தமிழகத்தில் மே 10 முதல் 24 வரை ஊரடங்கு: எவை செயல்பட அனுமதி? முழு விவரம்!
தமிழக அரசு அறிவிப்பு என்னென்ன?!
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்துவருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு தினசரி பாதிப்பு 20,000 என்று இருந்த நிலையில் நேற்று தினசரி பாதிப்பு 26,000-ஐ நெருங்கியது. இதையடுத்து கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மே 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை, அதாவது நாளை மறுநாள் முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் எதெற்கெல்லாம் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது என்பதை விரிவாக பார்ப்போம்!
எதெற்கெல்லாம் அனுமதி!
* ரயில் மற்றும் விமான நிலையங்களுக்கு பயணிகள் சென்று வர, பயணச் சீட்டுடன் அனுமதி
* தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ள குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12.00 மணி வரை இயங்க அனுமதி
* e-commerce மூலம் மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விநியோகம் செய்ய நண்பகல் 12.00 மணி வரை அனுமதி
* முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்க தடை.
* அனைத்து உணவகங்களிலும் பார்சல் மூலம் சேவை வழங்க அனுமதி
* தேநீர் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட அனுமதி
* அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம், தனியார் விரைவுத் தபால் சேவை, மருத்துவமனைகள், மருத்துவப் பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள் செயல்பட அனுமதி.
* சரக்கு வாகனங்கள் போக்குவரத்து, விவசாயிகளின் விளை பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள், ஆக்சிஜன் வாயு எடுத்துச் செல்லும் வாகனங்கள், எரிபொருளை எடுத்துச் செல்லும் வாகனங்கள் ஊரடங்கின் போது இயங்கலாம்.
* வேளாண் உற்பத்திக்கு தேவையான உரக் கடைகள், மாட்டுத்தீவன கடைகள் நண்பகல் 12.00 மணி வரை இயங்க அனுமதி
* திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, நேர்முகத் தேர்வு / வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கும், மருத்துவமனை செல்வதற்கும் உரிய ஆவணங்களுடன் சென்றால் அனுமதிக்கப்படுவார்கள்.
* உணவகங்கள் காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் பார்சல் வழங்க அனுமதி.
* Swiggy, Zomato நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் உணவுகள் விநியோகம் செய்யலாம்
* அம்மா உணவகங்கள் தொடர்ந்து இயக்கப்படும்.
* காய்கறி மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் 12 மணி வரை செயல்பட அனுமதி.
* ரேஷன் கடைகள் நண்பகல் 12.00 மணி வரை செயல்பட அனுமதி.
* கட்டிடப் பணிகளுக்கு அனுமதி.
* ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர் தொடர்ந்து பணியாற்ற அனுமதி
* பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதி.
* வங்கிகள், ATM மையங்கள், வங்கி சார்ந்த போக்குவரத்து போன்றவை 50% பணியாளர்களுடன் இயங்க அனுமதி.
முழு ஊரடங்கு அமல்படுத்த இருப்பதால் பொதுமக்களும், நிறுவனங்களும் தமக்குத் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ளும் வகையில் இன்றும் நாளையும் அனைத்து கடைகளும் திறந்திருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.