தமிழகத்தில் மே10 முதல் மீண்டும் ஊரடங்கு: எதெற்கெல்லாம் தடை?
இரண்டு நாட்களுக்கு முன்பு தினசரி பாதிப்பு 20,000 என்று இருந்த நிலையில் நேற்று தினசரி பாதிப்பு 26,000-ஐ நெருங்கியது. இதையடுத்து கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மே 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்துவருவதால் இந்த அறிவிப்பு வந்துள்ளது. அதன்படி, இன்று (08/05/21) மற்றும் (09/05/21) ஆகிய இருதினங்கள் அனைத்தும் ஊரடங்கு இன்றி செயல்படும் என்றும் மே 10 அதாவது திங்கள் முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது.
இரண்டு நாட்களுக்கு முன்பு தினசரி பாதிப்பு 20,000 என்று இருந்த நிலையில் நேற்று தினசரி பாதிப்பு 26,000-ஐ நெருங்கியது. இதையடுத்து கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மே 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மே 10 முதல் 24 ஆம் தேதி வரை, மாவட்டங்களுக்கு இடையே தனியார் பேருந்து போக்குவரத்து இயங்கத் தடை, மற்றும் வாடகை டாக்ஸி ஆட்டோக்களும் இயங்க தடை, விமானம், ரயிலில் வெளிநாடு – வெளி மாநிலங்களிலிருந்து வரும் பயணிகளுக்கு இ-பாஸ் நடைமுறை போன்ற பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.
கட்டுப்பாடுகளின் முழு விவரம்!
எதெற்கெல்லாம் தடை?
* மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, மற்ற சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை தொடரும்.
* வெளிநாடுகள் மற்றும் இதர மாநிலங்களிலிருந்து வருபவர்களை கண்காணிக்க இ-பாஸ் முறை
* ரயில் மற்றும் விமான நிலையங்களுக்கு பயணிகள் சென்று வர, பயணச் சீட்டுடன் அனுமதி
* பெரிய கடைகள் (Big format Shops), வணிக வளாகங்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை தொடரும்.
* இதேபோல், தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ள குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12.00 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் இந்தக் கடைகள் ஒரே நேரத்தில் 50% வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
* e-commerce மூலம் மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விநியோகம் செய்ய நண்பகல் 12.00 மணி வரை அனுமதி
* மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை.
* முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்க தடை.
* அனைத்து உணவகங்களிலும் பார்சல் மூலம் சேவை வழங்க அனுமதி
* தேநீர் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட அனுமதி
* தங்கும் விடுதிகள் செயல்பட அனுமதி கிடையாது. அதேநேரம், வணிக காரணங்களுக்காக தங்கும் வாடிக்கையாளர்களுக்காகவும், மருத்துவம் சார்ந்த பணிகளுக்கு மட்டும் தங்கும் விடுதிகள் செயல்படலாம்.
* ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது போல் உள் அரங்கங்கள் மற்றும் திறந்த வெளியில், சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்களுக்கு தடை
* மேலும் இறப்பு சார்ந்த நிகழ்வுகளில், இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் அனுமதி கிடையாது.
* தமிழகம் முழுவதும் அழகு நிலையங்கள், முடிதிருத்தும் சலூன் கடைகள் இயங்க தடை.
* திரையரங்குகள், உடற்பயிற்சி, யோகா பயிற்சி நிலையங்கள், கேளிக்கை விடுதிகள், மது பார்கள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள் இயங்க அனுமதி கிடையாது.
* கோயம்பேடு வணிக வளாகத்தில் செயல்படும் சில்லரை வியாபார காய்கனி அங்காடிகள் செயல்பட ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது.
* மாவட்டங்களில் உள்ள மொத்த வியாபார காய்கனி வளாகங்களில் சில்லரை வியாபார கடைகளுக்கும் விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது.
* அரசு அலுவலகங்களை பொறுத்தவரை அத்தியாவசியத் துறைகளான, தலைமைச் செயலகம், மருத்துவத்துறை, வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மை, காவல் துறை, ஊர்க்காவல் படை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைத்துறை, மாவட்ட நிருவாகம், மாவட்ட தொழில் மையங்கள், மின்சாரம், குடிநீர், உள்ளாட்சி துறைகள், வனத்துறை அலுவலகங்கள், கருவூலங்கள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை போன்ற அலுவலகங்கள் தவிர மற்ற அலுவலகங்கள் எதுவும் இயங்காது.
* அதேநேரம், அனைத்து தனியார் அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பச் சேவை நிறுவனங்கள் இயங்க தடை.
* விதிவிலக்கு அளிக்கப்பட்ட தொழிற்சாலைகள் தவிர பிற தொழிற்சாலைகள் இயங்க தடை. ஆனால் அந்த நிறுவனங்கள் வீட்டில் இருந்தபடி பணியாற்றும் முறையை பின்பற்றலாம்.
* அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்கள் வழிபாட்டிற்கு அனுமதி கிடையாது.
.* குடமுழுக்கு மற்றும் திருவிழா நடத்த அனுமதி இல்லை.
* அனைத்து சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல தடை.
* அனைத்து கடற்கரை பகுதிகளிலும், பொதுமக்களுக்கு தடை.
* பள்ளிகள், கல்லூரிகள் இயங்க தடை.
* மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கிடையேயான தனியார், அரசுப் பேருந்து போக்குவரத்து மற்றும் வாடகை டாக்ஸி, ஆட்டோக்கள் இயங்க தடை.
* ஆனால் திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, நேர்முகத் தேர்வு / வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கும், மருத்துவமனை செல்வதற்கும் உரிய ஆவணங்களுடன் சென்றால் அனுமதிக்கப்படுவார்கள்.