுப் பெண்ணாக இருந்தார். அமெரிக்காவில் மேற்படிப்பிற்கு விண்ணப்பித்திருந்தார். பெண்களை வேலைக்கோ, படிக்கவோ வெளியில் அனுப்ப பெற்றோர்கள் எதிர்த்த காலக்கட்டம் அது. அப்படியிருக்கும்போது, கோபாலன் தனது ஓய்வூதிய சேமிப்பைக்கொண்டு மகள் ஷியாமலாவை அமெரிக்கா சென்று படிக்க அனுப்பி வைத்தார்.
ஜமைக்காவின் கல்வியாளரான டொனால்ட் ஹாரிஸை ஷியாமாலா திருமணம் செய்துகொள்வதில் கோபாலனும் ராஜமும் ஆரம்பத்தில் அதிருப்தி அடைந்திருந்தாலும், விரைவில் அவர்கள் இருவரையும் ஏற்றுக் கொண்டனர்.
கடந்த காலங்களில், செனட்டர் கமலா ஹாரிஸ் தனது இந்திய வம்சாவளியைப் பற்றியும், அது அவரது வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றியும் பலமுறை பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு: மலையரசு