மக்களவைத் தேர்தல் 2024: தமிழ்நாட்டில் நாளை வாக்குப்பதிவு - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் இதோ!
நாளை வாக்களிக்கச் செல்லுமுன் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியத் தகவல்கள், வாக்குச்சாவடியில் என்ன செய்ய வேண்டும்? தவறு நேர்ந்தால் எப்படி புகார் அளிக்க வேண்டும் என விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
ஏழு கட்டமாக நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில், முதல்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே நாடு, தேர்தல் திருவிழாவை கொண்டாட ஆரம்பித்து விட்டது.
வெயிலை விட அதிதீவிரமாக, அனல் பறக்க நடந்த தேர்தல் பிரச்சாரங்கள் மேற்கூறிய 21 மாநிலங்களில் நேற்று மாலையுடன் நிறைவடைந்து விட்டது. இனி மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டியதுதான் பாக்கி.
இந்நிலையில், நாளை வாக்குச்சாவடிக்குச் செல்லும் முன், நாம் எந்த பூத்தில் வாக்களிக்க வேண்டும், கையில் என்னென்ன ஆதாரங்கள் எடுத்துச் செல்ல வேண்டும், இவை எல்லாவற்றிற்கு முன்பாக வாக்காளர் பெயர் பட்டியலில் நமது பெயர் உள்ளதா? போன்றவற்றை எப்படித் தெரிந்து கொள்ளலாம் என இங்கே பார்க்கலாம்..
வாக்காளர்களின் எண்ணிக்கை
இந்தமுறை, தமிழகத்தில் 6 கோடியே 23 லட்சத்து 33ஆயிரத்து 925 பேர் வாக்களிக்க தகுதியானவர்கள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இவர்களில் ஆண்களின் எண்ணிக்கை 3.04 கோடி. பெண்களின் எண்ணிக்கை 3.15 கோடி. தமிழ்நாட்டில் ஆண்களைவிட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம். மூன்றாம் பாலினத்தவரின் எண்ணிக்கை 8294, நூறு வயதை எட்டியவர்களின் எண்ணிக்கை 8,765. முதல் முறையாக வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை 9.18 லட்சம் பேர்.
காலை 8 - மாலை 5 மணி வரை
வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள், நாளை காலை முதல் தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்கைப் பதிவு செய்யலாம். நாளை காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க இருக்கிறது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு செய்ய இயலும்.
வாக்கு இயந்திரத்தில் ஏதாவது கோளாறு இருந்தாலோ அல்லது வாக்காளர்கள் 5 மணியையும் தாண்டி வாக்களிக்கும் நிலையில், வரிசையில் நின்று கொண்டிருந்தாலோ, வாக்களிக்கும் நேரம் சற்று நீட்டிக்கப்படும். அது சூழ்நிலையைப் பொறுத்து தேர்தல் அலுவலர்களால் முடிவு செய்யப்படும்.
ஓட்டர் ஹெல்ப்லைன் செயலி
நாம் எந்த பூத்தில் வாக்களிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள இந்தமுறை ஓட்டர் ஹெல்ப்லைன் (voter helpline app) செயலியை அறிமுகம் செய்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.
இந்த ஆப்-பை தங்களது செல் போனில் பதிவிறக்கம் செய்து, வாக்காளர் பெயர் மற்றும் எப்பிக் எண் (வாக்காளர் அட்டையில் உள்ள எண்) போன்ற தகவல்களைப் பதிவு செய்தால், எந்த வாக்குச்சாவடியில் நாம் வாக்களிக்க வேண்டும். எந்த பள்ளியில் வாக்குச்சாவடி மையம் உள்ளது என அனைத்து தகவலும் தெரிந்து கொள்ள முடியும்.
13 அடையாள ஆவணங்கள்
வாக்காளர் அடையான அட்டை இருந்தால் மட்டும் போதாது. வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க முடியும். அதன்படி, தேர்தல் ஆணையம் வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் இருக்கும் வாக்காளர்கள், தேர்தல் நாளில் வாக்காளர் அடையாள அட்டையைக் காண்பித்தே வாக்களிப்பார்கள்.
அதேநேரம், வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் வேறு 12 ஆவணங்களைத் தேர்தல் கண்காணிப்பாளரிடம் காட்டியும் வாக்களிக்கலாம்.
வாக்காளர் அடையாள அட்டையுடன் சேர்த்து அந்த 13 ஆவணங்களாவன:
1. புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை
2. ஆதார் அட்டை
3. பாஸ்போர்ட்
4. ஓட்டுநர் உரிமம்
5. மத்திய-மாநில அரசுகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் வழங்கியுள்ள அடையாள அட்டைகள்
6. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட பணி அட்டை
7. வங்கி, அஞ்சலகங்களால் புகைப்படத்துடன் வழங்கப்பட்ட கணக்கு புத்தகங்கள்
8. வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை
9. ஓய்வூதிய ஆவணம்
10. தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு
11. மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சகத்தின் மூலம் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை
12. நாடாளுமன்ற சட்டமன்ற பேரவை, சட்டமன்ற மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அலுவலக அடையாள அட்டைகள்
13. இயலாமைக்கான தனித்துவ அட்டை
தேர்தல் ஆணையத்தின் இணையதளம்
வாக்காளர்கள் தாங்கள் வாக்களிக்க வேண்டிய வாக்குச்சாவடியை, ஆஃப் மட்டுமின்றி மேலும் சில வழிகளிலும் அறிந்து கொள்ள இயலும். அவற்றில் ஒன்றுதான் தேர்தல் ஆணையத்தின் இணையதளம். voters.eci.gov.in என்ற அந்தத் தளத்தில் நீங்கள் எந்த வாக்குச்சாவடியில் வாக்களிக்க வேண்டும் என்ற விபரம் இருக்கும்.
தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் ( https://electoralsearch.eci.gov.in/ )சென்று, அங்கு உங்கள் வாக்காளர் எண்ணைப் பதிவிட்டு இந்த வாக்குச்சாவடித் தகவலை தெரிந்து கொள்ள இயலும்.
எஸ் எம் எஸ்
இதுதவிர, 1950 என்ற எண்ணுக்குக் கால் செய்தோ அல்லது EPIC என்று டைப் செய்து, ஸ்பேஸ் விட்டு வாக்காளர் அடையாள எண்ணைப் பதிவிட்டோ, உங்கள் வாக்குச்சாவடி விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். 1950 எண்ணுக்கு மெசேஜ் அனுப்பும்போது, நமக்குத் தேவையான தகவல்களும் மெசேஜிலேயே வரும்.
வேட்பாளரின் மொத்த விபரங்கள்
கட்சியைப் பார்த்து வாக்களிக்காமல், தங்கள் தொகுதியில் நிற்கும் வேட்பாளர்களின் விபரங்களைத் தெரிந்து கொண்டு நீங்கள் வாக்களிக்க விரும்பினாலும், அதற்கும் தேவையான வசதிகளைச் செய்து தந்திருக்கிறது தேர்தல் ஆணையம்.
தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இதற்கென உள்ள பக்கத்திற்கு (https://affidavit.eci.gov.in/CandidateCustomFilter) சென்று, எந்த மாநிலத்தில் எந்தத் தொகுதி எனத் தேர்வுசெய்தால், அந்தத் தொகுதியில் போட்டியிட அனுமதிக்கப்பட்ட வேட்பாளர்கள், அவர்களது சொத்து விவரங்கள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம்.
சம்பளத்துடன் கூடிய விடுமுறை
தேர்தல் தினத்தன்று அனைவருக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டுமென இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருக்கிறது. இதனை மீறும் நிறுவனங்கள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் ஊழியர்கள் புகார் அளிக்க முடியும். புகார் உறுதிசெய்யப்பட்டால் அதிகபட்சமாக 500 ரூபாய் அபராதம் விதிக்க முடியும். மேலும், அரசு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் வழக்குப் பதிவுசெய்யவும் முடியும்.
சில தொழிற்சாலைகளுக்கும், நிறுவனங்களுக்கும் மட்டும் இதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
டெண்டர்ட் பேலட் பேப்பர்
தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டவர்கள், தேர்தலில் வாக்களிக்க முடியாது. மற்றபடி இந்திய குடியுரிமை பெற்ற அனைவருமே வாக்களிக்கத் தகுதியானவர்கள்தான்.
நாம் வாக்குச்சாவடிக்குச் செல்லுமுன் நமது வாக்கை வேறு யாராவது செலுத்தி விட்டது தெரிய வந்தால், இதுகுறித்து அந்த வாக்குச் சாவடியின் தலைமை அதிகாரியிடம் புகார் அளிக்கலாம். பின் அதற்கென உள்ள கோரிப் பெறப்பட்ட வாக்குச் சீட்டுகளில் (Tendered Ballot Paper) வாக்களிக்கலாம். இது தனியாக ஒரு உறையில் வைக்கப்படும்.
மாற்று நபரும் வாக்களிக்கலாம்
ராணுவம் மற்றும் ஆயுதப் படையைச் சேர்ந்தவர்களுக்கு, அவர்களுக்குப் பதில் வேறொருவர் அவரது வாக்கைப் பதிவு செய்யும் வசதி நமது நாட்டில் உள்ளது. அதற்கான அத்தாட்சிக் கடிதத்தைப் பெற்று, பதிவுசெய்து, தேர்தல் தினத்தன்று அந்த மாற்று நபர் வாக்களிக்கலாம். அவருக்கு ஆள்காட்டி விரலுக்குப் பதிலாக நடுவிரலில் மை வைக்கப்படும்.
புகார் அளிக்கலாம்
வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை வாக்காளர்கள் அழுத்த வேண்டும். அப்போது பீப் என்ற ஒலி ஏற்பட்டால், உங்கள் வாக்கு பதிவாகிவிட்டதாக அர்த்தம். அருகில் உள்ள VVPAT (வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை) எந்திரத்தில் நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்களோ அவர்களது பெயர், சின்னம் ஆகியவை ஒரு காகிதத்தில் அச்சிடப்பட்டு 7 விநாடிகளுக்குத் தெரியும். இத்துடன் வாக்களிப்பது நிறைவடையும்.
இந்த பீப் சத்தம் வராவிட்டாலோ, விவிபாட் இயந்திரத்தில் எதுவும் தெரியாவிட்டாலோ, உடனடியாக தேர்தல் அலுவலரை அணுகி நாம் இது தொடர்பாக புகார் அளிக்க முடியும்.