ஓலா, உபெர் போல் கேரள அரசு தொடங்கியுள்ள ‘சவாரி’ - இந்தியாவில் முதல் முறை!
தனியார் ஆன்லைன் கால் டாக்ஸி புக்கிங் ஆப்களுக்கு போட்டியாக கேரளா அரசு முதன் முறையாக ‘கேரளா சவாரி’ என்ற ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
தனியார் ஆன்லைன் கால் டாக்சி மற்றும் ஆட்டோ புக்கிங் ஆப்களுக்கு போட்டியாக கேரளா அரசு முதன் முறையாக ‘கேரளா சவாரி’ என்ற ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஓலா, உபர்-க்கு போட்டியாக சவாரி
ஆன்லைன் டாக்ஸி சேவைத் துறையில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஓலா, உபர் என கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு போட்டியாக கேரள அரசு களமிறங்கியுள்ளது. இதற்காக இந்தியாவிலேயே முதன் முறையாக அரசுக்கு சொந்தமான ஆன்லைன் ஆட்டோ டாக்ஸி சேவைக்காக ‘கேரள சவாரி’ என்ற சேவையை கேரள முதல்வர் பினராயி விஜயன் தொடங்கிவைத்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில், மலையாள மாதத்தின் தொடக்க மாதமான சிங்கம் மாதத்தில் முதல் நாள் இச்சேவையை கேரள அரசு தொடங்கியுள்ளது.
'பயணிகளுக்கு நியாயமான மற்றும் கண்ணியமான சேவை மற்றும் ஆட்டோ ரிக்ஷா மற்றும் டாக்ஸி தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம்' இந்த இரண்டையும் அளிக்க உறுதியேற்கும் வகையில் ஆன்லைன் தளத்தை முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார்.
தொழிலாளர் துறையின் தலைமையிலான மோட்டார் தொழிலாளர் நல வாரியத்தின் முயற்சியால், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்டணத்தில் பொதுமக்களுக்கு கேரள சவாரி பாதுகாப்பான பயணத்தை வழங்க உள்ளது.
கேரள தொழிலாளர் துறை அமைச்சர் வி.சிவன்குட்டி கூறுகையில்,
''தாராளமயம்மாக்கல் கொள்கைகள் நமது தொழில் துறையையும், தொழிலாளர்களையும் பாதித்து வரும் இந்த சமயத்தில், டாக்ஸி தொழிலாளர்களின் உழைப்புச் சுரண்டலை தடுக்கும் விதமாகவும், அவர்களுக்கான வருமானத்தை உறுதிபடுத்தவும் தொழிலாளர் துறையால் செயல்படுத்தப்பட்ட திட்டமே கேரள சவாரி,” எனத் தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாக திருவனந்தபுரம் நகராட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம் விரைவில் படிப்படியாக மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது.
கட்டணத்தில் மாற்றமில்லை:
பீக் ஹவர்ஸில் பிற ஆன்லைன் செயலிகள் சவாரிக் கட்டணங்களை உயர்த்துவது போல், கேரளா சவாரியில் கட்டணங்களில் எந்த ஏற்ற இறக்கமும் இருக்காது. ஆன்லைன் டாக்சி நிறுவனங்கள் பீக் ஹவர்ஸில் ஒன்றரை மடங்கு வரை கட்டணத்தை உயர்த்துவதை வழக்கமாக வைத்துள்ளன. அதுமட்டுமின்றி, தனியார் டாக்சி சேவை போல் அல்லாமல், கேரளா சவாரி ஓட்டுநர்களிடமிருந்து 8 சதவீதம் மட்டுமே கமிஷன் பெறுகிறது.
மற்ற ஆன்லைன் டாக்சிகளுக்கு 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை சேவைக் கட்டணம் வசூலிக்கப்படுவதால் தான், வாடிக்கையாளர்களிடம் இருந்து அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சேவைக் கட்டணமாக வசூலிக்கப்படும் தொகை, திட்டத்தைச் செயல்படுத்தவும், பயணிகள் மற்றும் ஓட்டுநர்களுக்கு ஊக்குவிப்புச் சலுகைகளை வழங்கவும் பயன்படுத்தப்படும் என கேரள அரசு தெரிவித்துள்ளது.
பேனிக் பட்டன் (Panic Button):
’கேரளா சவாரி’ - பெண்கள், குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் நம்பகமான ஆன்லைன் சேவையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. எனவே இத்திட்டத்தில் சேரும் ஓட்டுனர்களுக்கு போலீஸ் அனுமதி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதோடு, முறையான பயிற்சியும் வழங்கப்பட உள்ளது.
மேலும், பயணிகள் மற்றும் ஓட்டுநர்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை நிவர்த்தி செய்ய வகையில், ஆன்லைன் செயலியில் பேனிக் பட்டன் அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கார் விபத்து ஏற்பட்டால் அல்லது ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் இந்த பொத்தானை அழுத்தலாம். இது பயணி மற்றும் ஓட்டுநருக்கு தெரியாத வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதாவது, ஓட்டுநர் பேனிக் பட்டனை அழுத்தினால் பயணிக்கு எவ்வித தகவலும் தெரியாது, இதேபோல், பயணி பேனிக் பட்டனை அழுத்தினால் ஓட்டுநருக்கு தெரியாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயணி அல்லது ஓட்டுநர் பேனிக் பட்டனை அழுத்தினால் அந்த அலர்ட் ஆனது காவல்துறை, தீயணைப்புப் படை, மோட்டார் வாகனத் துறை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றிற்கு செல்லும் படி தேர்ந்தெடுக்கலாம். ஆபத்து அளவு அதிகமாக இருப்பின் எந்த ஆப்ஷனையும் தேர்வு செய்யாமல் பட்டனை மட்டும் அழுத்தினால், நேரடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இணைக்கப்படும்.
24 மணி நேர கால் சென்டர்:
ஓட்டுநர் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்யும் வண்ணம், கேரளா சவாரி திட்டத்தில் இணையும் டாக்சிகளில் மானிய விலையில் ஜிபிஎஸ் கருவிகளை பொருத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 24 மணி நேர கால்சென்டர் அமைக்கப்பட்டுள்ளது.
மோட்டார் தொழிலாளர் நல வாரிய மாவட்ட அலுவலகத்தில் அதிநவீன கால் சென்டர் செயல்பட்டு வருகிறது. சேவை தொடர்பான அனைத்து சிக்கல்களையும் உடனடியாக தீர்க்கும் வகையில் கால் சென்டர் செயல்பட உள்ளது.
தலைநகரத்தில் இருந்து சேவை தொடக்கம்:
புதன்கிழமை நள்ளிரவு முதல் பிளேஸ்டோரில் கேரளா சவாரி செயலி பொதுமக்களுக்கு கிடைத்து வருகிறது. முதற்கட்டமாக கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சியில் 321 ஆட்டோரிக்ஷாக்கள், 228 கார்கள் உட்பட 541 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இத்திட்டம் முதலில் திருவனந்தபுரத்திலும், அடுத்த ஒரு மாதத்தில் கொல்லம், கொச்சி, திருச்சூர், கோழிக்கோடு மற்றும் கண்ணூர் மாநகராட்சி பகுதிகள் வரையிலும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
ஓட்டுநர்களுக்கு சிறப்பு சலுகை:
கேரளா சவாரி திட்டத்தின் ஒரு பகுதியாக பெட்ரோல், டீசல் விலை, வாகன காப்பீடு, வாகனத்தின் டயர் மற்றும் பேட்டரி ஆகியவற்றில் தள்ளுபடி வழங்குவது பரிசீலனையில் உள்ளது. பயணிகள் மற்றும் ஓட்டுநர்களுக்கான காப்பீடு மற்றும் விபத்து காப்பீடு ஆகியவை பரிசீலனையில் உள்ளன. வாகனங்களை விளம்பரப்படுத்திற்கு பயன்படுத்தி அதன் மூலமாக அதிக வருவாய் ஈட்டும் திட்டமும் குறித்து கேரள அரசு ஆலோசித்து வருகிறது, இதன் மூலமாக கிடைக்கும் விளம்பர வருவாயில் 60 சதவீதம் ஓட்டுனர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
தொகுப்பு - கனிமொழி